இந்தாருங்கள், ஓர் உன்னதம் என்று
என்னிடம் அவர் நீட்டிக்காட்ட
நானதை நுணுகிப்பார்த்து
“யுரேகா.. யுரேகா… “ என்று
வெற்றிக்களிப்பில் கூச்சிலிட்டேன்.
அங்கே பாருங்கள், ஓர் உன்னதம் என்று
அவரெனக்கு சுட்டிக்காட்ட
நானதை கூர்ந்து நோக்கி
“யுரேகா.. யுரேகா… “ என்று
மகிழ்ச்சியில் கெக்கலித்தேன்.
வேறெங்கும் போக வேண்டாம்..
உங்கள் பக்கத்தில் பாருங்கள், ஓர் அதிஉன்னதம்
என்றவர் முகஞ் சிவந்து சீறி வர
“யுரேகா.. யுரேகா… “
என்று நான்
பொறுமையாய் முணுமுணுத்தேன்.
ஐயா,
ஓட்டை இல்லாததென்று வையத்தில் ஏதுமில்லை
சரிதான் விடுங்கள் என்றார்.
உன்னதங்களைக் கட்டிக்கொண்டு அவரழுவதென்றும்
ஓட்டைகளைக் கட்டிக்கொண்டு நானழுவதென்றும்
சமரசம் கண்டது சர்ச்சை.
நன்றி: காலச்சுவடு - பிப்ரவரி-2015
Comments