Skip to main content

Posts

பார்த்தாயா?

கு லாவியபடியே  என்னைக் கடந்து செல்கிறார்கள் இரு தோழியர். தோள்களை உரசிக் கொண்டு க்ளூக், க்ளூக் என்று சிரித்துக் கொண்டு மெல்ல மெல்ல  நடந்து செல்கிறார்கள். பார்க்காமல் இருக்க இயலாத காட்சி அது எழ  வேண்டிய தருணத்தில்  சரியாக எழுந்த  வயலின் கீற்று போல் அவர் ஆட்காட்டி விரலிரண்டும் ஒரு சேர எழுந்து  தொட்டுக் கோர்க்கின்றன. " பார்த்தாயா"  என்பது போல் எழுந்து கொண்டிருக்கிறது உதயத்தின் புத்தொளி அவர்கள்  அப்படியே நடந்து நடந்து தூரத்தில் மறைகிறார்கள். நெருங்கி வருகிறது ஒரு இனிய துயர்
Recent posts

இசைக் கலைஞன் ‘போல’ ஆவது எப்படி?

பல்லில் பிரஷ் இடும் தாளம் பிரமாதமாக  இருப்பதை இன்றைய அதிகாலையில் அவதானித்தேன். கொஞ்ச நாட்களாக சப்தங்கள் துல்லியமாகியுள்ளன. இசை என்பது ஒழுங்கு படுத்தப்பட்ட சப்தங்கள் என்று  சொல்வார்கள். எந்தச் சப்தத்தைக் கேட்டாலும் அதை ஒழுங்கு செய்ய முடியுமா? என்று தோன்றத் துவங்கியுள்ளது. பெரிய வித்வான்களுக்கு தோன்ற வேண்டிய  சிந்தனை. எனக்கும் தோன்றுகிறது.  சிந்தனைக்கு விவஸ்தையில்லை... முழு கட்டுரையை வாசிக்க:  https://akazhonline.com/?p=7167 நன்றி:  அகழ்

தத்துவம்

"வ ந்தவர் என்றால்  சென்றிட வேண்டும்" என்பது ஒரு சிறிய, பெரிய, நடுத்தரமான  நல்ல தத்துவம். ஆகவே அதில் வருந்த ஒன்றுமில்லை. நானும் நீ வருவதற்கு முன்பிருந்த நானிற்கே  போய் விடுகிறேன் இந்த டேபிளை  பழைய இடத்திலேயே  மாற்றி வையேன்   என் கண்மணி ? சின்ன வேலைதானே... நான் கூட ஒரு கை பிடிக்கிறேன்

தொங்கும் பாடல்கள்

  பு லரிப் பொழுதில் காகங்கள்  அமர்ந்தமர்ந்து கரைந்த கரைதல்கள் யாவும் கீதம் என்றாகி இதோ... வந்து விட்டது சரக்கொன்றை!

யாவரும் !

வ றியவர் வீட்டிலிருந்து வறியவர் வீட்டிற்கு பொத்தி எடுத்துச் செல்லப்படும் குழம்புக் குண்டானில் காண்பீர் ஒரு நடனம்! யாம் விழுந்து விழுந்து எழுந்து ஆடும் நடனம் !

டெஸ்கில் தாளமிடும் பையன்கள்

  உ ங்களுக்கு  டெஸ்கில் தாளமிடும்  அந்தப்  பையனை  நினைவிருக்கிறதா? அவன் ஒவ்வொரு வகுப்பிலும் உண்டு பெரும்பாலும்  கடைசி பெஞ்சில்  ஒளிந்து கொண்டு டெஸ்கில்  தாளமிடும் பையன் என்றொருவன்  இருந்தால் அவனுக்குக்  காதலி என்றொருத்தி கட்டாயம் இருப்பாள் மதிப்பெண் அட்டை வழங்கப்படும் நாட்களில் எல்லா மதிப்பெண்களையும் ஒன்றாக்க வேண்டி அவர்கள் கட்டாயம்  இசைப்பார்கள் டெஸ்கில் தாளமிடும் பையன்கள் டிரம்ஸ்சைத்  தொடாமல் பறையைத் தொடாமல் தாளத்தைத் தொட்டார்கள் பிறகு அவர்கள் தாளத்திலிருந்து எழுந்து கல்லூரிக்குப் போனார்கள் அலுவலகம் போனார்கள் வீட்டுக்குப் போனார்கள் ஷமத்துக்குப்  போனார்கள் தந்தைக்குப் போனார்கள் டெஸ்கில் தாளமிட்ட பையன்கள் டெஸ்கில் தாளமிடும் பையன்களைக் காண்கிறார்கள் ஒரு நினைவும்  இல்லாமல்

கடவுள் இருக்கிறாரா?

ஒ வ்வொரு புலரியிலும் சிரத்தையொடு மலர் கொய்து  கடவுள்களை அலங்கரிக்கிறாள் ஒரு வனிதை அவளுக்கு கனவுகள் இல்லை கண்ணீர் இல்லை பயமும் பக்தியும் கூட இல்லை. இந்த உலகில் மலர்கள் இருக்கின்றன என்பது தவிர அவளுக்கு  வேறொன்றுமில்லை