Skip to main content

துயரத்தின் கழுத்துச் சதை மார்பில் துவள்கிறது

   காலையில் எழுந்ததும் டீ குடிக்கப் போவேன்
   பாதி டீ வரை சும்மாதான் குடிப்பேன்
   பிறகு  "மயிரப்புடுங்கியுடு"  என்று
   இரண்டு வறுக்கிகளை வாங்கி நனைத்துத் தின்பேன்.
   ஒரு ஜிலேபியை தின்னும் 
  அந்த இரண்டு நிமிடங்களில்
   இந்த வாழ்வு இனித்துச் சொட்டுகிறது
   இனித்துச் சொட்டும் வாழ்வை 
   விட்டுவிடக்  கூடாதென்பதற்காகத்தான்
   காலையிலும், மதியத்திலும், இரவிலும்
   இடையிடையும்
   ஜிலேபிகளைத் தின்கிறேன்.
   பால்யத்தை மீட்டுரு செய்யவே
   கம்பர்கட்டுகளையும், கொடல் வத்தல் பாக்கெட்டுகளையும்
  தின்கிறேன்.
  ப்ரூ காஃபியும், பூண்டு மிக்சர் தட்டோடும்
  நான் மொட்டைமாடியில் அமர்ந்திருக்கையில்
 மந்தமாருதம் என்னை  விட்டெங்கோடிப்போகும்?
 நான் ஒழுங்காக கோப்புகளை பார்க்கவே ஆசைப்படுகிறேன்
 இந்த கேண்டீன் முதலாளி மணிக்கொருதரம்
காற்றில் சமோசாவை ஏவி விடுகிறான்
அது என் காதோரம் வந்து
பார்த்து பார்த்து என்னைத்தை கிழித்தாய்
என்று கேட்கிறது
இந்த நாட்டில் எவ்வளவோ சட்டங்கள் இருக்கின்றன
”இருசக்கர வாகனங்களில் காதலர்கள் இறுக்கி அணைத்தபடியே
 பயணிக்கலாகாது “ என்று ஒரு சட்டமேனும் இல்லை.
ஒருத்தி தன் காதலனின் கன்னத்துள்
புகுந்து வெளிவந்ததைப் பார்த்த ராத்திரியில் தான்
நான் க்ரில்சிக்கனில் ஒரு முழுக்கோழி தின்றேன்
வாரத்திற்கு மூன்றுதரம்
முழுக்கோழி தின்னவேண்டும் என்பது என் தலையெழுத்து.
கடவுள் என் வலக்கையை
இயந்திரத்தின் இரும்புச்சக்கரங்களுக்கு கொடுத்துவிட்டு
இடக்கையில் இருட்டுக்கடை அல்வாவை வைத்தார்

Comments

மன்னிக்கவும் இந்தக் கவிதையை எனது முகநூலில் பகிர்ந்துகொண்டதற்கு. நல்ல கவிதை.

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம