Skip to main content

தேனொடு மீன் – குகன்சரிதம்





இராமனாகிய தேனும், குகனாகிய மீனும் ஒருவரையொருவர் கண்டு , களிப்பெய்தி, கண்ணீர் பெருக்கி, ஒருவருள் ஒருவர் புக்கு, பிரிந்தும் பிரியா நின்றதைப் பேச விழைகிறது இக்கட்டுரை. இராமயணத்தை வாசிக்க இராம பக்தி அவசியமில்லை.பொதுவுடமைச் சித்தாதங்களில் இறுதி வரை உறுதிப் பிடிப்போடு இருந்த தோழர் ஜீவா கம்பனை விடவில்லை. இராமயணத்தின் வற்றாத இலக்கிய வளங்களை அவர் புறக்கணிக்கவில்லை. உடல் முழுக்க திருநீறு பூசி, கைகளில் சப்ளாக் கட்டைகளைக் கொடுத்து, அவர் இராமபஜனை செய்வதாக தி.மு.கழகத்தார் கேலிச்சித்திரம் தீட்டிய போதும் அவர் பின்வாங்கவில்லை. நாமும் பின்வாங்க வேண்டியடிதில்லை.“அறிஞர் காதற்கு அமை விருந்துதான்“ அவன். இராமன் பெயரால் நிகழும் குருதிப் பெருக்கிற்கும் அவனுக்கும் தொடர்பில்லை.அவன் கைகளில் இருப்பது அநீதிகளுக்கெதிரான கோதண்டமே என்றும், அது பர சமயத்து கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் இறங்கும் பிச்சுவா அல்ல என்றும் நம்புவது, தேவையற்ற மனத்தடைகளிலிருந்து நம்மை விலக்கி வைக்கும். தவிரவும் இராமகாதை வெறுமனே இராமகாதை மட்டுமல்ல.இந்தக் கட்டுரையின் நாயகனும் குகன்தான். இராமன் குகனை பெருமை செய்யும் ஒரு துணை மட்டுமே.

கம்பனில் குகப்படலம், கங்கைகாண் படலம் ஆகிய இரு படலங்களிலும் குகன் பிரதான பங்கு வகிக்கிறான். குகப்படலம் இராமனும், குகனும் கண்டு காதல் செய்வது. கங்கைகாண் படலம் பரதனை குகன் இராமனிடம் கொண்டு சேர்ப்பது. கங்கைகாண் படலத்தை அடுத்து வருவது “திருவடி சூட்டு படலம்” அதாவது பரதன் இராமனை நாடாள அழைத்து, அவன் மறுத்து விடவே, இராமனது திருவடிகளே நாடாளும் என்று சொல்லி அவனது பாதுகைகளைப் பெற்றுத் திரும்பும் படலம். இப்படலம் முழுக்கவும் குகன் உடன் இருக்கிறான். ஆனால் அவன் ஒரு சொல்லும் சொல்வதில்லை .பரதனும், இராமனும் சந்தித்துக் கொள்ளும் உணர்வுப் பெருக்கின் நாடகங்களிலிருந்து விலகியே நிற்கிறான். படலம் நிறைகையில் “கொண்டல் தன் ஆணையால் குகனும் போயினான்” என்கிற வரி வருகையில்தான் குகனும் பரதனோடு அங்கு இருந்தான் என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். பிறகு இராவண வதம் முடிந்து அயோத்தி திரும்புகையில், ஏற்கனவே குகனுக்குக் கொடுத்த வாக்கின் படி இராமன் குகனைத் திரும்பவும் சந்திக்கிறான்.இங்கு சில பாடல்களில் குகன் பேசப்படுகிறான். இது ”மீட்சிப் படலத்தில்” வருகிறது. கடைசியாக முடிசூட்டு விழா முடிந்து வீடணன் இலங்காபுரி செல்லும் போது, வழியில் குகனை தன் புஷ்பக விமானத்தில் ”ட்ராப்’ செய்து விட்டுப் போகிறான். “திருமுடி சூட்டுப் படலத்தில் “ குகன் ஏதும் பேசுவதில்லை. வெறுமனே இருக்கிறான். “விடை கொடுத்த படல”த்திலும் குகன் ஏதும் பேசுவதில்லை. இராமனே விடை கொடுத்து வழியனுப்புகிறான். இதுவன்றி குகன் ஒரு நினைவாகக் குறிக்கப்படும் பாடல்கள் சிலவுண்டு. “குகனொடு ஐவர் ஆனோம் ” என்று இராமன் வீடணனிடம் சொல்வது போல. ஆக, ஒட்டு மொத்த இராமயணத்திலும் குகனின் பிரதான இடம் என்பது இரண்டு படலங்கள் மட்டுமே. ஆயினும் குகன் குகப்பெருமானாகி இன்று ஆலயங்களில் வீற்றிருக்கிறார்.

கம்பனை ‘ மிகையில் நின்றுயர் நாயகன் ‘ என்று சொல்லலாம். ஆம் மிகை அவரது பிரதான அழகியல்களில் ஒன்றாக இருக்கிறது.ஆனால் அலுப்பூட்டாத, சுவாரஸ்யமான, பரவசம் கொள்ளச் செய்யும், தித்திக்கும் மிகை. இது கடவுளர்கள் திரியும் ஒரு புராணக்கதை என்கிற எண்ணம் நம் மனதில் இருந்தால், மிகை போன்ற நவீன விமர்சனக் கூறுகளால் நம் வாசிப்பு தொந்தரவுக்குள்ளாவதில்லை. எனவே நாம் கம்பனை விட்டு விலகுவதில்லை.மாறாக அவனது விதவிதமான மிகைகளில் நாம் கட்டுண்டு கிடக்கிறோம். சீதையை ஒரு பேதைப் பெண்ணாகக் காட்டி வேண்டிய தருணத்தில் கூட, அவரால் பேதமையின் உச்சத்தில் மிகையோடே பேச முடிகிறது.

தங்களை காட்டில் விட்டுவிட்டு அயோத்தி திரும்பும் சுமந்திரன் எனும் அமைச்சரிடம் சீதை கூறுகிறாள்...

அன்னவள் கூறுவாள் ; அரசர்க்கு , அத்தையர்க்கு
என்னுடை வணக்கம் முன் இயம்பி , யான் உடைப்
பொன்நிறப் பூவையும் கிளியும் போற்றுக என்று
என்னுடை எங்கையர்க்கு உணர்த்துவாய் என்றாள்.

அரசர்க்கும் அத்தையர்க்கும் என்னுடைய வணக்கங்களை முதலில் தெரிவியுங்கள். பிறகு நான் ஆசையாக வளர்த்து வந்த கிளியையும், மைனாவையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளும் படி என் தங்கையரிடம் சொல்லுங்கள்

இந்தக்கவிதைக்கு அரசர் அத்தையெல்லாம் முக்கியமில்லை. மைனாவும், கிளியும் தான் முக்கியம். இந்தச்சீதை தெய்வமில்லை..நெருப்பில் குளித்தெழுபவளில்லை .. சாதாரண மனுஷி .. பேதைப் பெண். தன் வாழ்வே புயலுடை மரமாய் அடிபெயர்ந்து கிடக்கையில் எவளாவது மைனாவையும், கிளியையும் கேட்பாளா? கேட்பாள்... கம்பனின் ஜானகி கேட்பாள்.

குகனது பாத்திரம் முழுக்க இந்த மிகை மிளிர்ந்த வண்ணமே இருக்கிறது

“அம்பிலே சிலையை நாட்டி, அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த
தம்பிரான் என்னத் தானும் தமிழிலே தாலை நாட்டிக்
கம்பநாடு உடைய வள்ளல் கவிச்சக்ரவர்த்தி பார்மேல்
நம்பு பாமாலை யாலே நரர்கும் இன்று அமுதம் ஈந்தான்“

என்கிறது கம்பனைக் குறித்த பழம்பாடல் ஒன்று.

பாற்கடலில் மேருமலையை நாட்டி தேவர்களுக்கு அன்று அமுதத்தை கடைந்தெடுத்தளித்த தம்பிரான் போல, தமிழிலே தன் தாலை நாட்டி மனித்தப் பிறவிகளுக்கும் அமுதத்தை அளித்தான் கம்பன் என்கிறது பாடல். ஆம்.. தமிழ்ச்சுவை தெரியுமெனில், அமுதுதான் அது.



குகன் அறிமுகமாகும் போதே ” குளகச்செய்யுளோடு “ அறிமுகம் ஆகிறான். குளகம் என்பது பாடலின் பொருள் ஒரு பாடலில் முடிந்து விடாமல், அடுத்தடுத்த பாடல்களிலும் தொடர்ந்து சென்று, ஏதேனும் ஒரு பாடலில் முடிவது. குகனை அறிமுகம் செய்யும் போதே ஒன்பது பாடல்களால் ஆன குளகத்தால் அறிமுகம் செய்கிறான் கம்பன். “ ஆய காலையின், ஆயிரம் அம்பிக்கு நாயகன், போர்க்குகன் எனும் நாமத்தான் “ என்று முதல் பாடலில் தொடங்கும் விவரிப்பு, அவனது உருவம், உடை, பேச்சு, பார்வை என்று பலவற்றையும் பேசிவிட்டு 9 வது பாடலில், “ ஒருங்கு தேனொடு மீன் உபகாரத்தன், இருந்த வள்ளலைக் காண வந்து எய்தினான் “ என்று முடிகிறது. விரிவாக வர்ணிப்பதற்கு இந்தக் குளகம் உதவுகிறது. கம்பராமாயணத்தில் பாடப் பட்ட நெடிய குளகம் அதன் நாயகன் இராமனைப் பற்றியதல்ல. இராவணனைப் பற்றியதே.

குகன் இராமனைக் காணச் செல்கிறான். வெளியே காவல் செய்யும் இலக்குவன் குகனிடம் யாரென்று வினவி, அவனை அங்கேயே நிற்கச் செய்துவிட்டு, உள்ளே சென்று இராமனிடம் சொல்கிறான்..


நிற்றி ஈண்டு என்று, புக்கு
நெடியவன் – தொழுது, தம்பி,

” கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன்,
நிமிர்ந்த கூட்டச் சுற்றமும், தானும்
உள்ளம் தூயவன் ; தாயின் நல்லான்;
எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை ;
குகன் ஒருவன்” என்றான்

( 1964 )

குகனைப் பற்றி இராமனுக்கோ, இலக்குவனுக்கோ எதுவும் தெரியாது. ஆயினும் குகனை இராமனிடம் அறிமுகம் செய்யும் போதே “ தாயின் நல்லான் “ என்கிறான் இலக்குவன். இது குறித்து அ.ச. தன் “தம்பியர் இருவர்” நூலில் நிறைய எழுதியிருக்கிறார். குறை சொல்ல முடியாத தர்க்கங்கள். அப்பகுதியை இப்படி முடிக்கிறார்...


