Skip to main content

அநாதைகளின் அமரகாவியங்கள்


                                                 




        பாடகன் ஆகிவிட வேண்டுமென்பதுதான் என் லட்சியக் கனவாக இருந்தது. அப்துல்கலாம் அறிவுறுத்தியதற்கும் முன்பிருந்தே நான் அதைத்தான் கனவு கண்டு கொண்டிருந்தேன். பின்னாட்களில் எனக்கு எந்தக்குரலும் பொருந்தவில்லை என்பதைக் கண்டுகொண்டேன் என்றாலும், எஸ்.பி.பி குரல் எனக்குப் பொருந்தவில்லை என்பதை முன்பே அறிந்து கொண்டேன். எனவே எனக்கு முன்பு இளையராஜா என்றும், பின்பு சங்கர்மகாதேவன் என்றும் நினைப்பு. நான் பாடினால் எனக்கு மட்டும் இளையராஜா போன்றே கேட்டது. காதுக்குள் விதவிதமான கருவிகளை செருகிஎடுத்த போதும் இந்த நோயை குணமாக்க கூடவில்லை. எனினும் இந்நோய் உடலுக்கு பெரிதாக ஊறு செய்யவில்லை. மேலும் மனதிற்கு நேரும் இன்னல்களை விரட்டவும் இதுவே உதவியது. கொஞ்சம் முயன்றிருந்தால், கொஞ்சம் துணிந்திருந்தால் நானும் ஒரு நகலிசைக் கலைஞன்தான் என்பதை இன்றும் விடாது நம்புவதால், இந்நூல் எனக்கு என்னை ஒத்த ஜீவன்களின் கதைகளைப் பேசுகிறது.

  நானும் ஒன்றும் சாதாரண கலைஞனல்ல. எட்டாவது படிக்கும் போதே “ டவுசர் விறைக்க, கைகளைக் கட்டிக்கொண்டு “ இசைத்தமிழ் நீ செய்த அரும்சாதனை .. நீ இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை...என்று பாடி அரங்கையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பெருங்கலைஞன். எனக்குத் தெரியும் பாடிவிட முடியாதென்று. ஆனால், தோற்றுப்போனாலும் டி.ஆர்.மகாலிங்கத்திடம் தோற்றுப் போக வேண்டும். அதுவன்றோ கலைத்தாயின் காலடியில் செலுத்தும் காணிக்கை? அதை விடுத்து எளிய எஸ்.பி.பி யின் எளிய பாடலொன்றைப் பாடி சின்ன டிபன்பாக்ஸை வெல்வதில் என்ன சாதனை இருக்கிறது ? அன்றிலிருந்து அந்தப் பாட்டு வாத்தியார் என்னை எங்கு பார்த்தாலும் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிப்பார். என்னை வெறும் பாடகன் என்று மட்டும் சுருக்கி விட முடியாது. “ வாத்திய மாமணியும் கூட. அப்போது  அந்தப்பாட்டு வாத்தியாருக்கு  தபெலா வாசிக்க ஒரு மாணவன் தேவைப் பட்டான். ஏற்கனவே வாசித்துக் கொண்டிருந்த சுரேஷிற்கு நன்றாக படிக்க வேண்டியிருந்தது.வாழ்க்கையில் உயர வேண்டி இருந்தது. எராளமான லட்சியங்கள் பாக்கி இருந்தன. எனவே அவன் என்னை சிக்க வைத்து விட்டு நழுவி விட்டான். தபெலாவை விட்டு விட்டுக் கிளம்பியவன் அமெரிக்கா போய்தான் நின்றான். இன்றும் அவ்வப்போது எனக்கு குறுஞ்செய்திகள் அனுப்புவான். எனக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன? இருந்தது.. ஆனால் தபெலாவின் வழியே, தபெலாவையும் தூக்கிக் கொண்டு அமெரிக்கா போனால் இன்னும் கொஞ்சம் இனிக்குமே என்று கொஞ்சம் யோசித்து விட்டேன். அப்போது கடவுள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு, கீழே விழுந்து விழுந்து சிரித்தது எனக்குக் கேட்கவில்லை. இப்படித்தான் ஒரு நகலிசைக் கலைஞனின் வாழ்வு தடம் மாறிப்போகிறது.

ப்யானோ கலைஞரும் கடுங் கோபக்காரருமான வசந்தன் சொல்கிறார்...
“ அந்த முண்டை “ம்க்கும்பா... அவங்காத்தா “ஏம்பா...மில்லுக்காவது போலாமில்லம்பா...எல்லா என் நேரம்... “
அந்த முண்டை யாரென்று புரிகிறதல்லவா?
“ ஒழுங்கா படிச்சு வேலைக்கு போயிருப்பேன்.. எல்லாம் இந்த தாயளினால வந்தது..என்று இளையராஜாவைக் காட்டி வசைபாடும் வசந்தன் கொஞ்ச நேரத்திற்குப் பின் “ ரியலி.. ஹீ இஸ் அன் ஏஞ்சல் ப்ரம்... “ என்று சொல்லிவிட்டு இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் காட்டுகிறார்.

  தனியார் வங்கி ஒன்றில் கடன்பாக்கி வசூலிப்பவராக ஜானை யோசித்துப் பார்க்கவே கொடூரமாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் அவர் துணிந்தார். வேலையைத் துறந்தார். பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை வந்து விட்டபோதிலும் இனி இசைதான் வாழ்க்கை. அதுதான் வழி . ஜானைப் போலவே நகலிசைக்கலைஞர்கள் பலரும் “ வேண்டுமானால் வெட்டிக்கொள்... “ என்று பலிபீடத்தில் தலைவைத்தவர்கள் தான்.

   நகலிசைக்கலைஞர்கள் ஒவ்வொரு முறையும் நேரடியாக ஒலிபரப்ப வேண்டியிருக்கிறது. உருளைக்கிழங்கோ போண்டாவையோ, எண்ணெய் பச்சியையோ தின்று விட்டு ஒவ்வொரு முறையும் ஒன்று போலவே முக்க வேண்டியிருக்கிறது. கொஞ்சம் பிசகினாலும் “கேலிப் பண்டம் “ ஆக்கி விடுவார்கள். திரைமேதைகளுக்கு இந்தச் சிக்கல் இல்லை. அவர்கள் தம் கட்ட அவசியம் இல்லை. தொழிற்நுடபம் வளர்ந்து விட்டது. ஒவ்வொரு வரியாகப் பாடிக் கூட சேர்த்துக் கொள்ளலாம். நான் சில நட்சத்திரப் பாடகர்களின் ‘லைவ் ஷோ “ க்களை பார்த்திருக்கிறேன். பார்த்திருக்க கூடாது என்று பிறகு எண்ணிக்கொண்டேன். சமீபத்தில் ராஜாவின் “ காதல் கசக்குதய்யா...பாடலை அவரது குடும்ப உறுப்பினர்கள் கூட்டாக சேர்ந்து பாடியதைக் கேட்டேன். எனக்கென்னவோ அந்நிகழ்ச்சி ராஜாவின் ஆயுளைக் குறிவைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியாகவே பட்டது. உறுதியாக என்னையும் சேர்த்து ஒரு பத்தாயிரம் பேராவது அந்தப் பாடலை அவர்களை விட பிரமாதமாகப் பாடுவார்கள் என்று தோன்றியது. பெரும்பான்மையாக நகலிசைக்கலைஞனின் லட்சியம் திரையிசையில் மின்னுவதுதான் . ஆனால் எல்லோராலும் அங்கு சென்று விட முடிவதில்லை. அதற்குத் தேவையான சகலமும் இருக்கின்ற போதிலும் அவனிடம் ஏதோ ஒன்று குறைந்து விடுகிறது. அது இசை தொடர்பானதாக இருக்கலாம். அப்படி இல்லாமலும் இருக்கலாம்.  ஆனால் அவர்கள் கலைஞர்கள்தான்.. சிலர் மகத்தான கலைஞர்கள்..அதிலொன்றும் சந்தேகமில்லை. மற்றபடி “நகலிசைக் கலைஞன் “ என்கிற விளிப்பு  அடையாளத்தின் நிமித்தம் வழங்கப்படும் ஒரு தொழிற்பெயர் ... அவ்வளவே.

   டி.எம்.எஸ்,  பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, பி.பி.ஸ்ரீனிவாஸ், வாணிஜெயராம் போன்றோரால் “ சிம்ஹம் “ என்று அழைக்கப்பட்ட , கீபோர்டு ப்ளேயர் ராமேட்டன் என்கிற ராமச்சந்திரனுக்கு ஒரு போதாத காலம் வந்துவிடுகிறது. ரூ.500 க்கு வாங்கிய செல்போனுக்கு பில் கட்ட இயலவில்லை.  கட்டச்சொல்லி அறிவுறுத்தும் ரெக்கார்டிங் அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. அவர் அதை எடுக்கவே இல்லை. தன் கண்ணாளனுக்கு என்னவோ சிக்கல்.. நாமே அதைத் தீர்த்து வைத்து விடலாம் என்று முடிவுசெய்த அவர் தர்மபத்தினி இந்த முறை போனை எடுத்து விடுகிறார்.

“ ஹல்யோ ஆரா ...
ஒரு பெண் குரலில் அறிவுறுத்தல்கள் துவங்குகின்றன.
“ அது அவருக்கு கச்சேரி இல்லம்மா...இரிந்நா அவுரு கெட்டிடும்..
மறுமுனையில் பெண் பேசிக்கொண்டே இருக்கிறாள்.
“ ஆ...செரிம்ம்மா...
“ ஆங்.. கெட்டிடும்...
“ என்னம்மா ந்நீ... இங்ஙன , ஞான் இத்தர ச்சொல்லிட்டும் அதையே சொன்னா எப்பிடியாக்கும்... கச்சேரி இல்லம்மா..இரிந்நா அவுரு கெட்டிடும்... “
பார்க்க பாவமாக இருக்க  கடைசியில் அது ரெக்காட்டிங் வாய்ஸ்...என்று சொல்லி தன் மனைவியை சாந்தப்படுத்துகிறார் ராமேட்டன். ஒரு நகைச்சுவை காட்சி போலவே சொல்லப்படிருக்கும்  இக்கட்டுரையில் துக்கத்தின் சாயலே இல்லை.
” .... இவ்வளவு நேரமும் பதில் சொல்லிக் கொண்டிருந்த சேச்சியின் முகம் போன போக்கைப் பார்த்து ஏட்டனுக்கு நிலைகொள்ளாத, முகம்கொள்ளாத சிரிப்பு. சேச்சிக்கும் ...”  இப்படி முடிந்து விடுகிறது கட்டுரை.

   பெருந்துக்கம், ஆறாத கண்ணீர், ஆழ்ந்த கசப்பு என்றெல்லாம் ஜான் அங்கு எதையும் எழுதி வைக்கவில்லை. அவ்வளவு தானா? அவ்வளவு தானா ? என்று நாம் தான் பதறுகிறோம். இவ்வளவுதான் சொல்வாயா இதை...? என்று அவர் சட்டையை பிடித்து உலுக்குகிறோம். அதில் அவர் மேல் பட்டன் தெரித்து விடுகிறது. அங்கு அக்கட்டுரை “ அமரகாவியம் “ ஆகிவிடுகிறது. இப்படி ஒன்றை எழுதிய ஜான், இன்னொரு இடத்தில் “ அந்தச் சிரிப்புக்கு உள்ளிருப்பது வலியன்றி வேறென்ன தோழர்களே ... “ என்று கட்டுரை வடிக்கத் துவங்கும் போதுதான்  நமக்கு சப்பென்று ஆகிறது.

 ஜான் தான் முதன்முதலாக பாடிய அனுபவத்தை முன்னுரையில் சொல்லி இருக்கிறார்.. அதிலிருந்து எனக்கு ஒரு ஞானம் கிட்டியது. அவர் முதன் முதலாக பாடிய பாடல் வருஷம் 16 படத்தில் இடம் பெற்ற  “ பழமுதிர்ச்சோலை உனக்காகத் தான் “ பாடல். ஜானின் பேரதிர்ஷம் அது ஒரு பறக்கும் ஹம்மிங்ஹோடு துவங்குகிறது.  ஜான் எழுதுகிறார்..
“ நடுங்கும் கால்களை உதறிக் கொண்டேன். “ வாழ்த்துக்கள் தம்பி ! “ என்று சொல்லி மைக்கை என் கையில் கொடுத்தார் சூரியண்ணன். ஓன்.. டூ.. த்ரீ.. ஃபோர்  சொல்ல, என் செட்டைகள் விரிந்தன.
“ ஏஹே ..ஓஹோ..  லாலலா..
இங்கு எனக்கு கிடைத்த ஞானமாவது எந்த மகத்தான வரியாலும் இந்த ஹம்மீங்கை பதிலீடு செய்திருக்க முடியாது என்பது. “ ஏஹே.. ஓஹோ.. லாலலா ... “ வின் விடுதலையை , ஆனந்தத்தை எந்த வரியிட்டு நிரப்ப முடியும். ஒரு இளைஞன் தன் முதல் பாடலின் முதல் வரியை அர்த்தமற்ற ஆனந்தப் பரவசத்தில் துவங்குவது எவ்வளவு பொருத்தமானது ?
                



    உண்மையில் அமரகாவியங்களின் தொகைதான் நகலிசைக்கலைஞனின் வாழ்க்கை. ஆனால் கொண்டாடத்தான் நாதியில்லை. அதை கொண்டாடித் தீர்க்கத்தான் ஜான் இந்தப்புத்தகத்தை எழுதியிருக்கிறார்.  இந்நூல் மெச்சப்படுவதற்கான காரணங்களில் பிரதானமானது இதன் சுவாரஸ்யமான புனைவம்சம் என்றே நினைக்கிறேன். கதை சொல்வதில் பெருவிருப்பமுடைய ஜானின் எழுத்தில் கதைகள் இயல்பாகவே கலந்து விட்டிருக்கின்றன. 
தாள வாத்திய கலைஞர் ஒருவரைப் பற்றிய கதை ஒன்று உண்டு...
 “ டொக்... அதிர்ஷடம் பாருங்க.. யாருக்கு எந்த ரூபத்துல எந்த நேரத்துல எந்த வடிவத்தில வரும்னு சொல்ல முடியாதுங்க.. டொக்.. இது ஒருவருக்கு மட்டுமே கிடைக்கிற ஒருதலை ராகமில்லைங்க.. அனைவருக்கும் கிடைக்க கூடிய ஆபூர்வராகங்க.. ஆனந்தராகங்க.. டொக்.. ‘

“ டொக்.. பூட்டான்.. பூட்டான்.. உங்களைக் கைவிட மாட்டான்.. ராயல் பூட்டான்.. டொக்.. இமயமலை அடிவாரத்திலே பூத்துக் குலுங்கும் சின்னஞ்சிறு மாநிலம்ங்க..சிங்கார மாநிலம்ங்க..சிக்கிம் மாநிலம்.. பெரியோர்களே... சிக்கிம்...சிக்கிம்.. என்று கேட்டு வாங்குங்கள் நண்பர்களே... டொக்...

ஒவ்வொரு வாக்கியம் முடிந்த பின்னும் ஆட்டோவில் அந்த அறிவிப்பாளர் நாக்கை மேலண்ணத்தில் சப்புக்கொட்டுவது போலத் தட்டி “ டொக் “ ஒலிக்கச் செய்கிறார். அதைக் கேட்கும் போதெல்லாம் பரவசமாயிருக்கிறது ஸ்டீபனுக்கு..

 இப்படியாக தாளத்தால் ஈர்க்கப்படும் ஒரு சிறுவன் ஒருநாள் நிறைய தாளக்கருவிகள் புழங்கும் அறைக்குள் அழைக்கப்படுகிறான்.. அதாவது தனது கலைவாழ்வில் அடியெடுத்து வைக்கிறான்.. அந்த அறையில் பேங்கோஸ் வாசித்துக் கொண்டிருந்த அண்ணனொருவன்  வெளியே பரவசத்தில் நின்று கொண்டிருக்கும் சிறுவனைப் பார்த்து..
“ உள்ள வா தம்பி “ என்றழைக்கிறார்..
அங்கு ஜான் அந்த பழைய வசனத்தை திரும்ப எழுதிக்காட்டுகிறார்..
“ டொக்.. அதிர்ஷடம் பாருங்க.. யாருக்கு எந்த ரூபத்துல... எந்த நேரத்துல.. எந்த வடிவத்தில... வரும்னு சொல்ல முடியாது.. “
என் கையிலிருந்த பென்சில் அந்த வரிகளை  அழுத்தி அடிக்கோடிட்டது. பிறகு அதை சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது. பிறகு அதற்குப் பக்கத்தில் “ முக்கியக்குறி “ இட்டது. அந்தவரி அற்புதமானதுதான் என்றாலும் அற்புதம் “ என்று சொல்ல முடியாது. முகநூலின் சரளமான புழக்கத்துக்கு பின் அற்புதத்தில் ஒரு அற்புதமும் இல்லாமல் போய் விட்டது. அது பரஸ்பரம் சொல்லிக்கொள்ளும்  பாசாங்கான உபச்சார சொல்லாக மாறிவிட்டது. முகநூல் அற்புதத்தின் பிரகாசத்தை மங்கிய மினிபல்ப் ஆக்கிவிட்டது.

     "எண்பதுகளிலேயே  கேரளம், தமிழகத்து மேடைப் பாடகனுக்குக் “கட்-அவுட் “வைத்துக் “ கலைசெல்வன் நைட் “ என்று நிகழ்ச்சி நடத்தி கொண்டாடியிருக்கிறது. அதற்காக ஒட்டப்பட்ட தனது போஸ்டரின் மீதே அந்த மகாகலைஞன் போதையில் படுத்துக் கிடந்தான்...
 இது கலைச்செல்வன் என்கிற பாடகரின் கதை. அவருக்கு என்ன குறைந்தது? எதை நிரப்பிக்கொள்ள அவர் இவ்வளவு குடித்தார்? இதற்கான காரணம் எதையும் கட்டுரை சொல்லவில்லை. “ வெறும் பழக்கமாக “ கூட இருக்கலாம். அந்தக் காரணமே போதுமானதுதான். ஏனெனில் “பழக்கம் “ வேறெந்த துக்கத்திற்கும் குறைந்ததல்ல.

      ஒரு இடத்திற்கு அந்த மனிதன் போய்ச் சேருமுன்பே அவன் சாதி போய்ச் சேர்ந்து விடும் என்று சொல்லப்படுவதுண்டு. கலைச்செல்வன் நமது சாதி அடுக்கில் ஆகக் கீழே கிடக்கும் “ அருந்ததியர் “ இனத்தை சேர்ந்தவராக இருந்திருக்கிறார். ஆனாலும் கொண்டாடப்பட்டிருக்கிறார். கலை இழிவுகளை கடக்கவல்லது என்பதை நாமும் நம்புவோம்.

            



   சிவாஜிக்கு கட்-அவுட் வைக்கலாம். லாட்டரிசீட்டு வீசலாம். தோரணங்கள் கட்டலாம். அவர் பெயரில் நீர்மோர் ஊற்றவோ, நிழற்குடை அமைக்கவோ செய்யலாம். மகனுக்கு எஸ்பி செளத்ரி என்று கூட பெயரிட்டுக் கொள்ளலாம். அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அதை விடுத்து “ நானும் சிவாஜி தான் “ என்று கிளம்பும் போதுதான் சகல கேடுகளும் கூடவே கிளம்புகின்றன. ஆனால் சிவாஜிகளால் எப்படி சும்மா இருக்க முடியும் ? சிலருக்காவது ஓரிரு வருடங்களில் தான் சிவாஜி இல்லை “ கருப்பணன் ‘ தான் என்று தெரிந்து விடுகிறது. சிலரோ மரணப்படுக்கையிலும் சிவாஜியைப் போலவே முனகிய படி அவரைப் போலவே இரும முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். கலையின் அழைப்பு அவ்வளவு வசீகரமானது. புறந்தள்ள இயலாதது. தன்னை கலைஞன் என்று கருத்திக் கொள்பவனை நோக்கி அது ஒரு சிறுமுறுவல் பூத்துவிட்டு போய் விடுகிறது. அந்த சின்னஞ்சிறு முறுவலுக்கு அவன் தன் வாழ்வையே பணயம் வைக்கிறான்.

  ஜானுக்குள் ஒரு துடுக்குத்தனமான சிறுவன் இருக்கிறான். “ அவர் சாதாரணமானவரல்ல...ஸ்பெஷல்ரணமானவர் “ போன்ற வரிகளை அந்தப் பையன்தான் எழுதுகிறான். உணர்வு பெருக்கொடு எழுதப்பட்டிருக்கும் கடைசி கட்டுரைக்கு “ திம்ஸூ “ என்று பொறுப்பற்று தலைப்பிட்டிருப்பதும் அந்தப் பையனின் சேட்டைகளில் ஒன்றுதான். ஜான் அந்தப்பையனிடம் கவனமாக இருக்க வேண்டும்.தனக்குத்தானே சிரித்துக்கொள்ளும் சில அற்பநகைச்சுவைகளிடமும்.

                          நன்றி : காலச்சுவடு - ஜனவரி 2017

     நகலிசைக்கலைஞன் - ஜான்சுந்தர்- காலச்சுவடு பதிப்பகம்

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான