Skip to main content

உய்யடா ! உய்யடா ! உய் !


                    

                      சுகுமாரன்- 60







    அள்ளி கைப் பள்ளத்தில் தேக்கிய நீர் “ என்று துவங்குவதற்கு பதில் இந்தக் கட்டுரையை துவங்காமலேயே இருக்கலாம். ஒவ்வொரு கவிஞனின் தலையிலும் நாம் ஒரு கவிதையை ஒட்ட வைத்திருக்கிறோம். அப்படி சுகுமாரனின் நெற்றியில் ஒட்டப்பட்டிருக்கும் கவிதை இது.. பாவம் நாம் அதை விட்டு விடுவோம். சுகுமாரன் வேறு சில கவிதைகளையும் எழுதியுள்ளார். அதைப் பார்க்கலாம்.
  நவீனக் கவிதையை ஒரு பூச்சாண்டியைப் பார்ப்பது போல் பார்க்க வேண்டியதில்லை என்று எனக்குச் சொல்லித் தந்தவை சுகுமாரனின் கவிதைகள். அவரது மொழி சரளமானது.அதன் எளிய உருவிற்கும், சப்த ஒழுங்கிற்கும் ஒரு அரவணைக்கும் தன்மை இருக்கிறது. புத்தகத்திலிருந்து தலையை திருப்பிக் கொள்ளும் படி கொடுங் கசப்பூட்டும் வரிகளை அவர் எழுதியிருந்தாலும் அதன் சங்கீதம் நம் நெஞ்சில் இனிக்கவே செய்கிறது.

     “ விரல்கள் மழுங்கிய தொழு நோயாளி முகந்த
       ஓட்டைக் குவளை நீர் – இந்த வாழ்க்கை “
என்கிற வரியையும்,

    “ நான் காளவாயிலிருந்து வெளியேறிய பெருமூச்சு
என்கிற வரியையும் வாசிக்கும் ஒரு உயிர் கொள்ளும் ஆறுதல் அல்லது பதற்றம் கவிதைச் செயல்பாட்டின் முக்கியமான அம்சமாகும். அவரது ஆரம்ப காலக் கவிதைகள் மிகவும் உக்கிரமான படிமங்கள், உவமைகளைக் கொண்டவை.எனினும் அவை வாசகனை விரட்டவில்லை மாறாக அணுக்கமாக்கின. இருப்பின் வாதையை துளியும் கருணையற்ற சொற்களில் எழுதிக் காட்டியதின் மூலம் , வறண்டு தூர்ந்திருக்கும் மனித மனங்களில் கொஞ்மேணும் கருணையை கசிய விட  அவர் விரும்பினார்.

   நம்மை விதவிதமாக தண்டிக்கும் கடவுளை பதிலிற்கு விதவிதமாக தண்டிக்கும் போக்கு நவீனக் கவிதையில் ஒரு கூறாக இருந்து வந்திருக்கிறது. இவரது கவிதைகளிலும் இதைக் காண முடிகிறது. இவர் கவிதைகளில் கடவுள் பெருச்சாளியின் வயிற்றில் செத்துப் போகிறார். அவரது மகுடத்தை பேய்கள் பறித்துக் கொள்கின்றன.அவர் செவிடாகவும், புருவம் நரைத்த கிழவராகவும், மண்டையோடாகவும் காணக் கிடைக்கிறார். கபாலீஸ்வரரை சாக்கடை அள்ளும் கபாலியோடு சேர்ந்து புகைபிடிக்க வைக்கிறார் சுகுமாரன்.

  இருப்பின் துயத்திலிருந்து தப்பிக்க இவர் சரண்டைவது இசையின் தாய்மையை. இவரது கவிதைகளில் இசை குறித்த சித்திரங்களை நிறைய காண முடிகிறது.

 வயலினிலிருந்து பெருகிய நதியில் மிதந்த
 தோணியில் ஓர் இடம்
                            ( கோடைக்காலக் குறிப்புகள் )

யேசுதாஸுக்கு சமர்ப்பிக்கப் பட்டிருக்கிற கவிதையின் ஒரு வரி...

      கூரையடியில் கொடியில் அமர
      அழைக்கழியும் குருவி
                                  ( இசை தரும் படிமங்கள் )

புணர்ச்சியைக் கூட உடலின் சங்கீதம் “ என்றே  இவர் எழுதுகிறார்
.
    என் வாழ்வில் நான் பொய்களுக்கு நிறைய கடன் பட்டிருக்கிறேன். உண்மையின் பளீரிடலைக் காட்டிலும் பொய்மையின் மென்னிருளிள் நான் அதிக கதகதப்பை உணர்ந்திருக்கிறேன். பொய்யே என் அன்னை. அதுவே என் தாய்மடி. அதன் தாலாட்டில்தான் என் ஜீவன் இளைப்பாறிக் கொண்டிருக்கிறது. இன்புற்றுக் களி கூர்கிறது. சுகுமாரன் பொய்களைப் பற்றி இரண்டு கவிதைகள் எழுதி இருக்கிறார். “பொய்ச் சிறப்பு “ என்கிற தலைப்பு  வள்ளுவனின் “ வான் சிறப்பு “ அதிகாரத்தை நினைவூட்டுகிறது. “ நீரின்றி அமையாது உலகு “ என்பது போலவே பொய்யின்றி அமையாது என் உலகு... நீங்கள் கொஞ்சம் மனது வைத்தால்  “நம் உலகு “ என்றும் சொல்லலாம். ஆனால் இந்த இரண்டு கவிதைகளிலும் ஒரு மெல்லிய குற்றவுணர்ச்சியும் சேர்ந்தே ஒலிக்கிறது..
   
   பொய் எப்படி சொல்கிறேன்?
   அலகு குத்திய நாக்கசைத்து...

    என்று எழுதுகிறார். 20 ஆம் நூற்றாண்டு கவிதையில் இருக்கும் இந்த அலகை 21 ஆம் நூற்றாண்டுக்காரர்களான நாங்கள் பிடிங்கி தூர எறிந்து விட்டோம். நாங்கள் உண்மையை விட இரண்டு மடங்கு உறுதியுடன், பிசிறு தட்டாமல், ஸ்ருதி பிசகாமல் “ கேஸ்வலாக “ பொய் சொல்லப் பழகிவிட்டோம் என்பதை அவருக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கவிதையை என் வாசிப்பின் பால்யத்தில் வாசித்து போது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது நினைவிருக்கிறது. தேவையற்ற குழப்பங்களிலிருந்தும், அறச் சிக்கல்களிலிருந்தும் இக்கவிதை என்னை விடுவித்து விட்டது. ஒருவன் பொய்யும் பேசிக் கொண்டு எழுத்தாளனாகவும் வாழலாம் என்பதை அறிந்து கொண்ட போது அவ்வளவு விடுதலை பெற்ற மனிதனாக என்னை நான் உணர்ந்தேன்.

   திருகலற்ற, எளிய உரையாடல்களின் மூலம் வாசகனிடம் பேசுவதையே இவர் விரும்புகிறார். ஒரு மருத்துவ அறிக்கையின் பாவனையிலிருக்கும் கவிதை ஒன்று எனக்கு மிகவும் பிடித்தமானது...

   கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்
   கண்ணே
   சகல நோய்க்கும் காரணம்

இந்தக் கவிதையை என் தோழி ஒருத்திக்கு வாசித்துக் காட்டிய போது அவள் சொன்னாள்  “ நல்லாருக்கு.. உனக்குனே எழுதுன மாதிரி இருக்கு ... “
அன்பே ! அப்படிச் சொல்லாதே.. இது உனக்கும் சேர்த்து எழுதப் பட்டதுதான் ... ஒட்டு மொத்த மானுட குலத்துக்குமானது ... “

கண்களைப் பற்றிய இன்னொரு கவிதையும் முக்கியமானது..
   கண்ணை விரி –
   வானத்தை அளப்பதுடன்
   மூத்திரத்தின் உப்பை அரிக்கும்
   எறும்புகளையும் மொய்க்க.


         


    ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் / ஒரே வீட்டிலும் / ஒவ்வொரு வீட்டில் வாழ்கிறோம்... என்று சொல்லும் சுகுமாரனின் கவிதைகளில் பெண்கள் கணவர்களை வெளியே தள்ளி தாழிட்டதும் ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றுகிறார்கள். அவர்களின் ஷவர்களிலிருந்து வன அருவி கொட்டுகிறது. அவர்கள் அந்த விடுதலையில் திளைக்த் திளைக்க நீராடுகிறார்கள். ஆண்கள் அவ்வப்போது “ பரோலில் “ போய் காத்லித்து விட்டு அப்பாவியைப் போல் வீடு திரும்புகிறார்கள். “ பரோல்”  என்கிற தலைப்பே நிறைய விசயங்களைப் பேசி விடுகிறது..

   அவ்வப்போது
   பரோலில் வெளிவந்து
   உன்னோடு காதல் செய்வதில்
   குற்றமுணர்கிறேன் பெண்ணே !
   எனவே
  என்னை நீ இழந்து போவதில்
  எனக்குப் பெருந்துக்கமில்லை
  ............................................................
 ....................................................................
 அடிக்கடி பரோல்
 அனுமதிக்கப்படுவதில்லை பெண்ணே
 என்னை நீ இழந்து போவதில்
 எனக்குப் பெருந்துக்கமில்லை

ஆபூர்வமான சித்தரிப்பு கொண்டவை சில வரிகள்..

      உலர்ந்த துணியில் தெறித்த
      சொட்டு நீர் ஓசையுடன் நடக்கும்
      பூனைகளுடன் இப்போது
      பகையில்லை எனக்கு
                                   ( பூனை )

உன் பெயர் –
இந்த இரவில் காலி அறையில் மாட்டிய கடிகாரம்
                                           ( உன் பெயர் )

        என்கிற வரி அந்தக் கடிகாரம் போலவே துல்லியமாக ஒலிக்கிறது.

மூட்டைப் பூச்சியானதால்
ரத்தம் குடிக்கிறோமே தவிர
ரத்தம் குடிப்பதற்காய்
மூட்டையாகப் பிறக்கவில்லை.
                              
                  ( வரலாற்று முக்கியத்துவமுள்ள ஒரு சந்திப்பு )
  என்கிற ஒரு கவிதையின் இடைவரிகள் என்னளவில் தனிக்கவிதையாகும் தகுதியுடையது.

  இவரின் சில கவிதைகள் தேவையற்று நீள்வதாக எனக்குத் தோன்றுகின்றன.பேசி முடித்த பின்னும் பேசுகின்றன. சில கவிதையின் மையப்புள்ளியை விட்டு விலகி கொஞ்சம் வேறு கதைகள் பேசுகின்றன. மொழியை லகுவாக்குவதன் உபவிளைவாக இதைக் கருதலாம் அல்லது அடிக்கடி அவர் கைக்கொள்ளும் ஒரு வித உரையாடல் பாணியின் விளைவு என்றும் கொள்ளலாம். சுகுமாரனின் நிறைய கவிதைகளில் யாரோ ஒருவர் யாரோ ஒருவரிடம் எதையோ ஒன்றைக் கேட்கிறார். இங்கு அவர் கொஞ்சம் விளக்க முற்படுகிறார். இந்த உரையாடல் தன்மை சமயங்களில் ஒரு வித “ கச்சிதமின்னையை “ உருவாக்கி விடுகிறது..

   உதாரணமாக பேபி ஸார் கவிதையை பார்க்கலாம்...
 

  பேபி சார்
  எல்லோரையும் போல
  எப்போதும் தன்னை
  பேபி சார் என்றே சொல்லிக் கொள்கிறார்

  அழைத்து விசாரித்தால்
  தொலைபேசிப் பதில் :
  “ ஆமாம், நான் பேபி சார்தான் பேசறேன்..

   தட்டலுக்கு பதில் கேட்டால்
   வாசற் குரல் :
  “ ஆமாம், நாம் பேபி சார்தான் வந்திருக்கேன் “

“ ஆமாம், நான் பேபி சார்தான் பேசறேன்.. ” ,  “ ஆமாம், நாம் பேபி சார்தான் வந்திருக்கேன் “ என்கிற பதில்களே இந்தக் கவிதைக்கு போதுமானது என்று தோன்றுகிறது. அதற்கு முந்தைய வரிகள் அவசியமற்றவையாகவே தோன்றுகின்றன.

 “ அன்றிரவு “ என்கிற தலைப்பில் மதவெறிக் கும்பலிடம் சிக்கி நிர்வாணமாக்கப்படும் ஒருவனைப் பற்றிய  கவிதை ஒன்று இருக்கிறது. இதே விசயம் பற்றி கட்டுரை ஒன்றையும் சுகுமாரன் எழுதி இருக்கிறார். எனக்கு கவிதையை விட கட்டுரை பிடித்திருக்கிறது. “ பலிக்கோழை “ கவிதையின் நீளம் உறுத்தினாலும் நவீன யுகத்தின் குறிப்பிடத் தகுந்த அரசியல் கவிதை இது.

   இவரின் கவிதைகளில் காதலும், காமமும் திரும்பத் திரும்ப பேசப் படுகின்றன.  இவ்விரண்டையும் பிரிக்கும் கோடு அவ்வளவு திடமானதல்ல என்பதையும் சொல்லி விட வேண்டும். காதலைக் காட்டிலும் காமம் கூடுதலாகவே பேசப் பட்டுள்ளது. இவர் கடலை குறித்து எழுதினாலும், நதியைக் குறித்து எழுதினாலும், கபாலியைப் பற்றி எழுதினாலும், காளியைப் பற்றி எழுதினாலும் அதில் காமம் கலந்து விடுகிறது. இது தவிர தனியாக வேறு காமம் பற்றி எழுதுகிறார்.ஆனாலும் இவரின் கவிதைகளில் பெண் வெறும் இச்சைப் பண்டமல்ல. பெண்னைக் குறித்தான அங்க வர்ணனைகளை பூதகண்ணாடி வைத்து தேட வேண்டி இருக்கிறது. ஸ்பரிச மின்னல், இதழ்ச் சுனை , நாபிச்சுழல் போன்ற உருவகங்களே காணக்கிடைக்கின்றன. இவர் கவிதைகளில் காமம் என்பது ஒருவர் மற்றொருவரைச் சரணடையும் நிலம். ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நிரப்பிக் கொள்வது. இயல்பானதும், அவசியமானதும், மதுரமானதுமான ஒரு உயிர்ச்செயல்பாடு.

 “ சலமழப் பேழை ; ஊத்தைப் புன் தோல்
   நாற்றப் பாண்டம் ; பீற்றல் துண்டம்
   மாயா விகாரம் ; மரணப் பஞ்சரம்
   நீரில் குமிழி ; நீர் மேல் எழுத்து

என்றெல்லாம் சித்தர்கள் வசைபாட ,  சுகுமாரனோ

   “ பழகப்பழக பெண்
   உடல் மட்டும் ஆவாளா ?
   முட்டாளே , நான்
   மழையில் திளைக்கும் பெரு நிலமில்லையா ?

              என்று திருப்பி ஏசுகிறார்.

“ஈரம் கசிய விரியும் என் மழிக்கப்படாத உறுப்பு
 சிறையல்ல , முட்டாளே ! தபோவனம் “
   
         என்று ஏசுகிறது இன்னொரு பெண் குரல்.

ஆறாத புண்ணில் அழுந்திக் கிடவாமல்
 உய்யடா ! உய்யடா ! உய் !...

  என்று  கூவிய படியே பட்டினத்தாரும், பத்திரகிரியாரும் சுகுமாரனைத் துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள். ரொம்பவும் லாவகமாக அவர்களை வேறு திசையில் போக்கி விட்டு ஒரு பெட்டிக்கடை மறைப்பில் ஒளிந்து கொள்கிறார் இவர். பிறகு சீழ்க்கையடித்த படியே தன் தபோவனத்திற்கு “ திரும்புகிறார். சுகுமாரனின் கணக்கில் உய்ய வேண்டியது அவர்கள்தான்.


  எனினும் சுகுமாரன் 60 வயதை தொட இருக்கிறார். இனிமேலாவது அவர் இது போன்ற சிற்றின்பச் சகதிகளிலிருந்து விடுபட்டு, பேரின்ப வெளியேகி , சிவானந்தத் தேன் பருகி, சும்மா இருக்கும் சுகம் காண எல்லாம் வல்ல கச்சி ஏகாம்பன் அருள் புரியட்டும் !


                             
                 
                             நன்றி : ஆத்மாநாம் அறக்கட்டளை 

























    

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம