காலையில் எழுந்ததும் டீ குடிக்கப் போவேன்
பாதி டீ வரை சும்மாதான் குடிப்பேன்
பிறகு "மயிரப்புடுங்கியுடு" என்று
இரண்டு வறுக்கிகளை வாங்கி நனைத்துத் தின்பேன்.
ஒரு ஜிலேபியை தின்னும்
அந்த இரண்டு நிமிடங்களில்
அந்த இரண்டு நிமிடங்களில்
இந்த வாழ்வு இனித்துச் சொட்டுகிறது
இனித்துச் சொட்டும் வாழ்வை
விட்டுவிடக் கூடாதென்பதற்காகத்தான்
விட்டுவிடக் கூடாதென்பதற்காகத்தான்
காலையிலும், மதியத்திலும், இரவிலும்
இடையிடையும்
ஜிலேபிகளைத் தின்கிறேன்.
பால்யத்தை மீட்டுரு செய்யவே
கம்பர்கட்டுகளையும், கொடல் வத்தல் பாக்கெட்டுகளையும்
தின்கிறேன்.
ப்ரூ காஃபியும், பூண்டு மிக்சர் தட்டோடும்
நான் மொட்டைமாடியில் அமர்ந்திருக்கையில்
மந்தமாருதம் என்னை விட்டெங்கோடிப்போகும்?
நான் ஒழுங்காக கோப்புகளை பார்க்கவே ஆசைப்படுகிறேன்
இந்த கேண்டீன் முதலாளி மணிக்கொருதரம்
காற்றில் சமோசாவை ஏவி விடுகிறான்
அது என் காதோரம் வந்து
பார்த்து பார்த்து என்னைத்தை கிழித்தாய்
என்று கேட்கிறது
இந்த நாட்டில் எவ்வளவோ சட்டங்கள் இருக்கின்றன
”இருசக்கர வாகனங்களில் காதலர்கள் இறுக்கி அணைத்தபடியே
பயணிக்கலாகாது “ என்று ஒரு சட்டமேனும் இல்லை.
ஒருத்தி தன் காதலனின் கன்னத்துள்
புகுந்து வெளிவந்ததைப் பார்த்த ராத்திரியில் தான்
நான் க்ரில்சிக்கனில் ஒரு முழுக்கோழி தின்றேன்
வாரத்திற்கு மூன்றுதரம்
முழுக்கோழி தின்னவேண்டும் என்பது என் தலையெழுத்து.
கடவுள் என் வலக்கையை
இயந்திரத்தின் இரும்புச்சக்கரங்களுக்கு கொடுத்துவிட்டு
இடக்கையில் இருட்டுக்கடை அல்வாவை வைத்தார்
Comments