Skip to main content

கவி – கவிதை – கலகம் - கலப்படம்: சில அடிப்படை குழப்பங்கள்



              இது என்னுடைய கட்டுரை. எனவே இவை என்னுடைய சந்தேகங்களும் , குழப்பங்களுமாகும். இதே குழப்பமும் சந்தேகமும் கொண்ட ஒரு வாசகன் இயல்பாக இக்கட்டுரையுடன் இணைந்து கொள்கிறான். நம் கிறுக்கு தெளிய மேற்கொள்ளப்படும் இச்செயலின் முடிவில் நம் தலை மேலும் வீங்கிவிடவும் வாய்ப்புண்டு. ஏனெனில், இப்பயணத்தின் வழிகாட்டும் பலகைகள் அவ்வளவு நேர்மையானவையாக இல்லை. இதன் திசைகள் எப்போதும் சுழற்சியில் இருக்கின்றன. இப்போது நாம் கிழக்கு திசை நோக்கி பயணிக்க வேண்டும். எனவே மேற்குஎன்று குறிக்கப்பட்டிருக்கிற பாதையின் வழியே தந்திரமாக நமது பயணத்தை துவங்கலாம்.
           கலை தன் சோதிப்ரகாசத்தைநமக்கு காட்டி மறைக்கிறது. மானுட வாழ்வின் பொற்கணம் ஒன்றை ஏந்தி நம் உயிர் தளும்பி வழிகிறது. கடவுளைக் காண கடுந்தவம் புரியும் ஒருவன் கண்ட மாத்திரத்தில் கண்களை மூடிக்கொள்கிறான். அப்படி கண்களை மூடிக்கொள்ள செய்வதன் பெயரே கடவுள். நாம் அதைப் பார்க்க முடியாது. அதனூடே பேச முடியாது. மாறாக, அதன் சோதியும் , ப்ரகாசமும் எங்கிருந்து வருகிறது என்று பார்த்து விடலாம் என்று கிளம்பிய பலரும் ஒரு அதிகாலையில் இரத்தம் கக்கிக் கிடந்திருக்கிறார்கள். இரத்தம் கக்கிச் சாக துணிந்தவர்கள் என்னோடு வரலாம்.

   கவிதை என்றால் என்ன என்பது பலநூறு பதில்கள் உலவும் ஒரு அதரப்பழசான கேள்விதான். ஆனால்  அந்த பல நூறு பதில்களும் கவிதையை மேலும் மர்மமாக்குகின்றன. மேலும் இளமையாக்குகின்றன. பலநூறு பதில்கள் இருக்கும் ஒரு கேள்வியின் அதிகாரம் சற்று பெரியதுதான்.  “ கவிதை என்பது …. “ என்று துவங்கும் ஒரு வரியின் முன்னே ஒரு கவிதை வாசகன் பெரும் பரபரப்படைந்து விடுகிறான். தன் எல்லா கண்களையும் திறந்து வைத்து அவன் அந்த வரியையே உற்றுப்பார்க்கிறான். பிறகு ஏமாற்றமடைகிறான்.  “ கவிதை பொதுமக்களின் ரொட்டி என்கிற ஒரு கூற்றை முகநூலில் பார்த்தேன். நண்பன் வெய்யில் தன் பக்கத்தில் இதை பகிர்ந்திருந்தான். படித்த மாத்திரத்தில் பிடித்துப் போனது. கொஞ்சம் பரவசமாக கூட இருந்தது. ஆனால் கொஞ்சம் நிதானமாக யோசித்தால்  குழப்பங்கள் துவங்கிவிடுகின்றன. இந்த வாசகத்தின் முன்னும் பின்னும் அறிஞர் என்ன சொல்லியிருந்தார் என்பது எனக்கு தெரியாது.ஆனால் இக்கூற்றை மட்டும் வைத்து யோசித்தால் இதில் என்னவோ பிழை இருப்பதாகவே தோன்றுகிறது. எல்லோருக்கும் ரொட்டியை உறுதிபடுத்த முடியாத நாம்,  கவிதையை பொதுமக்களின் ரொட்டி என்று சொல்வது ஜனநாயகத்திற்கு நியாயம் செய்வதாக இல்லை. கவிதைக்கும் நியாயம் செய்வதாக இல்லை.  பசி காதை அடைக்கையில்  ஒரு சொல் நான்காய் எட்டாய் பிரிந்து தெரிகிறது. ரொட்டிக்கு ஈடாக எதையாவது தரமுடியுமெனில் அது ரொட்டியாகவே தான் இருக்கமுடியும். ஒரு வேளை கவிதையை ஜனநாயகப்படுத்தும் ஆசையில் இக்கூற்று சொல்லப்பட்டிருக்கலாம். அப்படி செய்ய கவிதை முழு ஜனநாயகமானதும் அல்ல. அது மொழிக்குள் இயங்கும் இன்னொரு மொழி. நமது தேசத்தில் முழு எழுத்தறிவென்பதே இன்னும் சாத்தியமாகிவிடவில்லை.   நமது பொதுமக்கள் முதலில்  மொழியை கற்று, பிறகு இந்த பிரத்யேக மொழியை கற்க வேண்டும் எனும் பட்சத்தில் இக்கூற்று கவர்ச்சிகரமான ஒன்றாக மட்டுமே எஞ்சிவிடுகிறது. இப்படியாக கவிதை பற்றிய மேற்கோள்களால் கவிதையை சரியாக தைக்க இயலவில்லை. எனவே இன்னொருமேற்கோள் பிறக்கிறது.

     இன்றைய கவிதைக்கு இரசமான சொல்லிணைவுகளும், சப்த ஒழுங்கின் அழகுகளும் மாத்திரம் போதுமானதாக இல்லை.அது நவீன மனத்தின் ஒரு விள்ளலைக் கோருகிறது. அப்படியான கவிதையே இன்று சீராட்டப்படுகிறது. அதுவே இன்றைய கவிதையாகிறது. தாய்மை  இங்கு காலகாலமாக கொண்டாடப்படுகிறது. தாய்மண், தாய்நாடு, தாய்மொழி என்று எல்லா விம்முதலுக்கும் நமக்கு தாய் இல்லாமல் ஆகாது. தாய்மையை போற்றி எண்ணற்ற பாடல்கள் புனயைப்பட்டு விட்டன.அளவற்ற கண்ணீர் கொட்டப்பட்டுவிட்டது. ஆனால் இவ்விரு கவிதைகளும் பொருள் புதியன. எனவே நவகவிதை ஆகிவிடுகின்றன.

                           ஒடக்கு

அவள் எனக்கு பசி தீர்த்தவள்
நீ காமம் தீர்த்தவள்

எருமை போல் வளர்ந்த நான்
அவளுக்கு குழந்தை

எனக்கு என்னைப்போலல்லாத
ஒரு பிள்ளை வேண்டும்.

பற்றியெரிகிற தீயைப்
புணர்ந்து அணைக்கிற அன்பு மனைவியே

ஓங்கிய கையை நிறுத்திவிடு
மூச்சுத் திணறுகிறது

சூசகமாய் ஒரு வார்த்தை சொல்

சோற்றில் விஷம் வைத்து
என் அம்மாவைக் கொன்று விடுகிறேன்.

-        என்.டி.ராஜ்குமார் -






  கருணை


அம்மா ரொம்ப அன்பானவள்
ஈ எறும்பு கடித்து விடாமல் வளர்த்தவளல்லவா ?
தேங்காய் துருவிய கொட்டாஞ்சியை
கவிழ்த்துவைப்பாள்.
பால்ருசிக்கு எறும்புகள் மொய்க்க
அடுப்பினுள் போடுவாள்.
எறும்புகள் பொறியும் சத்தத்தை
குற்ற உணர்வில்லாமல் கேட்பாள்.
அவ்வளவு அன்பானவள் அம்மா.

-       கரிகாலன் -





















  இப்போது புதிதாக சொல்லப்படும் ஒன்று தான் கவிதையா ? என்கிற கேள்வி எழுகிறது. ”கவிதை என்பது பிரிதொன்றில்லாத புதுமைஎன்கிற வாசகத்தை ஜெயமோகனின் கட்டுரை ஒன்றில் படித்ததாக நினைவு.ஆனால்  காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் ஒன்றேயே கூட கவி தன் விசேஷ தொடுகையால் கவிதை ஆக்கிவிடுவதை பார்க்கிறோம். உதாரணமாக தமிழில் எண்ணற்ற அழுவாச்சி கவிதைகள் எழுதப்படுகின்றன. முட்டிக்கொள்ள தோதான பாறை கவிதைதான் என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால் அந்த அழுகைக்கு நம் மனம் குலைய மாட்டேன் என்கிறது. மாறாக எரிச்சல் அடைகிறது.சொல்லில் அழுவது ஒரு தனிக்கலை. அப்படி விசேஷமாக  நிகழ்த்தபடும் அழகைகளுக்கு மாத்திரமே கவிதை அந்தஸ்து கிடைக்கிறது. மற்றவை இரக்கமற்று புறந்தள்ளப்படுகின்றன.
    கவிதையை பொதுவாக பாதி திறந்த கதவு என்று சொல்வார்கள்.
அவ் அளவில் திறந்திருக்கும் கதவின் வழியே வெளியேறும் காற்றும் ஒளியும் கலந்தே நல்ல கவிதைகள் பிறக்கின்றன என்பது நம்பிக்கை. எனக்கும் இந்த நம்பிக்கை உண்டு. ஆனால் கவிதை குறித்த இந்தக் கருத்து எல்லா கவிதைகளுக்கும் செல்லுபடியாவதில்லை  என்று காட்டும் கவிதைகளும் உள்ளன. அப்படி ஒரு கவிதை
               

முட்டாள்களிடம் கடவுள் அன்பாய் இருக்கிறார்  என்பது உண்மைதான்


வித்வான் சண்முகசுந்தரம் ஒரு தவில்கலைஞர்
அவர் எல்லோராலும் முட்டாளாக
மதிக்கப்படுபவரென்றால் அது மிகையாகாது.
குறிப்பாக அவரது மூத்த சகோதரர் பாலண்ணன்.
எவ்வளவு நேர்த்தியாக அடித்தாலும்
ஒரு அடி பிந்திவிடுவது ஷண்முகத்தின் வழக்கம்.
அப்போதெல்லாம் பாலண்ணன் லாவகமாக      
நாதஸ்வரத்தால் ஒரு இடியிடிப்பார்.
சிலர் இவரை தனித்தவில் கலைஞர்என்றும்
நகைச்சுவையாக கூறுவதுண்டு.
அன்று மாவட்ட எல்லையில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி.
வாசித்துக்கொண்டிருந்த நூறுவித்வான்களில்
ஸ்ரீமான் ஷண்முகசுந்தரம்
ஒன்று முதலாவதாகயிருந்தார்
அல்லது கடைசியாக இருந்தார்.
நிகழ்ச்சி முடிந்து
செம கடுப்பில்
அவரை அம்போவென கைவிட்டுக்கிளம்பினர்.
தான் ஒரு முட்டாள் என்பதையறியாத
ஷண்முகசுந்தரம்
உண்மையாகவே தனித் தவிலடித்தபடி                                              
நெடுஞ்சாலையில் நடக்கிறார்.
டாரஸ் லாரியில் வந்த கடவுள்
நிறுத்தி
ஏறிக்கொள்கிறீர்களா என்று கேட்டார்.
அப்போது ஸ்ரீமான்
ஷண்முகசுந்தரத்திற்கு பெருமை பிடிபடவில்லை.
  
      
                                 ( கண்டராதித்தன்கல்குதிரை)












    இந்தக் கவிதையில் கதவு முழுக்கவே திறந்து கிடக்கிறது. ஆனாலும் இதை கவிதையில்லை என்று அவ்வளவு எளிதில் நிராகரிக்க இயலவில்லை. இப்படி மேற்கோள்களுக்கு சிக்காமல் கவிதை திமிறி எழும் போது அதன் மேல் ஒரு புகைமூட்டம் படிகிறது. நாம் கவிதை மர்மமானது என்று சொல்லத்துவங்குகிறோம்.கவிதை மர்மமானது என்று சொல்லத்துவங்குவது  அது புனிதமானது என்று சொல்லத்துணிவதின் ஆரம்பம் என்று கருதி பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். இப்படியாக அது புனிதமானவர்களால் புனிதமானவர்களுக்கு எழுதப்படுவது என்றாகிவிடுமோ ? என்கிற ஆதங்கத்தில் அர்த்தம் இருக்கவே செய்கிறது. எனவே கவிதை ஒரு நாளும் புனிதமானதில்லை: ஆனால் மர்மமானது என்கிற புதுக்கோட்பாட்டை உருவாக்கலாமா என்று யோசிக்கிறேன்.

       எழுத்து செயல்பாடு கூட அவ்வளவு துலக்கமானதாக இல்லை. ஒரு தூண்டுதலை நம்பித்தான் கவிஞன் பேனா மூடியை திறக்கிறான். ஆனால் எது போலியான தூண்டுதல், எது வலுவான தூண்டுதல் என்பதை  அவ்வளவு எளிதில் கண்டுகொள்ள முடிவதில்லை. என் அனுபவத்தில், இப்படி ஒரு சொல்லை நம்பி நட்டாற்றில் நின்ற கதைகள் பல உண்டுஒரு விளையாட்டுப் பாவனையில் தொடங்கி எழுதப்பட்ட சில கவிதைகள் சீராட்டப்பட்ட அனுபவமும் உண்டு. கவிஞர் நேசனுடன் ஒரு முறை அவருடைய காத்திரமான கவிதை ஒன்றைக் குறித்து பேசிக்கொண்டிருக்கையில் ஒரு சாதாரண தினத்தந்தி  செய்தியைப்பார்த்து  தான்  அதை எழுதினேன்என்று சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது.” 100 கவிதை எழுதத் தெரிந்தவனுக்கு 101 வது கவிதையை எளிதாக  எழுத முடிந்துவிடுவதில்லை என்கிற தேவதச்சனின் வாசகமும் கூடவே நினைவுக்குவருகிறது. என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஒரு கவிஞன் ஒரு பருவத்தில் எழுதிக்குவிக்கிறான். பிறகு,  என்ன நடந்தது என்று தெரியாமலேயே  இன்னொரு பருவத்தில்  அவன் வற்றி உலர்ந்து போகிறான். எல்லா சொற்களும் அவனை விட்டுவிட்டு தூரத்தே போய்விடுகின்றன...

இடமும் இருப்பும்வெளிவந்து சரியாக மூன்றாண்டுகளுக்குப் பின் இப்போது நீராலானதுவெளிவருகிறது. சில மாதங்கள் முன்புவரை கூட ஒரு புதிய கவிதைத் தொகுதியினை வெளியிடுவதற்கான எந்த ஆயத்தத்தையும் நான் கொண்டிருக்க வில்லை. 1999, 2000 ஆண்டுகளின் மீது மனவறட்சியின் சாப நிழல் படிந்திருந்தது. இக்காலகட்டத்தில் ஒரு சில கவிதைகளையே எழுதினேன். அவை ஈரமற்றிருந்தன. கவிதைக்கான புலனகள் அழிந்து என் படைப்பியக்கத்தின் அந்திமப் பருவத்தை எய்திவிட்டோனா எனத்தோன்றும் படியாக எல்லாமே சலனமற்றுப் போயிருந்தன. என் மொழியின் வழியாக எப்போதும் வெளியேறிக்கொண்டிருப்பவனாக இருந்தேன். தற்செயலாக நான் வர நேர்ந்துவிட்ட ஒவ்வொரு இடத்திலிருந்தும், நாற்காலிகளிலிருந்தும், முடிவுகளிலிருந்தும், உணர்வுகளிலிருந்தும் முடிவில்லாமல் வெளியேறிக்கொண்டேயிருப்பதுதான் எனது எழுத்தின் பயணவழியாக இருந்திருக்கிறது. எழுத முடியாது என்பது வெளியேற முடியாது என்பதையே குறித்தது.

2001 ஆம் ஆண்டில் வேறொரு பருவம் வந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதினேன். இது இதற்கு முன் கடந்த பத்தாண்டுகளில் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கையைவிட அதிகம். ஏதோவொன்று திடிரெனத்  தெறித்தது போலிருந்தது. என்ன நிகழ்கிறது என்று சொல்லத் தெரியாத ஒரு தளத்தில் வேலை செய்வதைவிட அச்சுறுத்துவது ஒன்றுமில்லை. யாரோ ஒரு விளக்கை ஏற்றிவைப்பது போலவும் பிறகு அவர்களே ஊதி அணைத்துவிட்டுப் போவது போலவும் தோன்றும் நிகழ்வில் நான் எங்கே இருக்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ள முடியாதிருக்கிறது. படைப்பு நிலையின் இடையறாத அலைகள் நிரம்பிய  இக்கால கட்டத்தில் சாரமும் உவகையும் மிக்கவனாக இருந்தேன். நிம்மதியின்மைகளை எழுதுகிற சந்தர்ப்பங்களிலும் எழுதிக்கொண்டிருக்கிறோம் என்ற நிம்மதி வெகு ஆழமாக இருந்திருக்கிறது…

             ( மனுஷ்யபுத்திரனின் நீராலானது முன்னுரையில் இருந்து…. )



       ” கவிதை  இன்றியமையாதது, அது எதற்காக என்பது மட்டும் எனக்கு தெரியுமானால்”. என்கிற இன்னொரு மேற்கோளையும்  முகநூலில் பார்க்க முடிந்தது.இந்த மேற்கோள் கவிதை புனிதப்படுத்தவில்லை என்பது தெளிவு. ஆனால் முற்றாக புறக்கணித்துவிடவும் இல்லை.  ”கவிதை வேலைக்காகாதுஎன்று சொல்பவர்கள் கிளம்பிப்போகாமல் ஏன் அதைதே பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள் என்பது நமக்கு விளங்குவதில்லை. கவிதையின் சமூகப்பயன் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பபடுகின்றன. ஒரு பிரச்சனை பற்றிஎரியும் போது இந்த கவிதை என்ன செய்து கொண்டிருக்கிறது என்கிற கேள்வி எழுகிறது. அப்போது அது வாழ்வோடு சம்பந்தமேயற்ற  ஒரு ஆடம்பர பொருள் போன்ற ஏளனத்தோடு நோக்கப்படுகிறது.

ஏன் இப்படி எழுதிக்குவிக்கிறாய்
உனக்கென்ன பைத்தியமா
சொற்களின் மீது அப்படியென்ன மோகம்
……………………………………
…………………………………….

எதை தடுத்து விட முடியும்
இந்த முட்டாள் எழுத்துக்களால்
உன் இனம் நசுக்கப்படுவதை
உன் கடவுள்கள் கொல்லப்படுவதை
உன் மொழி விஷமூட்டப்படுவதை
உன் நிலம் சிதைக்கப்படுவதை
போ
போய் வேறு வேலையைப் பார்
பொருளீட்டு.. புணர்.. சிரி.. மரி..
கவிதையாம் மயிராம்

            ( இளங்கோ கிருஷ்ணன்  )











  ஈழப்போராட்டத்தின் போதும் இந்த கேள்விகள் எழுப்பபட்டன.எழுத்து சமூகத்தில் நிகழ்த்தும் தாக்கம் அவ்வளவு ஸ்தூலமானதல்ல என்று சொல்லப்படுகிறது. அது மானுடகுலத்தின் என்றென்றைக்குமான கீழ்மைகளுடன்  ஓயாது மோதி வருகிறது. இப்படியாக அதன் ஆதார இயல்பே  மானுட விடுதலை என்பது தான். ஈழப்போராட்டத்தின் போது அதை பற்றியெரியச் செய்த கவிதைகள் எதுவும் இங்கு எழுதப்படவில்லை தான். மாறாக குற்றவுணர்வின் பாடல்கள்பெருகி வந்தன. ”குற்றவுணர்வின் பாடல்களால்ஒரு உபயோகமும் இல்லை என்று அவ்வளவு உறுதியாக  சொல்லி விட முடியாது.அப்படியெனில் சித்தாந்தங்களால், புரட்சிகளால், கலகங்களால்,  கட்சிகளால், அரசுகளால், உண்ணா நோன்புகளால், மனிதச்சங்கிலி போராட்டங்களால், கண்டன ஆர்ப்பாட்டங்களால், தீர்மானங்களால், கடையடைப்புகளால், மனித உரிமை ஆணையங்களால், மகத்தான நீதித்துறையால்  கூடத்தான் ஒரு பயனும் இல்லாது போய்விட்டது.ஆனால் எழுத்தின் மீது மட்டும் நீ என்ன புடுங்கினாய் என்கிற கேள்வி மூர்க்கமாக முன்வைக்க படுகிறது. உடனடித்தாக்குதல்  தராத ஒன்று உபயோகமற்றதுஎன்று கருத விட முடியாது.  “ கவிதை அன்றேயும் கொல்லும் : நின்றும் கொல்லும் என்று சுகுமாரன் ஒரு நேர்காணலில் சொன்னது நினைவில் எழுகிறது. இப்படி சொல்லலாம்.. இந்த முறை கவிதைக்கு பதிலாக களத்தில் குதித்தது ஒரு கடிதம். எரிபுகும்முன் முத்துகுமாரால் எழுதப்பட்டு விநியோகிக்கப்பட்ட அந்தக்கடிதம் தமிழின் முக்கியமான கடிதஇலக்கியமாக நிலைபெற்றிருக்கிறது.

   கவிதை vs பிரச்சாரம் என்கிற பிரச்சனையும் ஓயாமல் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. நீ கவிதையின் வழியே என்ன செய்தாலும் அது கவிதையாக இருக்க வேண்டும் என்பது ஒரு நியதி.. நமது    “சமூகப்போராளிகளால் “ மோசமாக வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டது கவிதைதான் என்பது என் எண்ணம். அதுவும் “ ஹைகூ “ என்கிற மினிபுரட்சி தமிழ்க்கவிதையை வந்து தாக்கிய போது, அவர்கள் ஒரு நிமிடம் கூட கவிதையை சும்மா இருக்க விடவில்லை. என்னளவில் கவிதை ஒரு தனி உயிர். அது புரட்சியின் அடிமை சேவகனல்ல. நீங்கள் அதை எவ்வளவு மதிக்கீறீர்களோ அதே அளவு தான் அது உங்கள் புரட்சியை மதிக்கும்.சமீபத்தில் வாசித்த வெய்யிலின் கவிதை ஒன்று தீவிரமான தத்துவ அரசியலை முன்வைத்து பேசுகிறது. கூடவே கவிதையையும் மதிக்கிறது, இல்லை.. இப்படி சொல்லலாம்..அது கவிதையை மதித்து அரசியல் பேசுகிறது.எனவே அது சிறந்ததென சீராட்டப்படுகிறது.. நானும் சீராட்டுகிறேன்..

கொஞ்சம் மனது வைய்யுங்கள் தோழர் ஃப்ராய்ட்!

நான் ஒரு நீண்ட துப்பாக்கியை கனவு கண்டேன்
நிச்சயமாக அது பாலியல் கனவு அல்ல மிஸ்டர் ஃப்ராய்ட்!
ராட்சத இயந்திரங்களால் குடைந்தெடுக்கப்பட்ட
மலைகளின் கொடுந்துளைகள் குறித்த கனவையும்கூட
என் மறையுறுப்போடு நீங்கள் தொடர்பு படுத்தக்கூடும்
தயவுசெய்து
உங்கள் கண்ணாடியை துடைத்துக் கொள்ளுங்கள் டாக்டர் ஃப்ராய்ட்!
என்னிடமிருப்பதிலேயே
பெரும்பிரச்சனைக்குரிய உறுப்பென்றால் அது
எனது இரைப்பைதான்
அரசு எங்களுக்கு பிரமாண்டக் கனவுகளை தந்திருக்கிறதுதான்
அதில் ஒரு துண்டைக்கூட உப்பிட்டு தின்ன இயலாது
தாழ்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்
உங்களால் புரிந்துகொள்ள இயலாது ஆய்வாளர் ஃப்ராய்ட்!
நாங்கள் வயிற்றால்கூட கனவு கண்டிருக்கிறோம்
நான் சாமான்யை
எனக்கு குழந்தைகள் இருக்கின்றன
உங்களிடம் சிறு உதவி வேண்டும் நண்பர் ஃப்ராய்ட்!
ஓர் எளிய நீதிக்காக
சட்டத்திற்கு கேட்காதவாறு
ஐந்து தோட்டாக்களை நான்பயன்படுத்திவிட்டேன்
நீங்கள் மனதுவைத்தால்
தடயங்களேதுமின்றி
அதை ஒரு கனவாக மாற்றிவிடலாம்.

-        வெய்யில் -









  எழுத்து எழுத்தாளனுக்கு என்ன தருகிறது ? அது வெகுஜன பத்திரிக்கையின் தீபாவளிமலரில் ஒரு “ ஸ்டாம் சைஸ் “ போட்டோவை தருகிறது.. அதை விட்டுவிடுவோம். அவன் அட்டைப்படத்திலேயே வந்தாலும் அவனை எப்போதும் பார்க்கும் பத்து பேர்தான் பார்ப்பார்கள். அவன் நிமித்தம் எப்போதும் சண்டையிடும் அதே பத்துபேர் தான் அப்போதும் சண்டையிடுவார்கள். மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்றின் தலைப்பு “ சிறிய புகழுடைய மனிதன் “. நமது எழுத்தாளர்களை இந்தக்கவிதைக்குள் அடக்கலாம். வேண்டுமானால் “ மீச்சிறு புகழுடைய மனிதன் “ என்று மாற்றிச்சொல்லலாம். நண்பர் சாம்ராஜ் ஒரு முறை சொன்னார் ....“ நான் கல்யாண்ஜியுடன் எவ்வளவோ முறை பல்வேறு இடங்களுக்கு போயிருக்கிறேன். புத்தகசந்தை தவிர வேரொறு இடத்தில் ஒரு மனிதன் கூட சார் , நீங்க கல்யாண்ஜி தானே”... என்று கேட்டு வந்ததில்லை “.  50 ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அவருக்கே இதுதான் நிலைமை. அதற்குள் இங்கு எழுத்தாளன் அதிகாரமையம் ஆகிவிட்டான் என்கிற குரல்கள் கேட்கின்றன. நமது நாட்டில் எழுத்தாளனின் அதிகாரம் என்ன என்பது நாமறியாததல்ல. அவனை ஓட ஓட துரத்தியடிப்பார்கள். கட்டிவைத்து உதைப்பார்கள். R.D.O தான் இங்குமூத்த எழுத்தாளர் “ .  எழுத்து சம்பந்தமான எல்லா சிக்கல்களுக்கும் அவர்தான் தீர்ப்பு சொல்வார்.  

    நமது நாட்டில் பிரதமமந்திரிகள், ஜனாதிபதிகள் , கவர்னர்கள், ரானுவ அதிகாரிகள், விஞ்ஞானிகள்,  மென்பொருள் வல்லுனர்கள் , புரட்சிக்காரர்கள், மடலாயங்கள், ஜெபகோபுரங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆயாக்கள், கத்தரிக்காய்கள்,மாட்டு தீவனங்கள்,  டீ கடைகள், சாப்பிங் மால்கள், பெட்டிக்கடைகள், பத்திரிக்கைகள் , தொலைக்காட்சி நிறுவனங்கள். வேட்பாளர்கள் , வாக்காளர்கள்...  என்று எங்கும் எதிலும் ஊழலும் கலப்படமும் நிகழ்ந்துவிட்டன. இவ்வளவு கலப்படங்களுக்கு மத்தியில் வாழும் ஒரு எழுத்தாளன்
 “ சோதி பிழம்பாக “ இருக்க ஒரு வாய்ப்பும் இல்லை. கலப்பட சமூகத்திலிருந்து “ கலப்படஎழுத்தாளன் “ எழுந்து வருகிறான்.

   நமது எழுத்தாளன்  ஒரு இரவுப்பொழுதில் பணிமுடித்து திரும்பிய போது தன் பேடபிளில் இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களைக் கண்டான். அவன் மனைவி என்றுமில்லா வண்ணம் அன்று ஒரு மான்குட்டியின் உற்சாகத்தில் இருந்தாள். தனது ஓட்டுக்காக அளிக்கப்பட்ட 200 ரூபாயில் வாங்கப்பட்ட 5 பொருட்களின் பொட்டலங்களை அவள் குடும்ப பொறுப்பின் பெருமை பொங்க பிரித்துக்காட்டுகிறாள். அவனுடைய 200 ரூபாயையும் அவன் அவளிடம் தருவானாகில் அவளால் இன்னும் 5 பொருட்களை வாங்கமுடியும்.  நமது மானமிகு எழுத்தாளன் இப்பொது என்ன செய்ய போகிறான் ? சுற்றலில் இருக்கும் தர்மசக்கரம் சற்று நின்று பார்க்கிறது. அவன் தண்ணீர் சொம்பை ஓங்கி ஒரு உதை விட்டான். ஒரு சொம்பை ஒடுக்காக்குவதைத் தவிர அவனால் வேறொன்றும் செய்ய இயலாது. பணம் கொடுக்க வந்தவர்கள் அனைவரும் வேறு பிரதேசத்தை சார்ந்தவர்கள்.  உள்ளூர் செயலாளரிடம் சென்று திருப்பி கொடுக்கலாம் தான். எழுத்தாளரும் வீறுகொண்டு கிளம்பவே செய்தார். ஆனால் பெருத்த உடலில் கனத்த மீசை வைத்த செயலரின் ஆகிருதி  சற்றே பயமுறுத்தி விட்டது. அவரைச் சுற்றி எப்போதும் பத்து மனிதர்களும் இரண்டு நாய்களும் இருந்தன.. தவிரவும் கவிஞர் அங்கேயே வாழ்ந்து காவியங்கள் புனைய வேண்டி இருக்கிறது. எனவே அவர் அந்த 200 ரூபாயை  நான்காக முறித்தார். நான்கு ஏழைகளை தேர்ந்தெடுத்தார். அவர்களை சிரிக்க வைத்து அதில் கடவுளைக் கண்டுவிடுவது என்கிற முடிவுக்கு வந்துவிட்டார். இப்படியான நூதனமுறையில் அவர் நீதி வழுவாது நின்றுவிட்டார்.   என்றாலும் ஏற்கனவே வாங்கப்பட்டு விட்ட பொட்டலங்களை என்ன செய்வது ? அதை நிலத்தில் கொட்டினால் அவர் மனைவி அவரை சும்மா விடுவாளா ? போடுகிற கூப்பாடு பக்கத்து வீட்டிற்கு கேட்டால் அவன் பொச்சில் சிரிக்க மாட்டானா ?

           
  இன்று சகலமும் குழம்பிக்கிடக்கிறது.  தர்மமும் அதர்மமும் இழைபின்னிக்கிடக்கின்றன.  முழுமுற்றான நீதி வேண்டாம்.  தோராயமான நீதியே போதும் என்கிற நிலைக்கு நாமும் தள்ளப்பட்டு விட்டோம்.
  " சாத்துல பீ...  அதனால இருத்தாப்ல ஊத்தினேன்.. ”  என்று சொன்னால் வாங்கிக்கொள்ள வேண்டியது தான் . வேறு வழியில்லை. நீதியின் தலையும் அநீதியின் உடலுமாக திரியும் ஒருவரை கத்தி போட்டு எப்படி பிரிப்பது ?  நண்பர்களே எனக்கு இப்போதே தலை சுற்றுகிறது. கண்கள் இருட்டி வருகின்றன. நாடி பலமாக அடிக்கிறது.. வாய் கோணி இழுக்கிறது. என் மேல் நானே ஏவி விட்ட சாத்தானே அப்பாலே போ

                                              
                                                                             நன்றி : கணையாழி - ஏப்ரல் -2015


Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம