Skip to main content

இந்தியா டுடே - பேட்டி

       நான் கலையின் நல்லது கெட்டதுகளோடு வாழ விரும்புகிறேன்.





1. கவிஞர்களே கவிதைக்கு வாசகர்களாக இருப்பதுபோல் தெரிகிறதே? ஏன் கவிதைகள் இந்த வட்டத்தைத் தாண்டிச் செல்லவில்லை?

 வாசகர்கள்தான் எழுத்தாளர்களாக மாறுகிறார்கள். எல்லா எழுத்துக்கும் இது பொருந்தும்.கவிதை வாசகன் தானும் கவிஞன் ஆகிவிட அவசர அவசரமாக ஆசைகொள்வது அதன் எளிய உடலைப் பார்த்து.. அரிய உயிரைப் பார்த்து... இவ்வளவு எளிய உடலில் அவ்வளவு அரியஉயிர் வந்து அமர்ந்திருக்கும் கோலத்தைக் கண்டு...அந்த பரவசத்தை தாளமாட்டாமல்... ஆனால் அத்திருக்கோலம் கூட்டுவது அவ்வளவு சுலபமல்ல என்பதை அவன் எழுதவரும் போது கண்டுகொள்கிறான்.

2.ஒரு பாடகராகவும் இருப்பது உங்கள் கவிதைக்கு எந்த வகையில் வலு சேர்த்திருக்கிறது?

பாடகன் என்றெல்லாம் சொல்லிக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. இசையில் ஆர்வமுடைய அநேகருக்கும் தானும் ஒரு பாடகன்தான் என்கிற நினைப்புண்டு. அந்த நினைப்பு எனக்கு கொஞ்சம் அதிகம் அவ்வளவு தான். மற்றபடி என் தலையாடும் அளவிற்கு குரல் ஆடுவதில்லை என்பது எனக்கே தெரியும். ஆனால் இந்நெடிய வாழ்வை நொண்டிக்கடக்க என்னிடம் இருக்கும் ஒரே வழி என்னை நானே பாடகன் என்று நம்பிக்கொள்வதுதான்.இந்த இசைப்பித்து என்  கவிதைகளுக்கு உதவுகிறதா என்று கேட்டால் ஆம்என்று தான்  சொல்லவேண்டும். அது என் கவிதையின் இசையை ஒழுங்குபடுத்துகிறது.

3. உங்கள் படைப்பு வடிவம் கவிதைதான் என்று முடிவுக்கு வந்தது எப்போது? ஏன்?

 அலைந்து திரியும் மனம்கொண்ட என் மன இயல்புக்கு உகந்த வடிவமாக கவிதைதான் இருக்கிறது.என்னளவில் கவிதைக்கு பேப்பரோ பேனாவோ அவசியமில்லை. எழுத்தாளனாக இருப்பதென்பது பாமுக் சொல்வது போல குமாஸ்தாவாக இருப்பதும்தான்.சில எழுத்தாளர்களின்குறிப்பாக அயல்நாட்டு எழுத்தாளர்கள் -  நேர்காணல்களில்  ‘எப்போது எழுதுவீர்கள்’ ? என்கிற கேள்வி தவறாமல் கேட்கப்படுகிறது. “ அதிகாலை 5:42 க்கு துவங்கி மதியம் 1:03 வரை எழுதுவேன். திரும்பவும் மாலை 4.15 க்கு உட்கார்ந்தால் இரவு 8: 10 வரை எழுதுவேன். திரும்பவும்… “ என்று அவர்கள் பதில் அளிக்கிறார்கள். இந்த சோலி நமக்கு சரிப்பட்டு வராது. கவிதை இந்த அட்டவணைகளுக்குள் அடங்காது. ஏற்கனவே 8 மணி நேரம் அலுவலகத்தில் குமாஸ்தா வேலை தானே பார்க்குறேன் ?
4. எளியு சொற்களில் கவிதை நிகழ்த்தும் மாயத்தை நீங்கள் வந்தடைந்தது எப்படி?

குழப்பமூட்டும் சொற்களால் வசீகரிக்கப்பட்டவர்கள் குழப்பமூட்டும் வரிகளை எழுதுகிறார்கள். நான் எளிமையால் வசீகரிக்கப்பட்டவன். எனவே எளிமையாக எழுத முயல்கிறேன். “ தெளிவுறே அறிந்திடுதல் ; தெளிவுதர மொழிந்திடுதல் என்பது தானே நமது மகாகவியின் வாக்கும்.

5. சமகால கவிஞர்களில் உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள் என்று யாரைச் சொல்வீர்கள்? அதுபோலவே உங்களுக்கு ஆதரசமான முன்னோடி கவிஞர்கள்

 ஆத்மாநாம். சுகுமாரன், மனுஷ்யபுத்திரன், மு.சுயம்புலிங்கம்ஷங்கர்ராம சுப்ரமணியன் ஆகியோரை என் ஆதர்ச முன்னோடிகள் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பாரதி எல்லோருக்குமானவன். சமகால கவிஞர்கள் என்பதை எப்படி அளப்பது என்பதில் எனக்கு குழப்பம் வருகிறது. என்னோடு சேர்ந்து எழுதவந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் முகுந்த்நாகராஜன், இளங்கோ கிருஷ்ணன், தூரன்குணா ஆகியோர் என்னை பொறாமை கொள்ளவைத்த சில கவிதைகளை எழுதியவர்கள் . பொதுவிலிருந்து விலகி வேறொன்றை எழுத முயன்ற இருவேறு வகைமாதிரிகளாக லிபியும், நரனும் என் கவனத்தை ஈர்த்தவர்கள். சமீபத்தில் போகன்சங்கர் கவிதைகள் பிடித்திருக்கிறது.

6 .கவிதையை வாசித்த கணத்தில் அதை எழுதியவருடன் பொருத்திப் பார்ப்பதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்? மற்ற படைப்பு வடிவங்களுக்கு பெரும்பாலும் இது நிகழ்வதில்லையே ?

கவிதை ஏதோ ஒரு இடத்தில் சுயத்துடன் தொடர்புடையதுதான். சுயத்திலிருந்துதான் நல்ல கவிதைகள் பிறக்க முடியும் என்று நம் முன்னோடிகள் நம்பினார்கள். எனக்கும் அந்த நம்பிக்கை உண்டு. ஆனால் சுயம் ஒரு கவிதையில் எங்கு எப்படி கலந்திருக்கிறது என்று கண்டறிவது கடினம். ஒரு வகையில் புனைவெழுத்திலும் சுயம் இயங்கத்தான் செய்கிறது. ஆனால் அங்கு அது சாமர்த்தியமாக ஒளிந்து கொள்கிறது.

7. தமிழ் கவிஞர்களுக்கு பழந்தமிழ் இலக்கிய பரிச்சயம் அவசியமா?

அவசியம் தான். இன்று நீ இயங்கும் மொழியில் உனக்கு முன் என்ன நடந்திருக்கு என்று அறிந்து கொள்வது அவசியம்தானே ?. பழந்தமிழ் இலக்கியங்கள் என்னளவில் சுமையல்ல. அதில் தொழிற்படும் அரசியலை கூர்ந்து நோக்கி இன்றைய அறிவின் சுத்தியால் உடைக்கலாம். உடைக்கக் கூடாது என்றில்லை. ஆனால் அவற்றை ஒட்டுமொத்தமாக புறந்தள்ளுவது மொழிக்குள் இயங்க நினைப்பவனுக்கு நிச்சயம் இழப்பேயாகும். சங்க இலக்கியத்தின் நுட்பமும், பக்தி இலக்கியத்தின் கண்ணீரும் நாம் அவசியம் காணவேண்டியவை தான்.

8. கவிதை குறித்த காத்திரமான உரையாடல்கள் சமகால கவிஞரக்ள் மத்தியில் நடக்கிறதா?

 உரையாடல்கள் நடக்கத்தான் செய்கின்றன. நிறைய விமர்சன கூட்டங்கள் நடக்கின்றன. கவிதையோடு ஆர்வமுடன் கட்டிப்புரளும் சமகால கவிஞர்கள் பலரையும் எனக்குத் தெரியும். ஆனால் ஒட்டுமொத்த கவிஞர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் இவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.

9. படைப்பாளிக்ளாக இருப்பவர்கள் அறத்துடன் இருக்கவேண்டிய அவசமியமில்லாத சூழல் இங்கு நிலவுகிறது. இதுகுறித்து உங்கள் கருத்தென்ன?

  சத்தியமூர்த்தி இசையாகும் போது எழுதுகிறார்அந்தத் தருணத்தில் உள்ளும் புறமும் ஒத்துத்தான் எழுதுகிறார். ஆனால்  நீங்கள் இசையை பார்த்தாயா.. பார்த்தாயா ” ? என்று கேட்டு சத்தியமூர்த்தியை பிரம்பால் விளாசக்கூடாது ? பாவம் சத்திவைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கிறான் ? இங்குதான் எங்கோ கடைத்தெருவுக்கு போய்விட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு போயிருக்கிறார். எப்படியும் வந்துவிடுவார். சற்று பொறுமையாக இருங்கள்.

10 . ஒரு படைப்பாளியின் அகவாழ்விலும் புறவாழ்விலும் எந்தளவுக்கு சுதந்திரம் இருக்கிறது?
 
   புறவாழ்வு குறித்து சொல்ல வேண்டியதில்லை. அகவாழ்விலும் புறத்தின் எச்சில் வந்து விழுந்துவிடுகிறது. அந்த நாற்றத்தையும்  சேர்த்துக்கொண்டு தான்  அகவாழ்வு என்று நாம் நம்பும் ஒன்றை விடாப்பிடியாக வாழவேண்டியிருக்கிறது.


            11. கவிஞர் இசையின் ஒரு நாள் எப்படி இருக்கும்?

ஒரு கவிஞனின் ஒரு நாள் எப்படி இருக்கும் என்று கேட்க நினைத்த உங்கள் நல்லெண்ணத்திற்கு நன்றி தோழர். ஆனால் நீங்கள் இதைவிட ஈஸியான கேள்வி எதையாவது கேட்டிருக்கலாம்.


12. நீங்கள் உட்பட இன்று இயங்கிக்கொண்டிருக்கும் படைப்பாளிகள் பலரும் இடதுசாரி இயக்கங்களில் இருந்தவர்களாக இருக்கிறீர்களே?

  ஆமாம்... எனினும் நான் இடதுசாரி இயக்கங்களில் பெரிதாக களமாடியதில்லை. ஆனால் எங்கிருந்து வருகிறீர்கள் என்கிற கேள்விக்கு அப்படித்தான் பதிலளிக்க வேண்டி இருக்கிறது. “ உன் வீட்டைத் தாண்டி ஒரு உலகம்  இருக்கு தம்பி என்று அவர்கள்தான் எனக்கு முதன்முதலாக உணர்த்தியவர்கள்நான் அங்கிருந்து தான் வந்தேன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு சந்தோசமும் பெருமிதமும் உண்டு. நல்ல மனிதர்களான அவர்கள் எனக்கு கெட்ட கவிதைகளை அறிமுகம் செய்து வைத்தார்கள். ஒரு தனிமனிதனாக  அவர்களை விமர்சிக்க எனக்கு யோக்கியதை வந்துவிட்டதாக நான் இந்த ஆயுள்வரை நம்ப மாட்டேன்.  அவர்களுக்கென்று ஒரு நல்லதுகெட்டது உண்டு. ஆனால் நான் கலையின் நல்லது கெட்டதுகளோடு வாழ விரும்புகிறேன்.

    ( இந்தியா டுடே வில் வெளியாகியுள்ள பேட்டியின் முழு வடிவம்-
   தலைப்பு இந்த இடுகையில் மாற்றப்பட்டுள்ளது)
          நன்றி : இந்தியா டுடே  உரையாடல் : கவின்மலர்

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம