2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என்
முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.
அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின்
முடிவு இப்படி இருந்தது..
“ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக
கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” .
இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச்
சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான்
மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது.
இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம்
இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன்
சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.
பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் ,
சினிமாக்காரர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் , பக்திசொற்பொழிவார்கள் என பலரும்
உபயோகிக்கிறார்கள். கம்பன் நிறைய பேச்சாளர்களுக்கு கார் வாங்கித் தந்தது போலவே
பாரதியும் நிறைய பேருக்கு கார் வாங்கித் தந்திருக்கிறார். அவரின் கவிதைகள்
சிலவற்றை மனனம் செய்து ஒப்பித்தாலே போதும், அந்தப் பேச்சில் ரஸக்களையும்,
புத்திக்களையும் ஒருங்கே கூடி விடுகிறது.
இந்தக் களைகளின் வழியாகத் தான் இவர்களை கார் வந்தடைகிறது. ஆனால் பாரதி காரை விரும்பவில்லை. அவர்
சிட்டுக்குருவிகளைப் பார்க்கச்சொன்னார்...
“ சிறிய தானியம் போன்ற மூக்கு ;
சின்னக் கண்கள் ; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து ; அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய
பட்டுப்போர்த்த வயிறு ; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்ததாகாகிய பட்டுப்
போர்த்த முதுகு ; சிறிய தோகை ; துளித் துளிக்கால்கள். “
கார் உருண்டு போவது. பாரதி பறந்து போவதை
விரும்பினார்...
“
பயமும் மானமும் மனிதனுக்குள்ளது போலவே குருவிக்கும் உண்டு. இருந்த போதிலும்
ஷணந்தோறும் மனிதருடைய நெஞ்சைச் செல்லரிப்பது போல அரிக்குங் கவலைத்தொகுதியும் ,
அதனால் ஏற்படும் நோய்த் திரளும் குருவிக்கு இருப்பதாகத் தெரியவில்லை. தெய்வமே ,
எனக்கு இரண்டு சிறகுகள் கொடுக்கமாட்டாயா ? பாழ்பட்ட மனிதர்கூட்டத்தையும், அதன்
கட்டுகளையும் , நோய்களையும் துன்பங்களையும் பொய்களையும் உதறி எறிந்து விட்டு ,
நான் இச்சைப்படி வானத்திலே பறந்து செல்ல மாட்டேனா?”
என்றவர் ஏங்குகிறார்.
சிட்டுக்குருவி , பாரதி,
செல்லம்மா, அரிசிமணிகள், வறுமை இவைகளைக் கோர்த்து நாம் அனைவரும் அறிந்த ஒரு
கதையுண்டு. ஆமாம் இப்போது அது கதையாகிவிட்டது. நாம் ஏற்கனவே அந்தக் கதைக்கு
போதுமான அளவு மூக்கைச் சிந்திவிட்டோம். திரும்பச் சொன்னால் கொட்டாவி வரும்.
எவ்வளவு உக்கிரம் கொண்ட விசயமும் திரும்ப திரும்ப சொன்னால் அது நைந்து பழசாகி
விடுகிறது. நாம் பழையதை விரும்புவதில்லை. பாரதியும் புதியன விரும்பச்
சொன்னார். தன் சொற்கள் சோதிமிக்க நவகவிதையாக
எப்போதும் இருக்க வேண்டும் என்று விரும்பினார். அவர் எண்ணியதே முடிந்தது. அவரின்
அநேக பாடல்களில் இன்றளவும் சோதி குன்றவில்லை. காலத்தின் தூசி அண்டவில்லை. “
பாப்பாப் பாட்டு” கூட இன்றளவும் புதிதுதான்.
“ நீதி, உயர்ந்த
மதி , கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர் “
என்கிறது
அப்பாடலின் ஒரு வரி.
வெறும்
நீதியுணர்வை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது ?
அது ஓயாமல் தளுதளுக்கும். கத்தியை எடுத்துக் குத்தும் (அ) தன்னைத் தானே குத்திக்
கொள்ளும். நீதியற்ற அறிவும் பயனில்லாதது. அபாயகரமானதும் கூட. நமது தேசத்தில் அனேக
புத்திசாலிகள் திருடர்கள் தான். அவர்கள் அதிகாரத்தை அண்டி வாழ்கிறார்கள். அல்லது
புதிய அதிகாரங்களை உண்டு பண்ணுகிறார்கள். டாக்டர்கள் நமது கிட்னியைத்
திருடிக்கொள்கிறார்கள். வக்கீல்கள் நமது வரப்பை மீட்டுத்தர வீட்டை எழுதிக்
கேட்கிறார்கள்.
“ படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான் போவான், ஐயோவென்று போவான் “
என்று
சொன்னான் பாரதி.
எது கல்வி என்பதற்கும் , யார் மேலோர்
என்பதற்கும் பாரதி இந்த இரண்டு வரிகளில் புதிய சாஸ்திரம் ஒன்றை எழுதிக்காட்டினான்.
பாரதி கவிதையில் மட்டும் புதியதை
விரும்பியவர் இல்லை. இசையில், பழக்க வழக்கங்களில், பண்பாட்டில் என எல்லாவற்றிலும்
அவர் புதியதைக் கேட்டார். அவருடைய இந்தக் கேலி எனக்கு ரொம்பவும் பிடித்தது..
“ எந்த ஜில்லாவுக்கு போ. எந்தக் கிராமத்துக்குப்
போ. எந்த வித்வான் வந்தாலும் இதே கதை தான். தமிழ்நாட்டு ஜனங்களுக்கு
இரும்புக்காதாக இருப்பதால் திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப ஏழெட்டுப்
பாட்டுக்களை வருஷக் கணக்காக கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். தோற்காது உள்ள
தேசங்களிலே இந்தத் துன்பத்தை பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் “.
“ நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்:
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம் “
என்றெழுதி வைத்தார்.
அவர் நன்மையும்
அறிவும் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுகொள்ளச் சொன்னார்.
”ஓர் நவீன உண்மை வரும் போது அதை ஆவலோடு அங்கீகரித்துக்
கொள்ளாமல் வெறுப்படைகிறவன் வெளிச்சத்தை கண்டு அஞ்சும் ஆந்தை” என்றார். அவருக்கு
தெரிந்திருந்தது, பதிய கவிதை என்பது புதிய
வாழ்விலிருந்து அல்லது புதிய வாழ்விற்கான ஏக்கத்திலிருந்தே பிறக்க முடியுமென்று.
வெறும் சொல் மட்டும் சுவைபுதிதை உருவாக்கி விடாது. சொல் புதிதும், பொருள் புதிதும்
சேர்ந்தே சுவை புதிதாகிறது.
பாரதியின் கவிதைகளை நான் சத்தியமும்
சங்கீதமும் என்று சொல்வேன். சத்தியத்தின் சங்கீதம் என்று சொல்லலாம். அவருக்கு
எதிலும் மனநடுக்கம இல்லை . எனவே கை நடுக்கமும் இருக்கவில்லை. ஏனெனில் வாணியும்
அவரும் சேர்ந்து செய்த தொழில் அது. பிறகெப்படி மனம் நடுங்கும். கை நடுங்கும். ..
“
செய்யாள் இளியாள் ஸ்ரீதேவி ,
செந்தாமரையிற் சேர்ந்திருப்பாள்
கையாளளென நின் அடியேன்
செய்தொழில்கள் யாவும்
கைகலந்து செய்வாள்; புகழ் சேர் வாணியுனென்னுள்ளே
நின்று
தீங்கவிதை பெய்வாள் “
( விநாயகர் நான்மணிமாலை )
ஆமாம் ஒரு தெய்வம் அவருக்கு கையாள். அது பேனாவில் மை
நிரப்பித் தந்துவிட்டு பக்கத்தில் நின்று விசிறி வீசியது. இன்னொரு தெய்வம் அவர்
அழைப்பிற்குப் பணிந்து நெஞ்சத்திருந்தது. எனவே அவர் தன் சத்தியத்தின் சங்கீதத்தை நடுக்கமறப்
பாடினார். அதன் தர்மாவேசத்தின் முன் நம் எளிய மனம் தான் நடுநடுங்கிப்போகிறது.
பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்.
கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்
மண்மீதுள்ள மக்கள் , பறவைகள்
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவும் என்
வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற் அன்புடன்
இணங்கி வாழ்ந்திடுவே
செய்தல் வேண்டும்
தேவதேவா !
ஞானாகாசத்து நடுவே
நின்று நான்
“ பூமண்டலத்தில்
அன்பும் பொறையும் விளங்குக !
துன்பமும் மிடிமையும் நோவுஞ்சாவும் நீங்கி
சார்ந்தப் பல்லுயிரெலாம் இன்புற்று வாழ்க
என்பேன் !
இதனை நீ திருச்செவி கொண்டு திருவுள மிரங்கி
“ அங்ஙனே யாகுக “ என்பாய் , ஐயனே !
( விநாயகர்
நான்மணிமாலை )
கடமை புரிவார் இன்புறுவார்
என்னும் பண்டைக்கதை பேணோம்
கடமையறியோம் தொழிலறியோம்
கட்டென் பதனை வெட்டென்போம்.
மடமை , சிறுமை , துன்பம் , பொய்
வருத்தம் , நோவு , மற்றிவை போல்
கடமை நினைவுந் தொலைந்திங்கு
களியுற் என்றும் வாழ்குவமே .
( கடமை ).
வெறும் எதுகைக்கும் மோனைக்கும் பிறந்ததல்ல
அவர் வரிகள். ”சாத்திரம் அன்று
சதியென்று கண்டோம்” என்கிற வரியில் இருப்பவை. இரண்டு எளிய “ ச “ னாக்கள்
அல்ல. “ முப்பது கோடியும் வாழ்வோம்- வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் “ என்கிற வரியில்
இருப்பவை மூன்று எளிய “ மூ “ னாக்கள் அல்ல.
இந்தச் சத்தியம் தான் “ கண்ணன் பாட்டு “ முழுக்க கசிந்துருகியது.
ஞானப்பாடல்களில் கனிந்து நின்றது. தேசபக்திப் பாடல்களிலும் , சமூகப் பாடல்களிலும்
சூரத்தனம் காட்டியது.
பாரதி ஒரு சங்கீதக்காரராகவும் இருந்தார்.
இசையில் அவருக்கு ஆழ்ந்த புலமை இருந்தது. அதனாலோ என்னவோ அவர் தன் சொற்களை எழுதி
வைப்பதற்கு பதில் மீட்டி வைத்தார். இந்த மீட்டுதல் அவரின் சாதாரண வரிகளுக்கும் ஒரு
அசாதாரண அழகை தந்து விடுகிறது.
“ உள்ளத்தில்
ஆனந்தக் கனவு பல காட்டல் “ என்கிற வரி உடனடியாக நினைவுக்கு வருகிறது. அவர் தொட்டதையெல்லாம் ஜொலிக்கப் பண்ணினார்.
ஒன்றை எப்படி எங்கு தொட்டால் ஜொலிக்குமோ, அதை அப்படி அங்கு தொட்டார்.
பாரதியின் கவிதைகளில் உணர்ச்சி கொந்தளித்துக்
கிடக்கிறது என்றாலும் அந்த உணர்ச்சிக்கொந்தளிப்பில் கண்களை இறுக
மூடிக்கொண்டவரில்லை அவர். அவர் எல்லாவற்றையும் கண்களை திறந்து பார்த்தார்.
ஆராய்ந்து அறிந்தார். கசந்தாலும் உண்மைகளைப் பேசினார். நன்மையும் அறிவும்
எங்கிருந்தாலும் ஏற்றுக்கொண்டார். தன் ஆயுள் தீரும் வரை ஆங்கிலேயரை விரட்டப்
போரடிய பாரதி இப்படியும் பாடினார்..
“ மற்றுன் நாட்டினோர் வந்ததன் பின்னர்
அகத்தினில் சில புண் ஆறுதலெய்தின.
போர்த்தொகை அடங்கி என் ஏழைப்புத்திரர்
அமைதி பெற் உய்வராயினர். எனவே
பாரதிதேவி
பழமை போல் திருவருள் பொழிதரல் உற்றனள்.
பொருள் செயற்கரிய தொழிற்கணம் பலப்பல தோன்றின. பின்னும்
கொடுமதப் பாவிகள் குறும்பெலாம் அகன்றன.
ஆற்றினிற் பெண்களை எறிவதும்,
இரதத்துருளையிற் பாலரை உயிருடன் மாய்த்தலும்
பெண்டிரை கணவர் தம் பிணத்துடன் எரித்தலும்
எனப் பல தீமைகள் இறந்து பட்டனவால்.
மேற்திசை இருளினை வெருட்டிய
ஞான ஒண் பெருங்கதிரின் ஓரிரு கிரணம்
என்பாலாரின் மீது படுதலுற்றனவே.
ஆயினுமென்ன ?
ஆயிரங்கோடி தொல்லைகள் இன்னும் தொலைந்தனவில்லை.
நல்குரவாதி நவமாந் தொல்லைகள்
ஆயிரம் எனை வந்தடைந்துள நுமரால்.
(வேல்ஸ் இளவரசருக்கு பரத கண்டத்தாய்
நல்வரவு கூறுதல் )
பாரதி
மேல் இன்று வைக்கபடும் விமர்சனம் அவர் ”பாரதிய ஜனதா
பார்ட்டி” என்பது. “
ஹிந்துஸ்தானம் “ என்கிற சொல்லை பாரதி தன் கவிதைகளில் பயன்படுத்தியுள்ளார் தான்.
“ சேதமில்லாத ஹிந்துஸ்தானம் – இதைத்
தெய்வமென்று கும்பிட்டி பாப்பா “
என்று அவர்
பாடினார்..
சிலர் அந்த வரியை மட்டும் தனியே வெட்டி எடுத்து
தனதாக்கிக் கொண்டனர். பாரததேவியைப்
படைத்து அவளுக்கு உருவம் , உடை, நாடு , நகர், ஊர்தி , கொடி என்று சகலத்தையும்
அளித்து ஒரு கடவுளளென கட்டியெழுப்பினார் அவளை.
“
பரிமசை ஊர்வாளல்லள் பாரணைத்தும்
அஞ்சும்
அரிமிசையே ஊர்வாளவள் “
என்று அவளை சிம்மவாகினியாக்கி அழகு பார்த்தார். மதவெறியர்கள் அந்தச்சிங்கத்தை தனது
போஸ்டர்களுக்கு ஓட்டிப்போய்விட்டனர். இன்று பாரதமாதா சிங்கத்தில் இருக்கிற காட்சி
ஒரு மதவாத இலச்சினை போல் ஆகிவிட்டது துரதிருஷ்டவசமாக. ஒரு தனிமனிதனாக அவர் ஹிந்துவாகத்
தான் இருந்தார். ஹிந்துவாகத்தான் மடிந்தார். அதை மறுப்பதற்கில்லை. ஆனால் நெஞ்சில்
சூதின்றி , சிந்தையில் குப்பையின்றி ,மகாகவியை மடக்கிக்காட்டி சீக்கிரம்
அதிபுத்திசாலிகளின் பட்டியலில் இணைந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலின்றி பாரதியை வாசிப்பவர்கள் அவர் ”ஹிந்துஸ்தானம்” என்கிற
சொல்லை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தியத்திற்கு எதிராகத்தான் வைத்தார் என்பதை எளிதில்
கண்டு கொள்வர்.
“ இந்திரன் வச்சிரமோர் பால்- அதில்
எங்கள் துலுக்கர் இளம்பிறையோர் பால் “
என்று தான் அவர் நமது தேசியக் கொடியை
உருவகித்தார். ஹிந்துஸ்தானம் என்கிற சொல்லை அவருக்கு காலம் வழங்கியது. அன்று
இந்தியா என்றொரு தேசமே இல்லை பேசிக்கொண்டார்கள். இந்தியா ஒரு தேசமாக உருவாக முடியாது
என்று வரலாற்றாசிரியர்கள் கருத்து சொன்னார்கள். கேம்பிரிட்ஜில் படித்து விட்டு
இந்தியாவில பணியாற்ற வருபவர்களுக்கு ”இந்தியா
என்றொரு நாடு இப்போது இல்லை. எப்போதும் இருந்ததும் இல்லை “ என்பது தான்
முதலாவதாகவும் முக்கியமானதாகவும் சொல்லித்தரப் பட்டது. இந்நிலையில் இவ்வளவு பெரிய
ஜனத்திரளைச் சேர்த்துக்கட்ட அவருக்கு ஒரு சொல் தேவைப்பட்டது. அதற்கு ”ஹிந்துஸ்தானம்” என்கிற
சொல் இயல்பானதாகவும் பயனுள்ளதாகவும் தோன்றி இருக்க வேண்டும் அவருக்கு. ஆனால்
ஹிந்துஸ்தானம் என்பது முகமதியரையும் இந்தியாவில் இருக்கிற இன்ன பிற மதத்தவரையும்
உள்ளடக்கியதே என்பதை தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் அவர்.
அவர்
சொற்களில் விரக்தி குறைவு. பராசக்தி ஒரு பொன்னுலகத்தை அடிக்கடி அவர் கண்ணில்
காட்டி மறைத்தாள். எனவே உச்சிமீது வானிடிந்து வீழும் போதும் அச்சமில்லை என்றவர்
இருந்தார். ஈனக்கவலைகள் என்று உமிழவும், கவலைத்தொகுதிகள் என்று கேலியிரக்கம்
பேசவும் அவரால் முடிந்தது. அந்த மனத்தால் தான் ”சுதந்திரப்பள்ளு” பாட முடிந்தது . அந்த மனத்திற்குத் தான் ”பாடுபடல் வேண்டா”
என்றெழுதும் தைரியம் வந்தது. பராசக்தி
எல்லாவற்றையும் மாற்றிப் போடுவாள் என்று நிஜமாகவே அவர் நம்பினார். ”சிவன் செத்தாலன்றி மண்மேற் செழுமையுண்டு “ என்றவர்
சத்தியம் செய்தார்.
கண்ணன் என்
அரசனில் இப்படி ஒரு வரி வருகிறது..
“ சக்கரத்தை யெடுப்பதொரு கணம் !
தர்மம் பாரில் தழைத்தல் மறுகணம் !
இக்கணத்தில் இடைக்கணம் ஒன்றுண்டோ ? “
.
தத்துவங்களை
ஞானம் என்று சொன்னால், கலையை ஞானமும் இன்பமும்
என்று சொல்லலாம் . தூணிலே நின்று துரும்பிலே இருப்பதென்றும், ஏகன் அநேகன் என்றும்
, பேதம் அபேதம் என்றும் இறையியலாளர்கள் நீண்ட இரும்புக்கம்பியால் நம் மூளையை குடைய
,
“ காயிலே
புளிப்பதென்ன ?
கண்ணபெருமானே ! – நீ
கனியிலே இனிப்பதென்னே ?
கண்ண பெருமானே !
என்று கண்ணனை நம் நெஞ்சத்துள் இனிப்பாக்கிக்
காட்டினான் பாரதி.
காயிலே புளித்து கனியிலே இனிப்பது என்ன என்று
நமது அறிவியல் இன்னும் முற்றாக சொல்லிவிடவில்லை. அது வரை கடவுளின் இடம்
சாஸ்வதமானது. ஒரு எளிய மனிதனாக நான் கடவுள் இருக்கிறார் என்றே நம்ப
விரும்புகிறேன். இல்லாதிருந்தும் அது இருக்கட்டும். கடவுள் என்ற ஒன்றே இல்லையெனில்,
நான் யாரிடம் போய் மண்டியிடவது ? எவன் என்
அழுகையைக் கேட்பான் ? எந்தக் கால்களின் அடியில் என் தலையை மோதி உடைப்பது ?என்
ரகசியங்களை எந்தக் குப்பைத் தொட்டியில் கொட்டுவது ? யார் என்னை ஓயாது மன்னிப்பது ?
யார் என்னுடைய எல்லா கீழ்மைகளையும் காணாதது போல் நடந்து கொள்வது ? யாருடைய தலையில் என் பாரத்தைப் போடுவது ? யாரை நோக்கி
வசவு வீசுவது ? யாரை எட்டி உதைப்பது ?
கண்ணன் பாட்டை கேட்கையில் ஏன் நம் கண்களில்
நீர் சொரிகிறது. ஏனெனில் அதற்குள் இருப்பது “ டம்மி கடவுள் “ அல்ல. செவிட்டூமையல்ல. அவர் நமக்கான கடவுள். நாம் காண
விரும்பிய கடவுள். ஆழ்வார்கள் கண்ணனை குழந்தையாக்கி பார்த்த போதும் அவர் தெய்வக்
குழந்தையாகவே இருந்தார். நாச்சியார் அவரை காதலனாக வரித்தும் அவர் தெய்வக்காதலனாகவே
இருந்தார். ஆனால் பாரதி அவனுக்கு முழுக்க மனிதரத்தம் பாய்ச்சி நடக்க விட்டான்.
கண்ணன் ஆடினான். ஓடினான். தீராத விளையாட்டுப் பிள்ளையானான். மாடுகன்று
மேய்த்திட்டான். வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்தான். வார்தை தவறி நின்றான்.
தோயும் மதுவானான். துகிலிணை உரியக் கொடுத்து நாணிக் கண்புதைத்தான் .
பெண்களினத்தில் ஒரு பேதையென்றானான்.
கண்ணனின் பிரிவு தாளாது தூது விடும் காதலி இப்படிச் சொல்லி விடுகிறாள்..
“ ஆற்றங்கரையதனில் முன்னமொரு நாள் – எனை
அழைத்துத் தனியிடத்திற் பேசியதெல்லாம்
தூற்றி நகர் முரசு சாற்றுவன் என்றே
சொல்லி வருவையடி தங்கமே தங்கம். “
இது ஒரு மிரட்டல்.. இவள் ஒரு நவீனக்
காதலி.. ஃ போட்டோஸ் . வீடியோஸ் ,
பரிசுப்பொருட்கள், மின்னஞ்சல்கள், காதல் மோடிக்கு கிறுக்காகி நள்ளிரவில் நாம்
அனுப்பிக்கொண்ட குறுஞ்செய்திகள் எல்லாம்
என்னிடம் பத்திரமாக இருக்கிறது. மரியாதையாக வந்துவிடு.. இல்லையேல் கமிஷனர் ஆபிஸ்
போய்விடுவேன் என்று மிரட்டுபவள்..
இந்தத் தூதுப்பாடலில் காதலின் வெவ்வெறு
குணநலன்கள் அலையடிக்கின்றன. தனிமை, ஏக்கம், சரணாகதி, மிரட்டல், விரக்தி, என
வெவ்வேறு உணர்வு நிலைகள் பின்னியிருக்கும் இப்பாடல்,
“
தீர ஒரு சொல்லின்று கேட்டு வந்திட்டால்- பின்பு தெய்வமிருக்குதடி தங்கமே தங்கம் ” என்று கையறுநிலையில் முடிகிறது. கண்ணன் பாட்டை வாசிப்பவர்கள் கண்ணன் , கண்ணம்மா என்கிற
தெய்வாநாமங்கள் பாரதிக்கு ஒரு சாக்கு தான் என்பதையும் , தன் நெஞ்சில் கனன்றுகிடந்த காதலும் கவிதையுமே அவருக்கு பிரதானம் என்பதையும்
எளிதில் கண்டு கொள்வர்.
பாரதியின் தேசபக்திப் பாடல்களிலும், பெண்விடுதலைப்பாடல்களிலும்
போதனைகள் உண்டுதான் என்றாலும் கலையில் போதனையை விரும்பியவரில்லை அவர்...
‘ பொதுவாக நான் கதைகள் எழுதும் போது வெறுமே
கற்பனை நயத்தை கருதி எழுதவது வழக்கமேயன்றி ஏதேனும் ஒரு தர்மத்தைப் போதிக்க
வேண்டுமென்ற நோக்கத்துடன் எழுதும் வழக்கமில்லை. தர்மபோதனைக்கு வியாஸங்கள
எழுதுவானேன்? கதையென்றால் கற்பனைப்
புனைவையே அதில் நான் முதன்மையாக கொள்வேன்.எனினும் என்னையும் மீறியே பெரும்பாலும் கதைகளில் தர்மபோதனைகள் வந்து
நுழைந்து விடுகின்றன “
என்பதே அவர் கட்சி.
பொதுவாக அறிவுரைகளுக்கு நடுங்கும் நாம்
இப்பாடல்களுக்கு அஞ்சி ஓடுவதில்லை. மாறாக நின்று கேட்கிறோம்.ஏனெனில் ஒரு
மிருதங்கத்தை உருட்டுவது போல் தன் சொற்களை உருட்டி அவர் நடத்தும் கச்சேரி இங்கும்
நடக்கிறது. எனவே இதற்கும் நாம் தலையாட்டவே செய்கிறோம்.
பாரதியோடு சேர்ந்து பராசத்தியும் செத்துப்போனாள். நாம்
“ செல்லும் வழி இருட்டு : செல்லும் மனம் இருட்டு “ என்று எழுதத்துவங்கினோம். மனதை
முழுக்க இருட்டுக்குத் தந்தாலும் ஏதேனும் ஒரு மூலையில் வெளிச்சத்திற்கான ஏக்கமும்
நம்பிக்கையும் இருக்கவே செய்கின்றன. அதுதான் இவ்வளவு மூச்சடைப்புகளுக்கு
மத்தியிலும் நம்மை ஜீவிக்கவைக்கிறது. அந்த வெளிச்சத்தை தரவல்ல ஏராளமான
சொற்கள் பாரதியிடம் இருக்கின்றன.
அவர் டப்பிங்குரலில் லட்சியம் பேசியவரல்ல.
டப்பிங்குரலில் பேசாத லட்சியவாதத்தின் மீது நமக்கு புகார்கள் இருக்க நியாயமில்லை. ”விட்டுவிடுதலை ஆகிற கனவு” நம்மில்
இன்றும் தொடர்கிறது. ”சன்னமாக குயில் கூவும் காட்டுவெளியின் காணிநிலத்தில்
மல்லாந்து படுத்துகிடக்கிற ஏகாந்தத்தின் மீதான ஏக்கம்” இன்றும்
குறையவில்லை. ”எமக்குத் தொழில் கவிதை: அதற்குத் தொழிலே பிற “ என்று
நாம் இன்றும் அழுத்திச்சொல்லவேண்டி இருக்கிறது.
”கச்சணிந்த கொங்கை மாதர் கண்களுக்கு” நாம் இன்றும் அஞ்சி நடுங்குவதால், அச்சமில்லை !
அச்சமில்லை ! என்று சொல்லிக்கொள்ள வேண்டி இருக்கிறது. ”பயமெனும் பேய்தனை”
பயந்துகொண்டேனும் அடித்துவிடவே நாம்
விரும்புகிறோம். அழகிகளுக்கு தோழிகளாக
பிறக்கக்கடவது என்று சபிக்கப்பட்ட இனம் “ குழலிலே சூட்டுவேன் என்பான்: என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான்” என்கிற வரியை மடியில் தூக்கி வைத்துக் கொஞ்சவே
செய்யும்.
தமிழ்நாட்டில் இன்று ஆயிரக்கணக்கில் பாரதிகள்
இருக்கிறார்கள். அதில் முக்கால்வாசிப்பேர் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
எப்படியும் கவிஞனாகி விடுவது என்று நான் உறுதியாக முடிவெடுத்தவுடன் அடுத்த
கட்டவேலைகளில் இறங்கினேன்.அடுத்த கட்டவேலையாவது புனைப்பெயர் சூட்டிக்கொள்வது.
புனைப்பெயருக்கும் கவிதைக்கும் ஏதோ ஒரு ரகசியத் தொடர்பிருப்பதாக அப்போது நான்
நம்பினேன். புனைப்பெயர் என்று யோசித்த மறுகணமே எல்லோரையும் போல என்னுள்ளும்
தோன்றியது பாரதியின் பெயர் தான். “ சூரியபாரதி” என்கிற
பெயரில் என்னுடைய கவிதைகள் சில வெகுஜன ஊடகங்களில் பிரசுரம் கண்டன. எங்கு நோக்கினும் பாரதிகள் இருக்கக்கண்டு இதில் எந்த பாரதி நான் என்று எனக்கே குழப்பம்
வரவே, வேறு பெயரைச் சூட்டிக்கொண்டேன். இப்படியாக பாரதி இன்று பல்கிப்பெருகி
இருக்கிறார். தற்போது அவர் உருவையோ சொல்லையோ சந்திக்காமல் ஒரு தமிழன் தன் வாழ்வின்
ஒரு நாளைக்கடப்பது கூட சிரமம்தான் என்று தோன்றுகிறது. நிறைய சொற்கள், வரிகள் நமது புழங்குமொழியுடன் கலந்துவிட்டன. “
நேர்படப்பேசு “ என்பது இன்று பிரபலமான ஒரு டி.வி நிகழ்ச்சி. பல்கலைக்கழகம்,
இலக்கியப் பேரவை, பொதுநல மன்றம் என்று துவங்கி பாரதி மெஸ், பாரதி மெடிக்கல்ஸ், பாரதி அரிசிமண்டி, பாரதி பிரிண்டர்ஸ், பாரதி
சலூன், பாரதி சிட் பண்ட்ஸ், பாரதி பழமுதிர்நிலையம், பாரதி டீ ஸ்டால் என்று அநேக
இடங்களில் முறுக்கு மீசையையும்,
தலைப்பாகையையும் காணமுடிகிறது. ”சிட்பண்டஸ்காரர்கள்” “ பணத்தினைப் பெருக்கு “ என்று
எழுதிவைத்துக்கொள்ள, ஃபிட்னஸ்
சென்டர்காரர்கள் “ ”உடலினை உறுதி செய் “ என்று எழுதிவைத்துக்
கொள்கிறார்கள்.
இன்றும் ஏதேனும்
ஒரு ஆட்டோவின் முதுகில்“நான் வீழ்வேன் என நினைத்தாயோ?” என்கிற
வாசகத்தை காணமுடிகிறது. அவ்வரிதான் அந்த
ஆட்டோவை ஓட்டிப்செல்கிறது போலும் ?. பாரதி
நம் சமூகத்திற்கு ஒரு சொல்லாகவேனும் இன்றும் தேவைப்படுகிறார் என்பதாகத்தான்
இதைப் புரிந்து கொள்ளவேண்டி இருக்கிறது. சேகுவாரவை ரஜினிகாந்தாக்கி அணிந்துகொண்ட
இச்சமூகம் பாரதியை என்னவாக்கி வீதிதோறும் வைத்து வழிபடுகிறது என்பது அச்சமும்
குழப்பகும் தரக்கூடிய கேள்வியே. என்றாலும் ஒரு சிறுகூட்டம் அவரை நெஞ்சில் இருத்தி
இயங்கி வருகிறது. அக்கூட்டம் வளர்ந்து பெறுகவேண்டும் என்பதே நம் ஆசை. பாரதி
தமிழ்கவிதைக்கான, தமிழ்வாழ்விற்கான, சமூகநீதிக்கான அணையாத சோதியாக என்றென்றும்
இருப்பான். அவனை ஏந்துவோம்.
..
தனிமையில் ஏகாந்தம் பிறக்கிறது எனில் , கூட்டில்
சக்தி பிறக்கிறது. பாரதியின் பால் அன்பும் பக்தியும் கொண்டோர் கூடியிருக்கிற இந்த
அவையில் அவரின் கவிதைகள் சிலவற்றை வாய்விட்டுப் படிக்கலாம் என்று நினைக்கிறேன்.
என் வேகமான வாசிப்பில் அதன் அர்த்தம் முழுதும் விளங்காது போனாலும் , சக்தி
விளங்கிவிடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இங்கு சக்தி பிறக்கட்டும் . அவன்
வந்து இறங்கட்டும் .
“ குடுகுடு
குடுகுடு குடுகுடு குடுகுடு
சொல்லடீ சொல்லடீ , மலையாள பகவதீ!
அந்தரி , வீரி , சண்டிகை , சூலி !
குடுகுடு குடுகுடு
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
சாமிமார்க்
கெல்லாம் தைரியம் வளருது ,
தொப்பை சுருங்குது , சுறுசுறுப்ப
விளையுது...
எட்டு லச்சுமியும் ஏறி வளருது,
பயந்தொலையுது , பாவம் தொலையுது,
சாத்திரம் வளருது , சாதி குறையுது,
நேத்திரம் திறக்குது , நியாய்ம் தெரியுது
பழைய பயித்தியம் படீலென்று தெளியுது ,
வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது
சொல்லடீ சக்தி , மலையாள பகவதி,
தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது
மாயையைப் பழித்தல்
எத்தனை கோடி படைகொண்டு
வந்தாலும்
மாயையே- நீ
சித்தத்
தெளிவெனும் தீயின் முன்னிற்பாயோ
மாயையே.
என்னைக்கெடுப்பதற்
கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே – நான்
உன்னைக் கெடுப்பது உறுதி என்றே உணர் மாயையே.
சாகத்துணியிற்
சமுத்திரம் எம்மட்டு மாயையே – இந்தத்
தேகம் பொய் என்றுணர் தீரரை
என் செய்வாய் மாயையே.
என் செய்வாய் மாயையே.
நீதரும் இன்பத்தை
ரேரென்று கொள்வனோ
மாயையே – சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர சாட்சியை மாயையே.
என்னிச்சை
கொண்டுனை எற்றிவிடவல்லேன்
மாயையே – இனி
உன்னிச்சை
கொண்டெனக் கொன்றும் வராதுகாண்
மாயையே.
யார்க்கும் குடியல்லேன்
யானென்ப தோர்ந்தனன்
மாயையே – உன்றன்
போர்க்கஞ்சுவேனோ
பொடியாக்குவேன் உன்னை
மாயையே.
விடுதலைப்பாட்டு
இந்தப் புவிதனில்
வாழு மரங்களும்
இன்ப நறுமலர்ப்
பூஞ்செடிக் கூட்டமும்
அந்தமரங்களைச்
சூழ்ந்த கொடிகளும்
ஒளடத மூலிகை
பூண்டு புல்யாவையும்
எந்தத் தொழில்
செய்து வாழ்வனவோ...
குயில்பாட்டு
கண்டதொரு காட்சி கனவு நனவென்றறியேன்.
எண்ணுதலுஞ் செய்யேன், இருபது பேய் கொண்டவன்
போல்
கண்ணு முகமும் களியேறிக் காமனார்
அம்பு நுனிகள் அகத்தே அழிந்திருக்க,
கொம்புக் குயிலுருவம் கோடி பல கோடியாய்,
ஒன்றே அதுவாய், உலகமெலாம் தோற்றமுற
சென்றே மனைபோந்து சித்தந் தனதின்றி
நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும்
தாளம் படுமோ ? தறிபடுமோ ? யார் படுவார் ?
குயில்பாட்டு
காட்டு நெடுவானம்
கடலெல்லாம் விந்தையெனில்
பாட்டினைப்போல்
ஆச்சர்யம் பாரின்மிசை இல்லையடா
பூதங்களொத்துப்
புதுமைதரல் விந்தையெனில்
நாதங்கள் சேரும்
நயத்தினுக்கு நேராமோ ?
ஆசைதருங் கோடி
அதிசயங்கள் கண்ட்திலே
ஓசைதரு மின்பம்
உவமையிலா இன்பமன்றோ ?
வேய்ங்குழல்
கண்ணன் ஊதிடும்
வேய்ங்குழல் தானடீ
காதிலே யமுது
உள்ளத்தில் நஞ்சு
பண்ணன்தாமடி
பாவையர் வாடப்
பாடி எய்திடும்
அம்படி தோழி
கண்ணன் என் சேவகன்
கூலி மிகக்கேட்பார் கொடுத்ததெல்லாம் தாம் மறப்பார்
வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்
ஏனடா நீ நேற்றைக்கிங்கு விரவில்லை யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்ததென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற் பூதம் வந்ததென்பார்;
பாட்டியார் செத்துவிட்ட பண்ணிரண்டாம் நாளென்பார்;
ஓயாமற் பொய்யுரைப்பார்: ஒன்றுரைக்க வேறு செய்வார்;
தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவார்;
உள்வீட்டுச் செய்தியெலாம் ஊரம் பலத்துரைப்பார்;
எள்வீட்டிலில்லை யென்றால் எங்கும் முரசறைவார்;
சேவகராற்பட்ட சிரமம் மிகவுண்டு கண்டீர்;
சேவகரில்லா
விடிலோ செய்கை நடக்கவில்லை.
இங்கிதனால்
யானும் இடர்மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ
வந்தான், இடைச்சாதி நானென்றான்...
கண்ணன் என் காதலன்
தூண்டிற் புழுவினைப்போல்-வெளியே
சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக -எனது
நெஞ்சத் துடித்த தடீ!
சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக -எனது
நெஞ்சத் துடித்த தடீ!
கூண்டுக் கிளியினைப் போல்-தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம்-மனது
வெறுத்து விட்ட தடீ!
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம்-மனது
வெறுத்து விட்ட தடீ!
பாயின் மிசை
நானும்-தனியே
படுத் திருக்கையிலே,
படுத் திருக்கையிலே,
தாயினைக் கண்டாலும்-சகியே!
சலிப்பு வந்த தடீ!
சலிப்பு வந்த தடீ!
வாயினில்
வந்ததெல்லாம்-சகியே!
வளர்த்து பேசிடுவீர்,
நோயினைப்போல் அஞ்சினேன் – சகியே
உங்கள்
உறவையெல்லாம்.
உணவு செல்லவில்லை;-சகியே!
உறக்கங் கொள்ளவில்லை;
மணம் விரும்பவில்லை;-சகியே!
மலர் பிடிக்கவில்லை;
உறக்கங் கொள்ளவில்லை;
மணம் விரும்பவில்லை;-சகியே!
மலர் பிடிக்கவில்லை;
குண முறுதி யில்லை;-எதிலும்
குழப்பம் வந்த தடீ!
கணமும் உள்ளத்திலே-சுகமே
காணக் கிடைத்த தில்லை.
குழப்பம் வந்த தடீ!
கணமும் உள்ளத்திலே-சுகமே
காணக் கிடைத்த தில்லை.
கனவு கண்டதிலே-ஒருநாள்
கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்க வில்லை-எவனோ
என்னகந் தொட்டு விட்டான்,
வினவக் கண் விழித்தேன்;-சகியே!
மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே -புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடீ!
கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்க வில்லை-எவனோ
என்னகந் தொட்டு விட்டான்,
வினவக் கண் விழித்தேன்;-சகியே!
மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே -புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடீ!
உச்சி குளிர்ந்ததடீ
- சகியே!
உடம்பு நேராச்சு
மச்சிலும் வீடுமெல்லாம்-முன்னைப்போல்
மனத்துக் கொத்ததடீ!
இச்சை பிறந்ததடீ-எதிலும்
இன்பம் விளைந்ததடீ;
அச்ச மொழிந்ததடீ;-சகியே!
அழகு வந்ததடீ!
உடம்பு நேராச்சு
மச்சிலும் வீடுமெல்லாம்-முன்னைப்போல்
மனத்துக் கொத்ததடீ!
இச்சை பிறந்ததடீ-எதிலும்
இன்பம் விளைந்ததடீ;
அச்ச மொழிந்ததடீ;-சகியே!
அழகு வந்ததடீ!
எண்ணும் பொழுதி லெல்லாம்-அவன்கை
இட்ட இடத்தினி லே
தண்ணென் றிருந்ததடீ!-புதிதோர்
சாந்தி பிறந்ததடீ!
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்;-அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் -அங்ஙனே
கண்ணின் முன் நின்றதடீ!
இட்ட இடத்தினி லே
தண்ணென் றிருந்ததடீ!-புதிதோர்
சாந்தி பிறந்ததடீ!
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்;-அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் -அங்ஙனே
கண்ணின் முன் நின்றதடீ!
பாஞ்சாலிசபதம் - துகிலுரிதல் காட்சி
வையங்
காத்திடுவாய்- கண்ணா
மணிவண்ணா, என்றன்
மனச்சுடரே
ஐய, நின்பத மலரே – சரண்.
ஹரி, ஹரி, ஹரி,
ஹரி, ஹரி ! என்றாள்.
பொய்யர் தம்
துயரினைப்போல் – நல்ல
புண்ணியவாளர் தம்
புகழினைப் போல்,
தையலர் கருணையைப்
போல் – கடல்
சலசலத்
தெறிந்திடும் அலைகளைப் போல்
பெண் ஒளி
வாழ்த்திடுவார் – அந்த பெருமக்கள்
செல்வத்தின்
பெருகுதல் போல்
கண்ணபிரான்
அருளால் – தம்பி
கழற்றிடக்
கழற்றிடத் துணி புதிதாய்
வண்ணப் பொற்
சேலைகளாம்- அவை
வளர்ந்தன,
வளர்ந்தன, வளர்ந்தன வே !
எண்ணத்திலடங்காவோ –
அவை
எத்தனை எத்தனை
நிறத்தனவோ !
ஞாயிறு – வசனகவிதை
ஞாயிறே,இருளை என்ன
செய்துவிட்டாய்?
ஓட்டினாயா?கொன்றாயா? விழுங்கிவிட்டாயா?
கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால்
மறைத்துவிட்டாயா?
இருள் நினக்குப் பகையா?
இருள் நின் உணவுப் பொருளா?
அது நின் காதலியா?
இரவெல்லாம் நின்னைக் காணாத மயக்கத்தால்
இருண்டிருந்ததா?
நின்னைக் கண்டவுடன்
நின்னொளி தானுங்கொண்டு நின்னைக் கலந்துவிட்டதா?
நீங்கள் இருவரும் ஒருதாய் வயிற்றுக் குழந்தைகளா?
முன்னும் பின்னுமாக வந்து உலகத்தைக் காக்கும்படி
உங்கள் தாய் ஏவி யிருக்கிறாளா?
உங்களுக்கு மரண மில்லையா? நீங்கள் அமுதமா?
உங்களைப்
புகழ்கின்றேன்,
ஞாயிறே,உன்னைப் புகழ்கின்றேன்.
ஞாயிறே,உன்னைப் புகழ்கின்றேன்.
ஸர்வமத ஸமரசம்
பாரான உடம்பினிலே
மயிர்களைப் போல்
பலப்பலவாம் பூண்டு
வரும் இயற்கையாலே;
நேராக மானுடர்தாம்
பிறரைக் கொல்ல
நினையாமல் வாழ்ந்திட்டால்
உழுதல் வேண்டா ;
காரான நிலத்தைப்
போய திருத்த வேண்டா;
கால்வாய்கள்
பாய்ச்சுவதிற் கலகம் வேண்டா;
சீரான மழை
பெய்யும்.
தெய்வம் உண்டு.
சிவன் செத்தாலன்றி
மண்மேற் செழுமையுண்டு.
ஸ்ரீ கபிலர் அகவல்
செல்வம் சிறப்பாமோ
– கல்வி சிறந்ததுவோ,
அறிவு
உயர்ந்ததுவோ?
தொல்புவிக்
கூட்டமெல்லாம் – தன்னில்
தோன்றியதோ ? பிறர்
படைத்ததுவோ ?
எல்லாவகைப்
பிறப்பும் – வெறும்
இயற்கை கொலோ?
தெய்வச்செயலாமோ ?
சொல்லீர் புவியீரே
– இந்தச்
சூழ்ச்சியெலாம்
இங்கு யார் உணர்வார் ?
விதியிட்ட
காலத்திலே- உடல் விழுந்திடுமோ,
அன்றி மரணம்
இங்கோர் விதியற்ற விளையாட்டோ ?
கெட்ட வினைப்பயன்
சாமோ, சாகாதோ ?
பதிவுற்ற
புலனைந்தும் – உயிர்படும் போது என் செயும் ?
எங்கு செல்லும் ?
மதியிட்டு
இங்கிதனை யெல்லாம்- கண்டு
வகுத்துரைப்பார்
பார் மீதுளரோ ?
.................................................................
....................................................................
சோற்றினை உண்பது தான் – இந்தத் தோலுடம்போ ?
உயிர்தான் உண்ணுமோ ?
தோன்றிய பொருள்
கண்டே – இன்பம்
துய்ப்பது விழியோ,
உட்கருத்தோ ?
ஞாயிறு – வசனகவிதை
மழை பெய்கிறது. காற்றடிக்கின்றது .இடி
குமுறுகின்றது.
மின்னல்
வெட்டுகின்றது.
புலவர்களே,மின்னலைப் பாடுவோம் வாருங்கள்.
புலவர்களே,மின்னலைப் பாடுவோம் வாருங்கள்.
மின்னல் ஒளித்தெய்வத்தின் ஒரு லீலை.
ஒளித்தெய்வத்தின் ஒரு தோற்றம்.
அதனை யவனர் வணங்கி ஒளி பெற்றனர்.
மின்னலைத் தொழுகின்றோம்.
அது நம்மறிவை ஒளியுறச் செய்க.
மேகக்குழந்தைகள் மின்னற்பூச் சொரிகின்றன.
மின்சக்தி இல்லாத இடமில்லை.
எல்லாத் தெய்வங்களும் அங்ஙனமே.
கருங்கல்லிலே,வெண்மணலிலே பச்சை இலையிலே செம்மலரிலே நீல மேகத்திலே,காற்றிலே,வரையிலே-எங்கும்
மின்சக்தி உறங்கிக் கிடக்கின்றது.
அதனை போற்றுகின்றோம்.
நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக.
நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக.
நமது நெஞ்சிலே மின்னல் விசிறிப் பாய்க.
நமது வலக்கையிலே மின்னல் தோன்றுக.
நமது பாட்டு மின்னலுடைத்தாகுக.
நமது வாக்கு மின்போல் அடித்திடுக.
( காலச்சுவடு- பனுவல்
இணைந்து நடத்திய “ பாரதி ”93” நிகழ்வில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் )
நன்றி : காலச்சுவடு, பனுவல், தி இந்து பொங்கல் மலர்
Comments