Skip to main content

அன்புள்ள இசை

                                             
         



அன்புள்ள இசை,

      நேற்று உங்களின் ‘ஆட்டுதி அமுதே’ தொகுப்பை வாசித்தேன். முன்னுரையில் நீங்கள் குறிப்பிட்டிருந்தது போல உங்கள் கவிதைகளை வாசிக்கும் போது முகம் மலர்பவர்களில் நானும் ஒருவன்.உங்கள் புனைப்பெயர் உங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.இசையைப் போலவே உங்கள் எழுத்துகளின் வழியே நீங்கள் வாசகனை மலர்த்துகிறீர்கள்.வெறும் மலர்த்தல் மட்டுமல்ல… நான் கவனிக்கத்தவறிய பலவற்றை நேரடியான மொழியில், பகடியான தொனியில் காட்சிப்படுத்துவதுதான் உங்களது தனித்துவம்.பெரும்பாலும் நவீன கவிதைகளை படிக்கும்போது சிறிது நேரத்தில் ஒரு அயற்ச்சி வந்துவிடும்.காரணம்,சிக்கலான படிமங்கள்,குறியீடுகள்,இறுகிய மொழிநடை,புரியாத்தன்மையால் மறுவாசிப்பைக் கோருபவை என்று அவை இருக்கும்.மேலும்,நான் அடிப்படையில் சற்று சோம்பேறி என்பதாலும்,அவசரம் பிடித்தவன் என்பதாலும் என்னதான் கவிதைகள் மீது ஆர்வமும்,வேட்கையும் கொண்டிருந்தாலும் சில சமயங்களில் எரிச்சல் வந்துவிடும்.புரிய மாட்டீங்குதே என்று.ஆனால் உங்கள் கவிதைகள் பெரும்பாலும் முதல் வாசிப்பிலேயே புரிந்து விடுகின்றன.(என்பதால் சிங்கத்தின் சினத்திற்கு நீங்கள் ஆளாகாமல் தப்பிவிட்டீர் புலவரே!!).
   இது என்னுடைய முதல் வாசகர் கடிதம்.ஏனெனில் நான் வாசிப்பில் அதி சின்னப்பயல்.என் வாசிப்பிற்கு ஒரு வயதுதான் ஆகிறது.என்னதான் புரண்டு,கரணம் போட்டு வாசித்தாலும், இப்போதுதான் இலக்கியத்தின் outline என்னவென்றே புலப்பட்டிருக்கிறது.
    உங்களது கவிதைகள் என் சௌந்தர்ய இதழில் புன்னைகையை இழைய வைப்பவை என்றாலும் ,அதிர்வுறச் செய்த ஒரு சில கவிதைகளும் இருக்கின்றன.கெக்கலக்க போட்டுக்கொண்டு ஒவ்வொரு கவிதையாக வாசித்துக்கொண்டு வந்துகொண்டிருந்தபோது ‘இப்படி மழை வந்து விசுறுகிறது’ கவிதையில் சட்டென நின்று விட்டேன். என் புரிதலின் அடிப்படையில் சொல்வதென்றால், அதை நிராகரிப்பின் படிமங்கள் நிறைந்த கவிதையாய் பார்க்கிறேன்.பைத்தியம் என்பதை நான் விலக்கப்படவர்களின் குறியீடாகப் பார்க்கிறேன்.
      “பைத்தியத்திற்கு ஒரு வெட்டவெளி இருந்தது
      இப்படி மழை வந்து விசுறுகிறது”
என்ற வரிகள் அக்கவிதையின் உச்சம்.எனக்கு மிகப்பிடித்தமான கவிதை அது.'நீதிநெறி விளக்கம்’ கவிதையில் வரும் அதுபோன்ற சாவிக்காரர்கள் நான் பலமுறை  சந்தைகளில் கண்டவர்கள் தான்.ஆனால் அவர்கள் இசையால் தான் கவிதையாகியுள்ளார்கள். ‘வல்லான் வகுத்தது’ சுய சிந்தனைகளுக்கு மதிப்பளிக்காத இன்றைய பல்துறை நிறுவனங்கள் மீதான இடித்துரைத்தல்.
   இப்படியும் கவிதை எழுதமுடியுமா என்று வியக்கவைத்தவை-‘நம்பு’,‘வாழ்விலோர் ஆனந்தம்’ போன்ற கவிதைகள்.வெறும் பகடிகள் மட்டுமே உங்கள் கவிதை இல்லை என்று சொல்வேன்..சமகால வழ்வின் போலிகள் மீதான விமர்சனங்கள் மற்றும் ,தார்மீகக் கோபங்கள், (நத்திங் ஸ்பெஷல்?,குடலுறுவி,வீடு,வெள்ளைக்கலர்,ரவா ரோஸ்ட்) சொந்த வாழ்க்கையின் பிரச்சினைகள், மகிழ்ச்சிகள்,ஏக்கங்கள் என்று பல்முனைகள் கொண்டவை அவை.உங்களுக்கேயான தனித்துவத்தின் அடையாளங்களாக ஆட்டுதி அமுதே,காவியம்,கார் சிறப்பு,இன்னிரவு,சாதாமாங்காய்,அவரும் நானும்,ஆட்ட நாயகன், போன்றவற்றைச் சொல்லலாம்(சில கவிதைகள் விடுபட்டிருக்கலாம்)
    செவ்விலங்கியங்களின் சொற்கள்,பெயர்கள் கொண்ட கவிதைகளில் தற்காலத்தைப் பிணைத்திருப்பது புதிய அனுபவம் தருபவை.(நாட்டு வளம் உரைத்தல்,தலைவி அரற்று)

“சுபம்” கவிதை உங்களது உறுமீன்களற்ற நதி தொகுப்பில் வரும் ‘ப்ளம் கேக்’ கவிதையை நினைவு படுத்துகிறது.அதில் ப்ளம் கேக் சாப்பிடுவதற்காக நாட்களின் மேல் துடுப்பிட்டு துடுப்பிட்டுச் செல்லுதல்.இதில் நாட்களை தாண்டிக் குதித்து,சண்டையிட்டு,கெஞ்சி சினிமாவின் ஸ்டைலில் அவற்றைக் கடந்து, விரும்பிய ஒரு நாளை அடைவது.நல்லதொரு சித்தரிப்பு இக்கவிதை.அதேபோல ‘சுமாரான கொள்கைக்குன்று’ கவிதை, ‘Mr.சஷ்டிக்கவசம்’ கவிதையை நினைவூட்டுகிறது.‘சாய்ஸ்’, ‘ஏகாந்தவாசம்’-போன்ற கவிதைகள் சுயபகடியின் சிருஷ்டிகள். ‘சுந்தரமூர்த்தியை மகிழ்ச்சி பீடித்துக்கொண்ட’போது தனசேகருக்கும் மகிழ்ச்சி பீடித்துக்கொண்டது.அவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.சளி மூக்கில் வழிந்தபோதும் உற்சாகம் கொண்டார்.
     இத்தொகுப்பிலுள்ள பாதிக் கவிதைகளை உங்கள் வலைத்தளத்தில் ஏற்கனவெ படித்திருக்கிறேன்.இருப்பினும் புத்தகமாகப் படிக்கும்போது ஒரு தனி இன்பம் உள்ளது.இத்தொகுப்பை வாசிக்கக் கொடுத்த அண்ணன் திருமூர்த்தி என் நன்றிக்குரியவர்.போன வாரம் என் அலைபேசியின் தொடர்பு எண்கள் யாவும் அழிந்துபோனபோது உங்கள் எண்ணும் சுவாஹா ஆகிவிட்டது.அதையும் அவர்தான் தந்தார்.எண் இருந்தபோதிலும் ஒரு முறைதான்(ஆறு மாதங்களுக்கு முன்பு) உங்களிடம் பேசியுள்ளேன்.ஒரு முறை சந்தித்திருக்கிறோம்(ஆத்மாநாம் விருது விழா 2016).

                                                                             அன்புடன்
                                                                             தனசேகர்
                                                                 

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான