“ வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசாதீர் “
என்கிற கலாஅனுபவம்
நான் இதுவரை “ உலக சினிமா” எதையும் பார்த்ததில்லை.
இது ”எல்லாம் தெரியும் ” என்கிற ஃபேஷனுக்கு எதிரான
”எதுவும் தெரியாது” என்கிற ஃபேஷன் அல்ல. நிஜமாலுமே அந்த அனுபவம் எனக்கு வாய்த்ததில்லை. நானும் அதற்கு முயன்றதில்லை. மொழி அதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். எனக்கு தமிழ் தவிர வேறு மொழிகள் தெரியாது. தமிழ்நாடு உலகத்திற்குள்தான் இருக்கிறது
ஆனாலும் தமிழில் உலகப்படங்கள் வருவதில்லை என்கிறார்கள்.
”திரைக்கு மொழி அவசியமில்லை தம்பி” என்று எத்தனையோ வல்லுனர்கள் என்னிடம்
சொல்லிச் சொல்லி ஓய்ந்து போனார்கள். ஒரு முறை தேவதை போன்ற பெண்னொருத்தி
“ இதையெல்லாம் பார்த்தால் உன் எழுத்து பொலிவுறும் “ என்று சொல்லி சில சி.டி க்களை வலியத்திணித்தாள். தேவதை சொல்லியும் நான் கேட்கவில்லை. அவையெல்லாம் உறை பிரிக்கப்படாமல் பத்திரமாகத் தூங்குகின்றன. இதற்கு சில ”உலகசினிமா வெறியர்களும்” காரணம். அவர்களைப் பார்த்தபின் அந்தப்படங்களைப் பார்க்கத் தோன்றவில்லை. பக்கத்து மாநிலமான மலையாள தேசத்தில் சில நல்ல படங்கள் வருவதாக நண்பர் சாம் அடிக்கடி அறிவுறுத்துவார். நான் ஒரு மலையாளப்பட ரசிகன். ஆனால் அப்படங்கள் “முழு நீளமானவையல்ல”. ஆகவே அவை உலகப்படத்தில் சேர்த்தியல்ல. எனவே இக்கட்டுரை உலகசினிமா ரசிகர்களுக்கானதல்ல.
எனக்கும் மிஷ்கினுக்கும் ஒட்டோ உறவோ கிடையாது. “ சித்திரம் பேசுதடி “ படத்தை இன்னும் பார்க்கவில்லை. “ ஓநாயும் ஆட்டுக்குட்டியும் “ அநேகருக்கும் பிடித்திருந்ததைப் போல எனக்கும் பிடித்திருந்தது அவ்வளவே. ஆனால் மனம் 19- ம் தேதிக்கு ஏங்கத்துவங்கி விட்டது. அந்த ஏக்கத்தை என்னால் துல்லியமாக காணமுடிந்தது. எனக்கே இது விந்தையாகத்தான் இருந்தது. நெடுநாள் கழித்து நண்பர்களைக் காண இருக்கும் இலக்கியக் கூட்டங்களுக்குத் தான் மனம் இப்படி ஏங்குவது வழக்கம். என்னை நானே வினோதமாகப் பார்த்துக் கொண்டேன். ஆனால் 19- ம் தேதி ஒரு மகத்தான நாளாக இருக்கும் என்று உள்ளிருந்து ஒன்று ஓயாமல் சொல்லிக்கொண்டே இருந்தது. அன்று மதியக்காட்சி பார்த்துவிட்டு டூவிலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன் . கண்ணாடி அணியாமல் எதிர்க்காற்றில் பயணம் செய்தால் கண்ணீர் கொட்டுவது இயற்கை தானே ?
§
பிசாசைக் குறித்த என் வியப்பெல்லாம் கலையின் மர்மம்தான் பற்றியது தான் . ஒரு சினிமாவில் இரண்டு பேர் காதலித்துக்கொள்கிறார்கள்.கட்டித்தழுவிக்கொள்கிறார்கள். உதட்டை கவ்விக்கொள்கிறார்கள். பிளேடால் கையை கீறிக்கொள்கிறார்கள். ஒன்றாக பள்ளத்தாக்கில் குதித்துச் சாகிறார்கள். நாம் சடவு முறிக்கிறோம். தயவு செய்து பாப்கார்ன் பாக்கெட்டை கைவிடும் படிக்கு அதன் இயக்குனர் நம்மிடம் மன்றாடுகிறார். நாம் அவரை பாவமாகப் பார்க்கிறோம். இன்னொரு சினிமாவில் நாயகி நாயகனை அரைவினாடி பார்க்கிறாள். நாயகன் நாயகியை இரத்தம் சிந்திய ”கிடந்த கோலத்தில்” காண்கிறான். நாயகி நாயகனின் கையை ஒரு முறை பற்றிவிட்டு இறந்து போகிறாள். இதை நம் மனம் காவியம் என்கிறது. கண்ணீர் மல்குகிறது. ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல கொண்டாடவும் செய்கிறது. பிசாசை காதல் காவியம் என்றும் சொல்லலாம். மிஷ்கின் ஒரு கிழவியைப் போல் கதை சொல்கிறார் . கிழவியைப் போல் கதை சொல்ல முதல்தகுதி கேட்பவர் எல்லோரையும் குழந்தைகளாக்கி விடுவது தான். அவள் சொல்வது தான் கதை. எதிர்க்கேள்வி கூடாது. இப்படித்தான் ஒருமுறை ஓநாயின் உடலில் ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்து விட்டது. அதைத் தூக்கி வந்து ஒரு ஆட்டிக்குட்டி வைத்தியம் பார்த்து புல்லட்டைப் பிடுங்கி வெளியே போட்டது. அடுத்த நாள் காலையில் அந்த ஓநாயைக் காணவில்லை என்று கதை விட்டார். நாம் அதை வாயைப் பிளந்து கொண்டு கேட்டோம். இது போன்ற சாகசங்களெல்லாம் ரஜினி படங்களிலும் உண்டு தான் ஆனால் அவற்றிக்கு நாம் கலைமதிப்பு தருவதில்லை. மிஷ்கின் தன் நாயகியின் குணத்தில் ஒரு கோட்டைக் கூட தீட்டிக்காட்டாமல் அவள் ஒரு ”பெருங்கருணைக்காரி”… சரியா? என்று கேட்கிறார். அதற்கு என்ன அத்தாட்சி என்று நாம் திருப்பிக் கேட்க அவர் அனுமதிப்பதில்லை. இந்த மெளனம் ஒரு அசாத்திய அழகை இத்திரைப்படத்திற்கு வழங்கி இருக்கிறது. படத்தின் முதல் காட்சிலேயே அந்தப் பெண்ணை நம் எல்லோரையும் காதலிக்க வைத்துவிடுகிறார். நாம் இப்படி காதலில் விழுந்த பிறகு நம் காதலியைக் குறித்து அவர் என்ன சொன்னாலும் ஏற்கிறோம். பொதுவாக மிஷ்கினை வாயாடி என்று சொல்கிறார்கள் . இந்தப் படத்திற்கு பிறகு அவர் இன்னும் கொஞ்சம் வாயாடலாம். அதற்கான சுதந்திரத்தையும், தகுதியையும் பிசாசு அவருக்கு அருளியிருக்கிறது.
படத்தின் முதல்காட்சிலேயே நாயகிக்கு விபத்து நிகழ்கிறது. விபத்துக்குள்ளாகிக் கிடக்கும் முகமல்ல அது. அந்தமுகத்தில் வலியின் அவஸ்தையோ, முனகலின்ஹீனமோ துளிகூடஇல்லை.
தெய்வீகஅழகுடன்,கருணையின்கண்களுடன் அது அப்போதும் மலர்ந்திருக்கிறது. இந்தப்படத்தில் பிரயாகா பிசாசாக வந்து பயமுறுத்தியதைக் காட்டிலும் போட்டோவாக வந்து பயமுறுத்திய காட்சி ஒன்று உண்டு. அந்த அழகு நம் முகத்தில் வந்து அறைகிறது. “ அந்தப் பொண்ணு முகத்த பார்த்தீங்களாடா “ என்கிற சாதாரண வசனம் அது இடம்பெற்ற காட்சியை ஒட்டி காதலின் தேவவசனம் ஆகிவிடுகிறது.
இதுவரை பழிவாங்கத்துடிக்கும் பிசாசையே பார்த்துச்சலித்த நம் கண்கள் மன்னிக்கத்துடிக்கும் பிசாசொன்றைக் காண்பது நிச்சயம் ஒரு
புது அனுபவம்தான். ”அந்தக் குரூர உண்மையை” நோக்கி நாயகன் நகர, நகர கருணையின் ஆத்திரத்தில் மூர்க்கமாகிறது பிசாசு. நாயகனை மேலும் முன்னேற விடாமல் காற்றை அனுப்பி ஆட்டோவை புரட்டிப் போடுவது, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆங்காரமாக பின்னுழுப்பது, பின் அந்த ஆங்காரம் கேவலாக மாறி கால்களைக் கட்டிக் கொள்வது என்று எந்த தெய்வத்தாலும் செய்ய முடியாததை செய்கிறது இப்பிசாசு. தன்னுடைய எல்லா முயற்சிகளும் தோற்றுப்போக காரின்பின்னே அரூபமான கண்ணீருடன் அது அமர்ந்திருக்கும் காட்சி நெஞ்சை விட்டு அகலமாட்டேன் என்கிறது. தன்னை தன் துர்நினைவாக
எஞ்சப்போகும் காரோடு சேர்த்து எரித்துக்கொள்கிறது பிசாசு. காரை எரித்துப்போட்டால் எல்லாம்
எரிந்து விடுமோ முட்டாப் பிசாசே !
பேய்ப்படம் பார்த்துவிட்டு வெளியேறுபவர்கள் அழுத கண்களோடு போவதைப் பார்க்க புதிதாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. ராதாரவி தன் திரைவாழ்வில் எத்தனையோ மகள்களைப் பார்த்திருப்பார். அன்புத்தந்தையாக நடித்து நடித்து அவருக்குச் சலித்துப் போயிருக்கும். அவர் இதற்கு முன்பும் இப்படி எத்தனையோ முறை ”தொப்பென்று’ கீழே விழுந்திருக்கிறார். அப்போதெல்லாம் நாம் அசையாதிருந்தோம். ஆனால் இந்த முறை அவர் விழுந்ததற்கு ஊர்கூடி அழுகிறது. “ அநாதை.. அநாதை..” என்றவர் புலம்பித்துடிக்க அவரைக் கட்டித்தேற்ற கீழிறங்கும் பிசாசின் கரங்கள்….அந்தக் கைகளைக் கூட எழுதிவிடலாம். ஆனால் கொஞ்சமாக தன் அப்பனின் கன்னங்களைத் தடவிப்பார்க்கும் அந்த விரல்களை எழுதுவது கடினம்.
இவ்வளவு நுட்பமான மடிப்புகள் இருக்கிற இப்படத்தில் அந்த ”ஓட்டைக்குடத்திற்கு “ வைக்கப்பட்டிருக்கும் “க்ளோசப் “ மட்டும் மோசமாக உறுத்துகிறது. ‘ சுவரில்லாத சித்திரங்கள் “ படத்தில் “ விஷயம் ஊரறிந்து விட்டது “ என்பதைச் சொல்ல குழந்தைகள் வைத்து விளையாடும் கொட்டுமேளத்தைக் காட்டியிருப்பார் பாக்யராஜ். அந்தக் காலம் மலையேறிப் போய்விட்டதல்லவா மிஷ்கின் ? ஆனால் இந்தக்காட்சியை நுட்பமான சினிமா ரசிகர்கள் சிலர்
சிலாகித்துப் பேசினார்கள். ”பச்சை, சிவப்பு” என்கிற அடுத்த காட்சிக்கான ஆரம்பம் அங்கிருந்தே துவங்கி விட்டது என்று சொன்னார்கள்.
இப்படி ஏமாந்து போனேனே என்று வெட்கமாகத்தான்
இருந்தது. ஆனாலும் சிவப்பு தாவணியின் இடுப்பில் பச்சைகுடம் என்பதை வியக்கும் என் மனம் அதை ஒழுகவிட்டதை இப்போதும் ஏற்கமறுக்கிறது.
”சப்-வே” யில் வாசிக்கப்படும் வயலின் உச்சத்திலேறி முற்றும் தருணத்தில் என்னவோ ஒரு கேள்வி கேட்கிறது ? ”வயலினே.. ஏதாவது சின்னக் கேள்வியாய் கேளேன்.. இவ்வளவு பெரிய கேள்விக்கு ஓர் அற்ப மானுடன் என்ன பதிலளிப்பான் ?
பிசாசு பியர்பாட்டிலை உடைக்கிறது.. சிகரெட்பாக்கெட்டை பறித்துப் போகிறது.. ஆனால் அக்காட்சிகள் நம் நெஞ்சோடுபேசுவது “ புகை பிடிக்காதீர்” “மது அருந்தாதீர்” போன்ற ஒழுக்க வசனங்களையல்ல என்பது என் துணிபு. ”வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசாதீர் “ என்கிற அறிவுரையும் படத்தில் உண்டு. அதுவும் படத்தின் மையத்தில். இருந்தும் அப்படி ஒன்றிருப்பதையே நம் கவனத்தில் இருந்து மறைத்திருப்பதை ” கலைவித்தை” என்று சொல்லலாம்.
பொதுவாக பியர்பாட்டிலை உடைத்துப்போடும் பிசாசை நமக்குப் பிடிக்காதல்லவா ? பிறகேன் நாமிதை இப்படி சீராட்டுகிறோம் ? என்ன தான் நடக்கிறது கலையில் ?
( அந்திமழை - ஜனவரி -2015 இதழில் வந்த கட்டுரையின் முழு வடிவம்)
நன்றி :அந்திமழை - ஜனவரி -2015
Comments