Skip to main content

இரண்டு கவிதைகள்


இந்த முறை சுவர்ணலதா சரியாகப் பாடவில்லை.

அவன் வேண்டுவது ஒரு பிரதி.

15/01/2009 ன் பிரதி.

அதாவது 15/01/2010 என்கிற வெள்ளைத்தாளில்

15/01/2009 ன் பிரதி.


அந்த நாளின் அதே ஆடையை

முன்பே தாயார் செய்து வைத்திருந்தான்.

அன்று போலவே லேசான தாடியை உருவாக்கியிருந்தான்.

அறுந்து போன அந்த செருப்புக்கு பதிலாக

அதே ரகத்தின் புதிய செருப்பை அணிந்திருந்தான்.

அதே பேருந்தில் ஏறி

அதே எண் கொண்ட இருக்கையில் அமர்ந்து

அப்படியே தலை சாய்த்து

அதே பாடலைக் கேட்டான்.


முன்னிருக்கையில் ஒரு சிறுமி அழுதுகொண்டிருந்தாள்.

அவள் தகப்பன் அவளிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான்.

அவள் அன்றைப் போலவே ஒரு நீல நிற பலூனைக் கேட்டாள்.

அவனும் அதையே தான் வாங்கித்தந்தான்.

ஆனால் இதில்லை என்று அவள் மறுத்துக்கொண்டிருந்தாள்.

அவன்

அதான் பாப்பா இது

அதான் பாப்பா இது என்று தேற்றிக்கொண்டிருக்க

அவள் அதில்லை அதில்லை என்று அழுது கொண்டிருக்கிறாள்

  • .

அது பசுவனத்துள் தொங்கும் ஒரு வெள்ளருவி

குரங்குகள் குவிந்திருக்கும் மலைவெளி.

மரங்களின் முடியேறி, அடிசறுக்கியாடுகின்றன அவைகள்

களிப்பின் மது குடித்து.

களித்து களித்து

மரத்தை களிப்பு மரமாக்கி

மலையை களிப்பு மலையாக்குகின்றன.

இப்படியாக களிப்பை ஒரு குரங்கென்று கொண்டால்

அன்று மூன்று குரங்குகள் குதியாளமிட்டன அங்கு.

ஒரு குரங்கு இவன்.

இன்னொன்று இவன் தோழி.

மற்றொன்று இவன் தோழன்.

ஒரு யோசனையும் மூடிக்கொள்ளாது

நாள் முழுக்க திறந்துகிடந்தன அந்த முகங்கள்.

அவர்கள் அன்றைய வெள்ளருவிக்கு

மகிழ்வருவி என்று பெயர்சூட்டினர்.

மகிழ்வருவி மூவரையும் ஒன்றாக அணைத்துக் கொண்டது.


இன்று கொள்ளை யோசனைகளால்

மூடிக்கிடக்கும் இவன் முகம்

யோசனைகளற்ற அந்த கணத்தை நோக்கி ஓடுகிறது.

மகிழ்வருவிக்குத்தான் போகிறது இப்பேருந்து.

அதாவது 15/01/2009 ன் மகிழ்வருவிக்கு.


அவனுக்கு தான் அன்று அணிந்திருந்தது

இந்த ஆடையா என்று சந்தேகம் வந்துவிட்டது

அன்றைய வெயில் இப்படி முறைத்துக் கொண்டிருக்க வில்லை.

அதற்கு அழகான சின்னஞ்சிறு கண்கள்.

இன்றைக்கு வழித்தடங்களில் ஒரு சிறுவனும் கைஅசைக்கவில்லை.

பக்கத்து இருக்கை காலியாயில்லை.

இந்த முறை சுவர்ணலதா சரியாகப் பாடவில்லை.

'' கேட்டு கேட்டு கிறங்க இயலவில்லை".

"கடல் தெரியவேயில்லை."

அந்த மரத்தடியில் ஒருவரும் காத்திருக்க வில்லை.

அவளை அவன் காதலன் அனுமதித்திருக்கவில்லை.

தோழனின் குழந்தைக்கு திடீரென உடல் நலமில்லை.


இருவராகவும் நானே இருப்பேன் என்று சொல்லிவிட்டு

ஒரு கோப நடை நடந்து போனான் அருவி நோக்கி.

அருவிக்கு அடியில் நின்று குளிப்பவன் போல் அல்ல

அருவிக்குள் குதிப்பவன் போல் இருந்தது அவன் முகம்

அம்முகத்தில் திடீரென ஒரு பெருஞ்சலனம்

பிறகு நிச்சலனம்

அங்கு நின்று கொண்டிருந்த

எச்சரிக்கைப்பலகை ஒன்று சொன்னது

“இவ்வருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது... “


15.01.2010 இன் வெள்ளைத்தாள் வெளியே வந்தது

எரிக்கப்பட்டது போல் அது கருத்திருந்தது.





கைக்கிளை, பெருந்திணை, இன்ன பிற

V}

வள்ளுவன் ஒரு நல்ல கவி

என்று அடிக்கடி சொல்லும் தலைவன் தான்

நேற்றவரை

கெட்ட வார்த்தையால் திட்டியது.

1}

தலைவனுக்கு சித்தம் கலங்கி

சீர் அழியும் முன்

எழுதப்பட்டது இக்கவிதை.

அல்லது

இதை எழுதி

சீரழிந்து போனான்.

111}

தலைவியைப் பற்றிய தலைவனின் கூற்றுகள் சில ...

இதமான குளிர், கொத்துமலர் கருங்குழல்,அதிகாலை புள்ளொலி, செந்தழல் கங்கு, ஒட்டுவாரொட்டி,காணாக்கடி,பல்வலி,

நல்மேய்பள், ஊக்கமருந்து, உடனுறைவிடம், இள ரவிக்கதிர், அதிரஸக் கலை,

கலாமயில் ரூபினி, நயவஞ்சகி, அகங்காரி, சொற்களின் நர்த்தகி,

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தரு, வானளந்து நிற்கும் ஐந்தடி,

இன்னொரு கபாலம் கேட்கும் கங்காளி ...

11}

தூக்கம் வருகிறது.

ஆனால் தூங்க இயலவில்லை

பசிக்கிறது

ஆனால் உண்ணமுடியவில்லை

என்கிற குறுஞ்செய்தியை

நள்ளிரவு 2;40 க்கு

தன் நண்பர்களுக்கு அனுப்பினான் தலைவன்

காலையில் அதைக் கண்ட நண்பர்கள்

சத்தமிட்டு சிரித்தனர்.

தலைவன் அழுதான்.

1V}

மனம் ஒரு உறுப்பாக மட்டும் இருந்திருந்தால்

இன்னேரம் அதை வெட்டி

தூர ஏறிந்திருப்பான் தலைவன்.




நன்றி: உயிரெழுத்து- ஜீலை 2010



Comments

i thought post relating to playback singer swarnalathaa ( poraale ponnu thaayi, en veetu totatthil, tirumana malargal..)

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம