“ feel good movies” என்கிற பதத்துடன் கூடவே நினைவில் எழும் படங்களில் பிரதானமானது “மொழி”. பிருத்விராஜின் முகத்திலும், கொஞ்சு தமிழிலும் இயல்பிலேயே ஒரு “feel good “ உண்டு. ஆனால் படத்துக்கு இந்த மென் உணர்வை வழங்கும் காரணி எதுவென்று அவ்வளவு தீர்க்கமாக சொல்ல முடியவில்லை. ஒரு வேளை அது ஒன்றாக இல்லாமல் பலவாக இருக்கலாம். ஒருவர், “ சாலையின் கறுப்பு-வெள்ளை கோடுகளை கீ- போர்டாக்கி ஆடும் நடனத்தில் மகிழ்ந்தாரெனில், இன்னொருவர் அந்த உயர்தர அப்பார்ட்மெண்ட் வீட்டின் கலையழகிலும், அந்த “ bean bag “ –ன் சொகுசிலும்” மயங்கி இருக்கலாம். ஓர் ஊமைப்பெண்... அவளைக் கண்டு காதலுற்று பிரிந்து வருந்தி கடைசியில் சுபமாக கைபிடிக்கும் ஒரு இசைக்கலைஞன்.. இவர்கள் இருவரைப்பற்றிய படம் என்று எளிமையாக சொல்லலாம். அவன் சாதாரண மொழியில் புழங்குபவன் கூட அல்ல, இசையின் மொழியில் புழங்குபவன்.. அவளோ பேசவே முடியாதவள் எனும் போது படத்தின் கனம் கூடுகிறது. அம்மாவையும் தன்னையும் நிராதரவாக விட்டுவிட்டு அப்பா வேரொருத்தியோடு போய்விடும் போது, ஸ்தம்பித்து போகிறாள் நாயகி. + 2 படிக்கும் தன் பையன் சாலை விபத்தில் பலியான 1984 –லேயே ஸ்தம்பித்து நின்று விடுகிறார் ஒரு “professor “. இருவரும் இந்த வாழ்க்கைக்கு எதிராக முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள். படம் முடியும் தறுவாயில் ”பெரிய அழுகைக்குப்” பின் இந்த இருவரும் ஸ்தம்பித்தலில் இருந்து இயக்கத்திற்கு வருகிறார்கள்.மொழி படத்தை இப்படி பார்க்கையில் இன்னும் ரசமாக தோன்றுகிறது.
படத்தில் ஜோதிகா, ப்ரித்வி, பிரகாஷ்ராஜ் அனைவரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ஜோதிகா ரசிகர்கள் கோபித்துக் கொள்வார்களெனினும், என் தனிப்பட்ட ரசனையில் “மொழி” என்றவுடன் நினைவுக்கு வருவது எம்.எஸ்.பாஸ்கரின் முகம்தான். கூடவே “ mark my words “ என்கிற புரபெசர் தனமான வசனமும். முதல் காட்சியில் தொடங்கி படம் முடியும் வரை ரசிக்கும்படியான நகைச்சுவைத்துணுக்குகளை தாராளமாக வைத்துள்ளார் விஜி. கூடவே, படத்தின் கதையோட்டத்திற்கு துணை செய்யும், அதன் மென்மைத்தன்மையை போற்றிப் பாதுகாக்கும் வசனங்களையும் குறிப்பிட வேண்டும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் தனக்கு எந்த மாதிரி மனைவி வேண்டும் என்பது பற்றி நாயகன் நாயகியிடம் உரையாடும் காட்சியின் வசனங்களை சொல்லலாம். அக்காட்சியில் “ அவ என்ன புரிஞ்சிருக்கறவளா இருந்தாவே ...என்னோட இசை அவளுக்கு புரிஞ்சிறும்..” என்று தீர்க்கமாக சொல்கிறார் ப்ரித்வி. இவ்வசனத்தை இந்த வாழ்க்கையின் குளறுபடிகளுக்குள் போட்டு குழப்பிக்கொள்ளாமல் “கேட்க நன்றாக இருக்கிற படியால்” ரசிக்கலாம்.
பாஸ்கரின் பாத்திர படைப்பிற்காகவும், அப்பாத்திரத்தை மைய பாத்திரமான நாயகிக்கு அருகே, அதே அளவு கனத்துடன் படைத்த நேர்த்திக்காகவும் ராதாமோகனுக்கு என் ப்ரியங்கள்.
நன்றி : அந்திமழை- நவம்பர்-2015
Comments