Skip to main content

கவிதையின் விளையாட்டு - “ பழைய யானைக்கடை” நூலின் என்னுரை


                     
       சங்கத்திலிருந்து  சமகாலம் வரை கவிதைக்குள் விளையாட்டு ”  எப்படி இயங்கி வந்திருக்கிறது என்றறிந்து  கொள்ளும் விருப்பத்தில்   விளைந்ததே இந்நூல். மொழிக்குள் விளையாட்டு என்பது எது ? அது அங்கு எவ்விதம் தொழில்படுகிறது?   எந்த அளவில் விளையாட வேண்டும்?  என்பவை கொஞ்சம் சிக்கலான கேள்விகள். நகைச்சுவை, பகடி, சுவாரஸ்யம், வினோதம் இவற்றுடன் பரிட்சார்த்தமுயற்சி என்கிற ஒன்றையும் சேர்த்து, நான்  “விளையாட்டுஎன்று புரிந்து கொள்கிறேன். இவற்றில் சுவாரஸ்யம், வினோதம், பரிட்சார்த்த முயற்சி ஆகியவற்றுடன் கொஞ்சம் துடுக்குத்தனமும் சேர்ந்திருக்க வேண்டியது அவசியம்.  “ இரசம் ” மனத்துக்குத் தக்க மாறும் என்பதே அறிஞர் கூற்று. நான் விளையாட்டு என்று கொள்வது உங்களுக்கு அப்படி தோன்றாமல் இருக்கவும் வாய்ப்புண்டு.

   இது ஓரு முழுமையான ஆய்வுநூல் அல்ல. இப்பொருளைத் தீர ஆய்வு செய்ய வேண்டுமெனில் தமிழில் இது வரை எழுதப்பட்ட எல்லா கவிதைப் பிரதிகளையும் வாசித்திருக்க வேண்டும். அதற்கு இப்பிறவி போதாது. நீங்கள் ஒரு  “ சாம்பிள் சர்வேயைஎவ்வளவு பொருட்படுத்துவீர்களோ அவ்வளவு பொருட்படுத்தினால் போதும் இப்புத்தகத்தை. எனவே இந்நூல் விடுபடல்கள் உடையதே என்பதைத் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சங்கத்தை பொறுத்தமட்டிலும் அகநானுறும், நற்றிணையும் முக்கியமான விடுபடல்கள். இப்படி ஒவ்வொரு வகைமையிலும் ஏதோ ஒன்று விடுபட்டிக்கிறது. விடுபற்றவற்றில் விளையாட்டுகள் இருக்கலாம். அவை இன்னொரு ஆய்வாளனுக்கானது. இப்படி இன்னும் சிலர் இதில் இறங்கி விடுபடல்களை நிரப்பி முடித்தால் தமிழ்க்கவிதைக்குள் விளையாட்டின் இயங்குவிதம் குறித்த ஒரு முழுமையான சித்திரம் நமக்குக் கிடைக்கும். அந்த ஆய்வுகளுக்கான வாயிலாக இந்நூல் இருக்கட்டும்.

    பழந்தமிழ்க்கவிதைகளைப் பொறுத்தமட்டிலும் அதில் என்ன உள்ளது என்பதை சுருக்கமாக சொல்லி விட்டு, பிறகு அதில் விளையாட்டு எப்படி தொழில்படுகிறது என்று சொல்ல முயன்றிருக்கிறேன். பழந்தமிழ்கவிதைகளை கற்க ஆசை கொள்ளும் ஒரு புதுவாசகனை கருத்தில் கொண்டு இப்படி அமைத்திருக்கிறேன். வெறுமனே குறுந்தொகையின் 18 வது பாடல் என்று தகவல் தந்துவிட்டுப் போவதில் ஒரு இன்பமும் இருப்பதாக எனக்குப் படவில்லை. இம்முறையில் முதலில் அவன் குறுந்தொகையை குறித்து கொஞ்சமாகவேனும் அறிந்த கொள்கிறான். அதன் பிரமாதமான வரிகள் சிலவற்றை வாசித்து விடுகிறான். இப்போது குறுந்தொகை அவனுடையதும் ஆகி விடுகிறது. அவனுடைய குறுந்தொகையில் 18 வது பாடல் என்று சுட்டுவதில் ஒரு இணக்கம் வந்துவிடுகிறது. எனவே பாரதி வரை இம்முறையை கையாண்டிருக்கிறேன்.






    கவிதைதான் என் காதலி. வசனம் இடையில் வந்தவள். ஆனால் இடையில் வந்தவள் போலவே அவள் நடந்து கொள்வதில்லை. அவளும் சரிபாதி பங்கு கேட்கிறாள். எனினும் இந்நூல் கவிதை குறித்தான கட்டுரை என்பதால் இருவருக்குமிடையே தற்காலிக சமாதானம் நிலவுகிறது
.
   நண்பர் சீனிவாசன் ஒரு முறை கணையாழி வாசகர் சந்திப்பில் உரையாற்றுமாறு அழைத்த போது, சென்னை வரை சென்று “ கச்சேரி செய்வதில் உள்ள அலுப்பால் முதலில் மறுத்தேன். மறுத்த என்னை வருந்தி அழைத்துப் பேச வைத்தார். அப்போது ஒரு கட்டுரையாக எழுதியதை மேலும் மேலும் விரித்து எழுதி உருவானதே இந்நூல். எனவே நண்பர் சீனிவாசனுக்கு என் முதல் நன்றி.

     இந்நூல் சிறுகட்டுரையாக எழுதப்பட்ட காலத்தில் முதல் வாசகர்களாக அமைந்து  தன் கருத்தைப் பகிர்ந்து கொண்டவர்கள் எம்.கோபாலகிருஷ்ணன், பெருமாள்முருகன், சாம்ராஜ், ஷாலினி ஆகியோர்.  இவர்களுக்கு என் அன்பு.

   நூலின் செம்மையாக்கத்தில் என்னை விடவும் ஆர்வத்தோடு பங்கெடுத்த நண்பர் ஏ.வி.மணிகண்டனுக்கு எனது வந்தனங்கள்.

  கடும் வேலை நெருக்கடிகளுக்கிடையேயேயும் முன்னுரை அளித்திருக்கிற நாஞ்சில் நாடனுக்கு மிக்க நன்றி

  அட்டை வடிவமைப்பிற்கான முன்னேற்பாடுகளால் என்னை பீதியடையச் செய்த ரோஹிணி மணிக்கும், நூல் வடிவமைப்பில் பொறுமை காத்தமைக்காக சுபாவிற்கும் எனது நன்றிகள்.

    குறிப்பிட்ட ஒன்றைத் தீவிரமாகத் தேடுகையில் உண்மையில் அது துலங்கி வருகிறதா ? அல்லது மறைந்து கொள்கிறதா? எனக்கு ஒரு கட்டத்தில் எல்லாமே விளையாட்டு போலவும், எதுவுமே விளையாட்டில்லை என்பதாகவும் மயங்கிக் குழம்பி விட்டது. இந்தப் புத்தகத்தை முடித்து வைக்கும் இந்நாளில் அறிவின் நரகத்திலிருந்து எட்டிக்குதித்து தப்பி ஓடுகிறேன்.

   ”நகை என்கிற ஒரு விஷயம் மட்டும் இல்லையெனில், இந்நேரம் என் உடலில் பாதி கோணித்துக் கொண்டிருக்கும். ஒருவிதத்தில் அதற்கான நன்றிக்கடனாகவும் இத்தொகுப்பைக் கருதலாம்.
 

  எழுத்தைத் தவிர வேறு மகிழ்ச்சியில்லை என்பது உண்மையில் துரதிர்ஷ்டம். ஆனால், அதை அதிர்ஷ்டம் போலவே பாவித்துக் கொள்வது இதயத்திற்கு நல்லது.

                                      
                                             இசை

                                       இருகூர்  10/09/2017

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான