ஆமாம்...அவர்
என் வாத்தியார். வாத்தியார் தான். குரு அல்ல. குருவெனில் அவர் ஆடைகளை துவைத்துப்
போட வேண்டும். வனத்தினில் புகுந்து உள்ளதிலேயே நல்ல பழங்களாக பறித்து வந்து
பசியாற்ற வேண்டும். மடிதனில் கிடத்தி உறங்க வைக்க வேண்டும். அப்போது ஒரு வண்டு நம்
தொடையைத் ஆழத்துளைத்து மறுபுறமாகப் பறந்து போனாலும் , பற்களைக் கடித்துக் கொண்டு,
முகத்தை முந்நூறு கோணலாக்கி அவர் நித்திரையைக் காக்க வேண்டும்.எல்லாம் செய்து
விட்டு கடைசியாக கமண்டல நீரால் சாபமும் வாங்க வேண்டும். வாத்தியாரெனில் இருக்கும்
இரண்டு தலையணைகளை ஆளுக்கொன்றாக வைத்துக் கொள்ளலாம்.
“ ஏனோ கால் வலிக்கிற மாதிரி இருக்கு... “
என்று வாத்தியார் முனகினால்
“ நல்லா
தூங்கி எந்திருச்சா எல்லா சரியா போயிடும்.. பேசமா படுங்க...:”
என்று அதட்டி தூங்க வைத்து விடலாம். அதாவது நம்
தலையணையை அவர் காலணையாக்க வேண்டிய அவசியமேதுமில்லை.
இரண்டாயிரத்தின் துவக்கத்தில் இளஞ்சேரல், பொன்.இளவேனில், செல்வராசு, கணேசன்
ஆகிய நண்பர்களுடன் நானும் சேர்ந்து “பாரதி இலக்கியப் பேரவை “ என்று ஒரு அமைப்பை
உருவாக்கி எங்கள் ஊரில் இலக்கியம் வளர்த்து வந்தோம். அது வைரமுத்துவின் முறுக்கு
மீசையிலிருந்து நாங்கள் ஒவ்வொருவராக இறங்கத் துவங்கியிருந்த பருவம். மனுஷ்யபுத்திரனின்
“இடமும் இருப்பும் “ புத்தகம் எப்படியோ கைக்கு வந்து சேர்ந்தது. படித்தோம்..
ஒன்றுமே விளங்கவில்லை. ராத்திரி கூடிய சபை இரண்டாக பிரிந்து நின்று வாதிட்டது.
“ இது ஏதோ ஏமாற்று
வேலை.. இவை கவிதைகளே அல்ல..” என்று ஒரு அணியும்,
“ இல்லை.. சுஜாதாவெல்லாம்
சும்மாவா சொல்லுவாரு ..நமக்குத் தான் அறிவு போதவில்லை .. “ என்று இன்னொரு அணியும்
வாதிடத் துவங்கி வாதம் நீண்டு நீண்டு பல டீ-க்களுடன்
விடிந்தது. ”இன்றோடு நட்பே முடிந்து விட்டது .. “ என்று
எண்ணுமளவிற்கு காரசாரமான விவாதம். சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் அன்று நான்
அக்கவிதைகளுக்கு எதிரணியில் நின்று பிரதான வீரனாகத் தொண்டை கிழியக் கத்தினேன்
என்பதுதான். அப்போதுதான் சுகுமாரனின் “ சிலைகளின் காலம் “ தொகுப்பும் வாசிக்க
கிடைத்தது. அங்கங்கே கொஞ்சம் கொஞ்சமாக புரிவது போல் தோன்றியது.. ” அவன் எழுதுகையில் “ என்கிற பாரதியைப் பற்றிய கவிதையை
வாசித்த போது வெறுமனே புரிவது மட்டுமல்ல பரவசமாகவும் இருந்தது. கவிதையின் மர்மப்
பிரதேசங்களை நோக்கி ஒரு சின்ன ஜன்னல் திறந்தது.. அக்கவிதையின் பரவசம் மற்ற பல
கவிதைகளையும் துலங்கச் செய்தது. “ பாட்டி மணம் “ என்கிற கவிதை என் பாட்டியை
நினைத்துக் கொண்டு வாசிக்கும் போது வெகு எளிய கவிதை போல் தோன்றியது.
“ உங்கள் குசுவிற்கு
நீங்களே மூக்கை
பொத்துவதுண்டா
?... என்கிற கேள்வியின் அதிரடி தெளிவாக விளங்கியது. பிறகு “ இடமும் இருப்பை “ தேடி வாசித்தேன். இப்போது பல கவிதைகள் எவ்விதச்
சிக்கலுமில்லாமல் அனுபவமாவதை உணர முடிந்தது.
இப்படியாக சுகுமாரன் எங்கள் ஆதர்ஷ கவியாக ஆகிப்போன
தருணத்தில்தான் பொன்.இளவேனிலின் தங்கைக்கு திருமணம் வந்தது. பத்திரிக்கையில்
சுகுமாரனின் கவிதை ஒன்றை அச்சிட்டோம். திருமண அழைப்பிதழ் என்பதால் ”மங்களகரம்” தேவைப்பட்டது.
எனவே “ மழை “ பற்றிய கவிதை ஒன்றை அச்சிட்டோம். “ என்பதால் மழை “ என்கிற கவிதை
அது..
“ மழை பிடிக்கும் எனக்கு –
ஏனெனில்
நீர்க்கம்பிகளின் மீட்டலில்
இலை நடனம் நிகழும்
.........................................
மழை பிடிக்கும் எனக்கு
ஏனெனில்
மூடப்பட்ட பிள்ளைப் பருவத்தின்
ஞாபகக் கதவைத் திறக்கும்
...........................................
பின்னொரு
நாளில் “ நீர்க்கம்பி, ஞாபகக் கதவு , மனச்சுவர் போன்ற உருவகங்கள் இப்போது வாசிக்கையில் மெல்லிய
சலிப்பைத் தருகின்றன என்று அவரிடம் சொல்லியிருக்கிறேன். தமிழில் எனக்கு பிடித்த
ஒரே ஒரு கவிஞர் பெயரை மட்டும் சொல்லச்சொல்லிக் கேட்டால் நான் அவரது பெயரை சொல்ல
மாட்டேன் என்றும் சொல்லியிருக்கிறேன். ஆனால் எனது வாத்தியார் அவர்தான். அதில் எந்த
மாற்றமுமில்லை. எப்போதும் அவரே என் முதல்வாசகர்.
என் முதல் தொகுப்பு 2002-ல் வெளியான போது அந்த
திருமண அழைப்பிதழையும் புத்தகத்தோடு இணைத்து அவருக்கு அனுப்பியிருந்தேன். அவரது
முகவரியை எப்படி பெற்றேன் என்பது நினைவில்லை. 22/04/2002 தேதியிட்டு அவர் ஒரு
கடிதம் எழுதியிருந்தார். ஒரு எழுத்தாளரிடமிருந்து நான் பெற்ற முதல் கடிதம் அது.
அந்தக் கடிதத்தின் இறுதி வரிகள்...
“ எழுத்திற்கு
நான் பயின்றதும் பயன்படுத்துவதுமான் சூத்திரம்.. “தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு
தர மொழிந்திடுதல்..”
இது உங்களுக்கும் பயன் தரலாம் “
உண்மையில் அச்சூத்திரம் எனக்கு நிறையவே பயன்
தந்தது.
“ நாம இலக்கியத்துக்குள்ள நுழையறப்ப யார்
மூஞ்சில முழிக்கறோம்கறது ரொம்ப முக்கியம்.. நான் வருகையில் எதிர்நின்று
கொண்டிருந்த சுகுமாரனுக்கு என் எல்லா எழுத்து முயற்சிகளிலும் பங்கிருக்கிறது..” இது முன்பு சுகுமாரன் குறித்து நான் எழுதியது.
ஆம்... நான் வருகையில் ஜிப்பாவும், சிகரெட்டுமாக அவர் தான் நின்று கொண்டிருந்தார்.
சந்தேகமே இல்லாமல் அது என் நல்லூழ்.
அந்தக் கடிதத்தில் அவர் எழுதியிருந்த இன்னொரு
வரி..
“ இதே கவனத்துடன் தொடர்ந்தால்
உங்களிடமிருந்து செறிவான கவிதைகள் நிச்சயம் வெளிப்படும்..”
நான் 2014 ஆண்டு ” இளம்
படைப்பாளிகளுக்கான சுந்தரராமசாமி விருது “
பெற்ற போது கிட்டதட்ட 14 ஆண்டுகள் பாதுகாத்து வந்த அந்தக் கடிதத்தின்
ஒளிநகல் ஒன்றை, பெரும் பரிசொன்றை அளிப்பதன் உவகையோடு அவருக்கு வழங்கினேன்.
எனக்கு வழங்கப்பட்ட இரண்டு விருதுகளின்
தேர்வுக்குழுவில் அவர் இடம் பெற்றிருந்தார். அது என் அல்லது அவரது துரதிர்ஷ்டம்.
என் நிமித்தம் அவர் ஏராளமான வசைகளை வாங்கிக் கட்டிக்கொண்டார்.
இந்த
மனுஷன் தன் வாழ்க்கையிலேயே அதிகமாக வாங்கிய வசைகள் பாவம்.. நம் நிமித்தம் தான் என்கிற எண்ணம் எனக்கிருந்தது. இல்லை.. இது இலக்கியத்தில்,
கவிதையில் அவர் உறுதியாக நம்பும் ஒன்றின் நிமித்தம் பெறுகிற
வசைகள்...எப்படியாயினும்...யாருக்காகவேனும் இதை அவர் பெற்றுத்தான் ஆக வேண்டும் என்று உணர்ந்து கொண்ட தருணத்தில் அந்தப்
பெருமையைத் துறந்து விட்டேன்.
சிலர் என் கவிதைகளில் அவர் பாதிப்பு உண்டு என்று
சொல்கிறார்கள் அது குறித்து என்னால் உறுதியாக எதையும் சொல்ல இயலவில்லை. ஆனால் என்
உரைநடையில் அவரது வலுவான பாதிப்புகள் உண்டு. அது எங்கு ஒளிந்து கொண்டிருந்தாலும்
அதை என்னால் கண்டுபிடித்து விட இயலும்.
சுகுமாரன் ஒரு
கவிஞராக இருந்த போதும் என் தனிப்பட்ட ரசனையில் அவரது சிறந்த ஆக்கம் “ தனிமையின்
வழி “ என்கிற அவரது உரைநடைப் புத்தகம்தான் என்று சொல்வேன். அந்தப் புத்தகத்தின்
கட்டுரைகள் உயிர்மையில் பத்திகளாக வந்த போது மிகுந்த கவனம் பெற்றன. எழுத்து,
இலக்கியம் என்பதோடு நில்லாமல் விதவிதமான மனிதர்களை, உலகங்களை அது அறிமுகம் செய்து
வைத்தது. வாழ்வு குறித்த பார்வைகளைக் கட்டமைத்தது. வீட்டை மட்டும் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்த ஒரு
கிராமத்து இளைஞனுக்கு அது விரித்துக் காட்டிய உலகம் அளப்பரியது. “ முதுமைப்
பருவத்தில் தனது இளமைக்கால புகைப்படத்துடன், கண்ணாடி முன்னே சேலையை சரிய விட்டு
நிற்கிற ஒரு நடிகையை “ அந்தப் பையனால் எந்த ஜென்மத்திலும் சந்தித்திருக்க இயலாது.
அந்தப் புத்தகத்தின் எல்லா கட்டுரைகளும் நண்பர்களால் சீராட்டப்பட்டன. நண்பர்
இளஞ்சேரல் உயிர்மையின் ஒவ்வொரு இதழிலும் சுகுமாரனின் கட்டுரைகள் குறித்து வாசகர்
கடிதங்களை எழுதினார். பிறகு அந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வந்த போது
சுகுமாரன் அதை “ இருகூர் இளங்சேரலுக்கு “ என்றே சமர்ப்பித்திருந்தார்.
பு.வ.மணிக்கண்ணனை பற்றிய கட்டுரை எங்கள் எல்லோரையும் ஒரு சேர ஆக்கிரமித்துக்
கொண்டது. இளங்கோ அப்போது எழுதிய கவிதை ஒன்றை பு.வ.மணிக்கண்ணனுக்கு சமர்ப்பித்தான்.
அப்போது வாசிக்கையில் ஒரு எழுத்தாளனின்
துயரம், வறுமை, கண்ணீர், காத்திருப்பு போன்றவை ஒரு வகையில் எனக்கு சுவையூட்டக்
கூடிய ஒன்றாகக் கூட இருந்திருக்கலாம். அவலச்சுவையில் தித்திப்பு அதிகம் அல்லவா ?
“ அநேகமாகத் தமிழ்நாட்டிலுள்ள
சிறியதும், பெரியதுமான எல்லாப் பேருந்து நிலையங்களிலும், பிரதான எல்லா ரயில்வே
சந்திப்புகளிலும் ஓர் இரவையாவது உறங்காமல் கழித்திருப்பேன்.. “
என்று
அன்று எழுதும் போது , அவர் எனக்கு வெறும் எழுத்தாளன் மட்டுமே. சேலம் பேருந்து
நிலையத்தின் அழுகிய நாற்றத்திற்கிடையே ஒரு விடுதி அறைக்கு கூட வக்கில்லாமல்,
ராத்திரியை விடிய வைக்க சூட்கேஸுடன் இப்போது அமர்ந்திருப்பவர் என் வாத்தியார்...
என் நண்பர்... ”குக்கூ” என்காதோ கோழி !
“
பட்டினி வயிற்றுக்கு தன்மானம் ஆடம்பரம் ...“ என்கிற வரியை இப்போது வாசிக்கையில் தலையை
திருப்பிக் கொண்டேன். அமெரிக்க ஆதிவாசி தலைவன் சியாட்டில், தங்களது மண்ணை
விற்குமாறு கேட்ட அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தை திருச்சி ரயில்வே
பிளாட்பாரத்தில் தஞ்சமான ஓரிரவில்தான் மொழி பெயர்த்தேன் என்று எழுதியிருப்பதை ஒரு
நண்பராக இப்போது ஜீரணிக்க இயலவில்லை.
இலக்கியம் குறித்த, கவிதை குறித்த அடிப்படைகளைப் பேசுவதில் எப்போதும் எனக்கு
தீராத ஆர்வமிருக்கிறது. நானும், இளங்கோவும் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம்
அடிப்படைகளைக் குறித்தே அதிகமும் உரையாடினோம். அப்போது எங்களுடன் அரூபமாக நடந்து
வந்தவர் சுகுமாரன்.
வாத்தியாராக தூரத்தில் இருந்தவர் நண்பராக
நெருங்கியது 2010 – ல் தான். அப்போது அவர் காலச்சுவடு பதிப்பக பணிகளை கவனித்து
வந்தார். என் ‘ சிவாஜி கணேசனின் முத்தங்கள் “ தொகுப்பிற்கு நான் ஒரு முன்னுரை
எழுதி அனுப்பியிருந்தேன். ரொம்பவும் தயங்கி தயங்கி முன்னுரை எப்படி இருக்கிறது ?
என்று சாட்டில் கேட்டேன். ஒரு பாராட்டு
மொழியை பதிலாக தந்தார். அந்தப் பாராட்டை விட அதன் கடைசியில் துளியாக
ஒட்டிக்கொண்டிருந்த “ டா “ என்கிற விளிப்புதான் என்னை அதிகமும் இன்புறுத்தியது.
“ இந்த “ டா “
வுக்காகத் தான் சார் இத்தனை வருஷமா காத்துக் கிடந்தேன்..” என்று பதில்
அனுப்பினேன்.
கோவை கணபதி லாட்ஜின் மாலை நேர உரையாடலொன்று 20
வருட வயது வித்தியாசத்தை அழித்துப் போட்டது. அதன் பிறகு அவரிடம் நான் உளறாததென்று
எதுவுமில்லை. என் அந்தரங்கத்து அபிமான நடிகை ரேஷ்மா பற்றி கூட அவருடன் ஆக்ரோஷமாக
உரையாடியிருக்கிறேன்.
“ அவ வெறும் செக்ஸ் நடிகையில்லை சார்... காமத்தோட
தேவதை... தன் உடலை அவ்வளவு மனமுவந்து தருவது நல்ல நடிப்பில் சேராதா என்ன ... ?
தன்னைத் தொட்டு திருப்பும் அவனுக்கு மாத்திரமல்ல, அவனை முன்னிறுத்தி காமத்தில்
வெந்து தணியும் ஒவ்வொருவனுக்கும் அவள் தன்னை மனமுவந்து அளிக்கிறாள்...
சிருங்காரமும் ஒரு இரசம் தானே சார்.. “
ரேஷ்மா திடீரென காணாமல் போய் விட்டதாக வந்த
இணையச் செய்தியை அவர்தான் முதன்முதலில் எனக்கு இன் –பாக்ஸில் அனுப்பினார்.
திருக்குறளை
மறுவாசிப்பு செய்கையில் காமத்துப்பாலின் ஒவ்வொரு பாடலும் என்னைத் தூக்கிப்
போட்டது. தாங்கவொண்ணாத பரவசத்துள் தள்ளியது. அதை முதலில் அவரிடம் “ குறுஞ்செய்தி “
மூலம் பகிர்ந்து கொண்டேன். அப்போதும் அடங்காது போனில் அழைத்து பேசினேன் ...
” வள்ளுவன் கவியில்லையென்றால் வேறு யார்தான் கவிஞர் ?
குறிப்பாக காமத்துப்பால் நிலைகொள்ள விட மாட்டென் என்கிறது... தற்போது
எழுதிக்கொண்டிருக்கும் நவீனக் கவி யாராவது காமத்துப்பாலிற்கு மட்டும் தனியாக உரை
செய்ய வேண்டும்.. வெறுமனே செய்யுளிற்கு பொருள் சொல்லாமல் , அதனுள்ளே இருக்கும்
கவிதையைச் சொல்ல வேண்டும் ...“
இன்னும்
என்னென்னவோ பிதற்றினேன்..
” ம் “ கொட்டிக் கொண்டிருந்தவர், தீடீரென
செய்யலாமா
... ? என்று கேட்டார்.
செய்யலாமா
என்றால்.. நாம இரண்டு பேரும் சேர்ந்தா சார்.. ?
“ஆமா... செய்வோம்... “
அவர் ஒரு வரி
பதிலுடன் நிறுத்திக் கொண்டார். அடுத்த அரைமணி நேரத்திற்குள்
“ திருக்குறள் –
காமத்துப்பால் – நயவுரை : சுகுமாரன், இசை “
என்று ஒரு அட்டைப்படமே
தயாராகிவிட்டது எனக்குள்.
உடனே அந்த
மகிழ்ச்சியை நண்பர்கள் சாம்ராஜ், கவின், செந்தில் ஆகியோருடன் குறுஞ்செய்தியில்
பகிர்ந்து கொண்டேன்.
கே.என்
செந்திலிடமிருந்து வந்த பதில்...
“ நல்லது... வாத்தியாரும், மாணவரும் சேர்ந்து
செய்ய வேண்டிய அவசியமான பணி...வாழ்த்துகள்...”
கலகலப்பற்றவர்.. யாரிடமும் அதிகம் ஒட்டாது
“ உம்” மென்று இருப்பவர் என்பதே அவரைப் பற்றிய பொதுச்
சித்திரம். காலச்சுவடும், பனுவல் புத்தக நிலையமும் பாரதியைப் போற்றும் வகையில் “
பாரதி – 93 “ என்கிற பெயரில் தொடர் இலக்கிய உரைகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒரு
வாரம் நான் பாரதியின் கவிதைகளை குறித்துப் பேசினேன். அந்த அமர்வைப் பற்றி
பழ.அதியமான் அவர்கள் கொஞ்சம் புகழ்ந்து எழுதியிருந்தார். அதை படித்த சுகுமாரன்.. “
ஒத்துக்கறேன்...எனக்கு கொஞ்சம் பொறாமையாத் தான் இருக்கு... “ என்று சொன்னார். இதை
நான் அதியமானிடம் பகிர்ந்து கொண்ட போது அவர் சொன்னதை எப்போது நினைத்தாலும் எனக்கு
சிரிப்பு பொத்துக் கொள்ளும்..
“ ஒத்துக்கறேன்/ எனக்கு / கொஞ்சம் /
பொறாமையாத்தான் / இருக்கு...
நெறயா வார்த்தை
வருதே இசை... இவ்வளவு பேசினாரா அவரு... “
எல்லா விதிக்கும் விலக்குகள் உண்டல்லவா ? ஒரு
முறை அவர் மனைவி சொன்னதாக நான்
கேள்விப்பட்டது இது..
“ மத்தவங்க போன்
பண்ணின, ”ம்.. “ ...
“ ம். “.ன்னு உறுமுற....ஒரு நாலஞ்சு பேர் இருக்காங்க... அவங்க போன் வந்தா மட்டும்
மொகம் அப்படியே பிரகாசமாயிடுது... “
அவர் முகத்தை
பிரகாசமாக்கும் நாலைந்து பேரில் ஒருவனாக இருப்பதில் எனக்குப் பெருமை உண்டு.
எவ்வளவோ பாடுகளுக்கு மத்தியில் வாழ்ந்தவர்
என்றாலும் குடியை விரும்பியவரல்ல அவர். ஒரு வேளை இதற்கு அவர் அப்பாவின் மிதமிஞ்சிய
பொறுப்பற்ற குடி ஒரு காரணமாக இருந்திருக்கலாம். நான் அறிந்த வரையில் அயல்தேசத்து
பெண் கவிஞர்களுடன் ஒரே ஒரு முறை பியர் அருந்தியிருக்கிறார்.
அவரது ஆதர்ஷ எழுத்தாளர் மார்க்வெஸின் நூலை அவர்
தமிழில் மொழி பெயர்திருந்தார். அப்புத்தகம் வெளிவரும் நாளில் அவருடன் இருக்க
வேண்டும் என்று விரும்பினேன். இயலவில்லை. இரவு அவரை போனில் அழைத்துப் பேசினேன்...
“ சார்.. ஒரு பியர் அருந்த இதை விட பொருத்தமான,
சந்தோசமான காரணம் கிடைக்காது. எனவே
போய் சில்லுன்னு ஒரு பியர் சாப்பிடுங்க...
“
அவர் “
வேண்டாம்... “ என்று மறுத்து விட்டார். அயல்தேசத்து பெண்கவிஞர்கள் அவசரத்துக்கு
கிடைக்கிறார்களா என்ன ?
அவர் கேளிக்கைகளில் கலந்து கொள்ளாதது குறித்து
எனக்கு எந்த வருத்தமுமில்லை. ஆனால் நடனங்களில் கலந்து கொள்ளாதது குறித்து வருத்தமுண்டு.
“ இப்படி...ஐம்புலனையும் அடக்கி...சாமியார்
மாதிரி வாழ்ந்து , வாழ்க்கைல என்ன சந்தோஷத்த காணப் போறீங்க ‘ என்று கேட்டால்,
“ இப்ப நான் சந்தோஷமா
இல்லைன்னு உனக்கு யார் சொன்னது.. ? என்று திருப்பிக் கேட்பார்.
ஆங்கிலத்தில் எனக்கு “ ஐ லவ் யூ” வைத் தவிர வேறொன்றும் தெரியாது. சுகுமாரனின் மொழிபெயர்ப்பின்
வழியாகவே நான் சிலி கவிஞர் நிக்கனார் பாராவை சந்தித்தேன்...
“ கவிதையில் எல்லாம்
அனுமதிக்கப்பட்டிருக்கிறது
சந்தேகமின்றி, இந்த நிபந்தனையுடன்
வெற்றுத்தாளில் நீ முன்னேற வேண்டும் “
( நிக்கனார் பாரா )
“கவிதையில்
எல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது “ .. இது என் நெஞ்சில் ஆழ விழுந்து விட்டது.
கவிதைக்குள் ஒரு குத்துப்பாட்டை வைக்கும் தைரியத்தை இவ்வரியே எனக்கு வழங்கியிருக்க
வேண்டும்.
சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டின் போது
ஜெயமோகன் பேசினார்...
“ ஒரு காலத்துல சுகுமாரன் கவிதைய நின்னுட்டுதான்
படிக்க முடியும்.. உட்கார்ந்துட்டு ரிலாக்ஸா அதை படிக்க முடியாது... அவ்வளவு
உக்கிரம் இருந்தது அதுல.. “
சுகுமாரன் தமிழுக்கு இன்னும் கொஞ்சம் “ கனல்
மணக்கும் பூக்களை “ வழங்கட்டுமென்று அவரை நான் ஆசீர்வதிக்கிறேன்.
நன்றி : விகடன்
- தடம் டிசம்பர்- 2016
தலைப்பு :
” குக்கூ
என்றது கோழி..” என்கிற சங்கப்பாடல் வரியின் திரிபு.
Comments