என் பள்ளித்தோழன் தன் உள்ளங்கைக்குள் ஐந்து தேன்முட்டாய்களை காட்டிமறைத்த போது நான் முதன்முதலாக என் தலையைத் திருப்பிக்கொண்டேன் என்று நினைவு பிறகு எத்தனையோ முறை வெடுக் வெடுக்கென்று திருப்பிக் கொண்டேன் என் காளைப் பருவம் முழுவதும் வெட்டி வெட்டி இழுத்தேன் எத்தனை திருப்பிற்கும் அறுந்து போகாத என் கழுத்து நரம்பு ஒரு மருத்துவ அதிசயம் நாம் என்னவோ கடவுளை கண்டபடி திட்டுகிறோம் உண்மையில் அவர் ஒரு பேருபகாரி இந்த வாழ்வில் ஒரு முறை கூட தலையைத் திருப்பிக் கொள்ளாதவர் தவிர மற்ற எல்லோரும் ஒரு சேர எழுந்துநின்று அவர்க்கு நன்றி சொல்லுங்கள் அவர் நம் தலையை திருப்பிக் கொள்ளுமாறு வைத்ததின் மூலம் அதை வெடித்துவிடுவதினின்று காத்தார்.