“இதனை விடச் சிறப்பான செயல் என்னவெனில், இலக்குவன் இவ்வுண்மையை கண்டுபிடித்ததாகும்.எத்துணை அறிவாற் சிறந்தவர்களையும் பிறருடைய புறத்தோற்றம் ஓரளவு ஏமாற்றி விடுகிறது. மிகச் சிறந்த கூர்த்த மதியினரே இப்புறக்காட்சியால் மயங்கிவிடாமல் , உள்ளே ஊடுருவி நோக்கி, உண்மை காண்கின்றனர்.அத்தகைய கூர்த்த மதியினருள்ளும் தலைசிறந்தவனாய் இருக்க வேண்டும் இலக்குவன் என்று உறுதியாகக் கூறலாம்...... குகனது புறத்தோற்றம் கவனிக்கப்பட வேண்டாதது என்பதைச் சுட்டிக் காட்டுவான் போல இளையவன் இராமனிடம் ‘தாயினும் நல்லான் ‘ என்று கூறுகிறான் “

எனக்கு இப்படித் தோன்றியது... இராமகதை ஏற்கனவே சமூகத்தில் புழங்கி வரும் ஒன்றுதான். குகன் “ நல்லான் “ என்பது எல்லோர்கும் தெரியும்.கம்பனது வேலை அவன் எவ்வளவு நல்லவன் என்று சொல்வது மட்டும்தான்.எனவே “தாயின் நல்லான் “ என்று ஒற்றைச் சொல்லில் சரியாகச் சொல்லிவிட்டுக் கடந்தான். இப்படிச் சொல்வது கம்பனைக் குறைப்பதாகுமா? அவனது அடியார்கள் கோபித்துக் கொள்வார்களா ? எனக்குத் தெரியவில்லை.

குகனது பாத்திரம் இன்றும் நின்று நிலைப்பதற்குக் காரணம், அவன் சுத்த சைவனை அசைவத்தின் வழியே அன்பு செய்தான் என்பதால்தான். அறிவார்த்தம் கூடிய அன்பைக் காட்டிலும் பேதமை நிரம்பிய அன்பு , எளிய மனிதர்களை மட்டுமல்ல கற்றோரையும் உருக்கி விடவல்லது. நான் தினமும் பணிக்குச் செல்லும் வழியில் “குகன் பஞ்சர் ஒட்டும் கடை“ உள்ளது. “ நல்லதுதான்.. குகன் ஒட்டினால் விலகவே விலகாதல்லவா? கட்டாயமாக போட்ட இடத்திலேயே போகதல்லவா?” என்று நினைத்துக் கொள்வேன்.ஆனால் வீடணன் பஞ்சர் ஒட்டுவதாகவோ, போண்டா விற்பதாகவோ நான் எங்கும் கண்டதில்லை.

பல பட்டிமன்றங்களில் சொல்வது போல் உண்மையில் இராமன் மீனை உண்ணவில்லை. உண்டது போல ஒரு கணக்கு அவ்வளவுதான்.

‘இருத்தி ஈண்டு’ என்னலோடும்
இருந்திலன்; எல்லை நீத்த
அருத்தியன், தேனும் மீனும்
அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல்
திருஉளம்?’ என்ன, வீரன்
விருத்த மாதவரை நோக்கி முறுவலன்,
விளம்பலுற்றான் ( 1966)

அமரச் சொன்னதற்கு அமராமல் எல்லையற்ற அன்பாளனாகிய குகன் “ தேனையும் மீனையும் அமுதினுக்கு அமைவதாகத் திருத்திக் கொணர்ந்துள்ளேன். உன் திருவுளக் கருத்தென்ன? என்று கேட்டு நிற்க, இராமன் சுற்றி இருந்த மாதவ முனிவர்களை நோக்கி முறுவலித்து விட்டு பின் பேசத் துவங்கினான்

இராமனின் பதில் அடுத்து வருகிறது... கண்ணீர் துளிர்க்கச் செய்யும் பாடல்...


‘அரிய, தாம் உவப்ப, உள்ளத்து
அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால்,
அமிழ்தினும் சீர்த்த அன்றே?
பரிவினின் தழீஇய என்னின்
பவித்திரம்; எம்மனோர்க்கும்
உரியன; இனிதின் நாமும்
உண்டனெம் அன்றோ?’ என்றான். ( 1967)

"அரியவை ... மகிழ்ச்சி ... உள்ளத்து அன்பினால் அமைந்த காதலால் கொண்டு வரப்பட்டவை என்பதால் இவை அமிழ்தினும் இனிய அன்றோ? அன்பினால் கொணர்ந்த என்றால் எதுவும் தூய்மையே ; எம்மனோர்க்கும் உரியதே.எனவே இதை நாமும் மகிழ்ந்து உண்டது போலவே ஆயிற்று" என்றான்.

கம்பனின் முதநூலான வால்மீகத்தில் குகன் மீனைக் கொண்டு வருவதில்லை. அவன் அப்பம், அன்னம், பாயசத்தோடே வருகிறான். துளிசிதாசர் ராமாயணத்திலோ தூய பழங்கள், கிழங்குகளோடு வருகிறான். கம்பனில்தான் மீன் வருகிறது. கம்பன் இங்கு ஒரு நாடகத்தைத் துணிந்து உருவாக்கி அதைத் திறம்பட, அழகுறக் கையாண்டிருக்கிறான் .ஆம்.. ’ தமிழிலே தாலை நாட்டி நரர்க்கும் அமுது ஈந்தான் ’



இராமன் குகனுக்கு விடையளித்து நாளை காலையில் கங்கையைக் கடக்க நாவாய் கொண்டு வரச்சொல்கிறான்.ஆனால் குகன் அங்கிருந்து அகன்று விடாமல் விடிவளவும் இலக்குவனோடு சேர்ந்து இராம சீதைக்கு காவல் புரிகிறான்

தும்பியின் குழாத்தின் சுற்றும் சுற்றத்தன், தொடுத்த வில்லன்,
வெம்பி வெந்து அழியாநின்ற நெஞ்சினன், விழித்த கண்ணன்
தம்பி நின்றானை நோக்கி, தலைமகன் தன்மை நோக்கி,
அம்பியின் தலைவன் கண்ணீர் அருவி சோர் குன்றின் நின்றான்.
( 1975 )

அம்பிகளின் தலைவனான குகன், வில்லைத் தயார் நிலையில் தொடுத்து வைத்தபடி, வெம்பி அழும் நெஞ்சினோடு, இரா முழுதும் துஞ்சாத கண்ணனாகி காவல் செய்தான். அரச போகங்களை விட்டுவிட்டு இப்படி நைந்து வருந்தும் இராமனையும், அவன் நித்திரை கொள்ள ஏதுவாய் தன் நித்திரையைத் துறந்து நிற்கும் இலக்குவனையும் மாறி மாறிக் கண்டு கண்ணீர் அருவி கொட்டும் மலை போல் நின்றான்.

( தும்பியின் குழாத்தின் சுற்றும் சுற்றத்தன் – யானைக் கூட்டத்தை ஒத்த சுற்றத்தை உடையவன், குகன் )

குகன் மூவரையும் நாவாயில் செலுத்துகையில் இராமனும் சீதையும் நீர் இறைத்து விளையாடி வருகிறார்கள்..


“பால் உடை மொழியாளும், பகலவன் அனையானும்,
சேலுடை நெடு நல்நீர் சிந்தினர், விளையாட “ ( 1987 )

அதாவது இருவரும் ஒருவர் மீது ஒருவர் நீர் இறைத்து காதல் விளையாட்டு விளையாடி இருக்கிறார்கள்.கூடவே இலக்குவன் என்கிற ஜீவன் ஒத்தையாளாய் இருப்பதை மறந்து விட்டு. நானாக இருந்திருந்தால் நாவாயை லைட்டாக நீருக்குள் அழுத்தி இருவரின் ஆட்டத்தையும் அடக்கி இருப்பேன் . ஆனால் இருந்தது இலக்குவன். அவன் மகிழவே செய்திருப்பான். ஒரு முறை இராமன் இலக்குவனை நோக்கிச் சொல்கிறான் ... “ இடர் உனக்கு இழைத்தேன் நெடுநாள் “ என்று. இது பேரிடர் அல்லவோ அய்யனே?

குகன் மூவரையும் தம்முடனே தங்க வலியுறுத்துகிறான். பிறகு தானும் அவர்களோடு வருவதாக மன்றாடுகிறான். இராமன் அவனைத் தேற்றி ‘ நாம் சகோதரர் ஆகி விட்டதால், உன் சுற்றம் என் சுற்றம் ஆகிவிட்டது. எனவே என் சுற்றத்தை விட்டு நீங்காமல் அவர்களை காத்து நில் ‘ என்று இனிதின் ஏவி விட்டுப் பிரிகிறான். திரும்பி வருகையில் அவசியம் உன்னைச் சந்திப்பேன் என்று உறுதியும் தருகிறான்.

இதற்கிடையில் கேகய நாட்டிலிருந்து திரும்பிய பரதன் நடந்ததையெல்லாம் அறிந்து பதைபதைக்கிறான். ‘ எல்லாவற்றையும் அறிந்த பிறகும் உன் வாயை கிழிக்காமல் இருப்பதால், நானும் இந்த அரசாட்சியை ஆண்டவனாகவே ஆகிறேன் அன்றோ ? ‘ என்று தாயைச் சீறி, தன்னையும் நோகிறான். இராமனை திரும்ப அழைத்து வந்து முடி சூட்டுவேன் என்று சொல்லிவிட்டு, அவனைத் தேடிக் கிளம்புகிறான். இடையில் கங்கை குறுக்கிடுகிறது.அங்கு ஆயிரம் அம்பிக்கு நாயகனான குகனும், பரதனும் சந்தித்துக் கொள்கிறார்கள். பரதன் சேனைகளோடு இராமன் மீது போர் தொடுக்க வந்திருப்பதாக எண்ணி குகன் கொதித்தெழுகிறான். “எலி எலாம் இப்படை : அரவம் யான் “ என்று கொக்கரிக்கிறான்.

இப்படியெல்லாம் சினம் மிகுத்து எழுபவன் பரதனைக் கண்ட மாத்திரத்தில் தன் எண்ணங்கள் பிழை என்பதை உணர்ந்து கொள்கிறான். மரவுரிக் கோலத்தில், நகை இழந்த முகத்தோடு, கல் கனியக் கனிகின்ற துயரோடு காணப்படுகிறான் பரதன்.

அடுத்த பாடல் இது..

நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்;


அயல் நின்றான் தம்பியையும் ஒக்கின்றான்;
தவவேடம் தலைநின்றான்;
துன்பம் ஒரு முடிவு இல்லை;
திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின் பிறந்தார்
இழைப்பரோ பிழைப்பு?‘‘ என்றான். ( 2332)

பரதன் என் நாயகன் இராமனையே ஒக்கின்றான். அவன் அருகில் நிற்கும் சத்ருக்கனனும் இராமனின் உயிர்த்துணையான இலக்குவனை ஒக்கின்றான். தவ வேடம் தாங்கியிருக்கிறான். முடிவில்லாத் துயரோடு இராமனது திசை நோக்கித் தொழுதபடி நிற்கிறான். எம்மெருமான் பின்பிறந்தோர் எப்படிப் பிழை செய்வார்?

இராமனைக் காட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்ற தசரதனின் அமைச்சரான சுமந்திரன்தான் குகன் யார் என்பதை பரதனிடம் விளக்குகிறார்.கதைப்படி குகன் –இராமன் சந்திப்பு நிகழும் முன்பே சுமந்திரன் அயோத்தி திரும்பி விடுகிறான்.அவன் குகனைக் கண்டதில்லை. பிறகெப்படி “ உங்கள் குலத் தனி நாதற்கு உயிர்த் துணைவன் “ என்று சொல்ல முடியும்? இந்தச் சந்தேகத்தை எழுப்பிக் கொண்டு “கம்பன் அறநிலைப் பதிப்பு” இப்படி பதில் சொல்கிறது...

“அமைச்சராவார் அனைத்தையும் உணர்தல் வேண்டும். ஆதலின் இராமனது பயணவழியில் கங்கையைக் கடக்கின்ற வரை நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் அவன் முன்னரே அறிந்திருத்தலில் வியப்பு இல்லை என அறிக”

சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனருக்கு லாஜிக் ஓட்டை விடும் சலுகையுண்டு என்பதாக நாம் இதை எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.


பரதன் குகனின் திருவடிகளில் விழுகிறான்,இருவரும் ஒருவரையொருவர் வணங்கித் தழுவிக் கொள்கிறார்கள். பரதன் தான் வந்த நோக்கத்தைச் சொல்கிறான். அது கேட்டு நெக்குருகும் குகனின் கூற்றுகள் இவை..


தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை
தீவினை என்ன நீத்து, சிந்தனை முகத்தில் தேக்கி
போயினை என்ற போழ்து , புகழினோய் ! தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியின் அம்மா! ( 2337)
தாய் தன் வரத்தின் மூலம் தந்தையிடமிருந்து பெற்றுத்தந்த அரும்பெரும் அரசாட்சியை “ தீது” என்று விடுத்து, குழப்பமும் வருத்தமும் கலந்த முகத்தோடு இராமனைக் காண இப்படிக் காடு வந்து நிற்கின்றாய் எனில், ஆயிரம் இராமர்கள் சேர்ந்து வந்தாலும் அவர்கள் உன் ஒருவனுக்குச் சமமாவரோ தெரியவில்லை ?

என் புகழ்கின்றது, ஏழை எயினனேன்? இரவி என்பான்

தன் புகழ்க் கற்றை, மற்றை ஒளிகளைத் தவிர்க்குமா போல்
மன்புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம்
உன் புகழ் ஆக்கிக் கொண்டாய் உயர் குணத்து உரவுத் தோளாய்! ( 2338 )

ஏழை வேடன் நான் எப்படிப் புகழ்வேன் ? இரவி தன் பொன்னொளிப் பிரகாசத்தால் மற்ற சின்னஞ்சிறு ஒளிகளை மறைத்து விடுவதைப் போலே, உன் குலத்தில் தோன்றிய எல்லா அரசர்களது அத்தனை பெருமைகளையும், இப்படி நாடு விடுத்து காடு வந்த தன்மையால், உன் புகழுக்குள் ஒடுங்கச் செய்து விட்டாய்.

மூவரும் காட்டில் எங்கு தங்கினர் ? எப்படி உறங்கினர்? என்றெல்லாம் கேட்டு கேட்டு கண்ணீர் சிந்துகிறான் பரதன். அப்போது இலக்குவன் குறித்து குகன் உரைக்கும் பாடல் ஒன்று பிரபலமானது.அறிஞர்கள் அடிக்கடி எடுத்தாள்வது. இலக்குவனைப் பற்றிய பேச்சு, இந்தப் பாட்டின்றி முடியாது. முடிந்தால் அது நல்ல பேச்சாகாது.

‘அல்லை ஆண்டு அமைந்த மேனி
அழகனும் அவளும் துஞ்ச,
வில்லை ஊன்றிய கையோடும்,
வெய்து உயிர்ப்போடும், வீரன்,
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் !-
கண்கள் நீர் சொரிய, கங்குல்
எல்லை காண்பு அளவும் நின்றான்;
இமைப்பிலன் நயனம்’ என்றான். ( 2344 )

கருத்த மேனியியனான இராமனும், சீதையும் நிம்மதியாக நித்திரை கொள்ளும் பொருட்டு, வாயிலில் வில்லை ஊன்றிக் கொண்டு, தன் தலைவனின் துயர நிலைக்காக பெருமூச்செறிந்தவனாய், விடாது கண்ணீர் சொரிந்தபடி விடிவளவும் துஞ்சாது காவல் காத்து நின்றான்.

(அல்லை – இருள், கருப்பு : கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் ! – பரதனை விளித்தது )

குகன் பரதனையும், அவன் சேனைகளையும் கங்கையைக் கடக்க உதவுகிறான்.பரதன் தன்னுடன் வந்த அன்னையர் மூவரையும் குகனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறான். பரதன் இராமனை அடைகிறான்.” திருவடி சூட்டு படலம்” துவங்குகிறது. இராமன் திரும்பவும் நாட்டிற்கு வர மறுக்கிறான். எனில், அவன் திருவடிகளே அரசாளும் என்று சொல்லி பரதன் இராமனின் பாதுகைகளைப் பெற்று நாடு திரும்புகிறான். இப்படலம் முழுக்க குகன் ஒரு பேச்சும் பேசுவதில்லை. ஆனால் பரதனோடு இருக்கிறான்.

“வடதிசை வரும் அந்நாள் நின்னுழை வருகின்றேன்” என்று சொல்லி குகனைப் பிரிந்து சென்ற நாயகன் இராவண வதம் முடித்துத் திரும்புகையில், சொன்ன சொல்லை சுமாராகக் காப்பாற்றுகிறான். அதாவது குகனின் இருப்பிடத்திற்கு அருகில் இருக்கும் பரத்துவாச முனிவரின் ஆசிரமத்திற்கு வருகிறான். குகன் அங்கு போய் இராமனைச் சந்திக்கிறான். அங்கு ஒரு பிரமாதமான பாடல் உண்டு. இராமன் குகனைக் கண்டு நலம் விசாரிக்கிறான். மக்களும், மனையும் நலம் தானே என்று கேட்கிறான். அதற்கு குகனது விடை...

'அருள் உனது உளது, நாயேற்கு; அவர் எலாம் அரிய ஆய
பொருள் அலர்; நின்னை நீங்காப் புணர்ப்பினால் தொடர்ந்து போந்து
தெருள்தரும் இளைய வீரன் செய்வன செய்கலாதேன்;
மருள் தரு மனத்தினேனுக்கு இனிது அன்றோ, வாழ்வு மன்னோ? ( 10248 )

நலமா ? என்கிற கேள்விக்கு ‘ உனது அருளால் நலம்’ என்று சம்பிரதாயமாகச் சொல்லி விடுகிறான் முதலில். பிறகு உண்மையைச் சொல்கிறான். உன்னை விட மக்களோ, மனையோ அவ்வளவு அரியவை அல்ல. எப்போதும் உன்னை விட்டு நீங்காது , உன்னோடே தங்கி, உனக்குப் பணிவிடைகள் செய்ய வாய்க்காத இவ்வாழ்வு எப்படி இனிக்கும்? என்று கேட்கிறான். அப்படிக் கூடவே இருக்கும் பேறு இலக்குவனைப் போல தனக்கு வாயக்கவில்லையே என்று வருந்துகிறான்.

‘நீ இப்படிச் சொல்லலாகாது.. போய் இனிது இரு...’ என்று சொல்லிவிட்டு இராமன் அயோத்தி புறப்பட்டுவிடுகிறான். இராம பட்டாபிஷேகத்தின் திருக்கோலக் காட்சியைக் கண்டு இன்புறும் பொருட்டு வீடணன், சுக்ரீவன், அனுமன் போன்றோர் இராமனோடே அயோத்தி செல்கிறார்கள். குகன் அவர்களோடு செல்வது போல் தெரியவில்லை.ஆனால் முடிசூட்டு விழாவில் குகனும் இருக்கவே செய்கிறான். முடிசூட்டு வைபவம் முடிந்ததும், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே உரிய பரிசளித்து விடைதருகிறான். அனுமனுக்கு விடையளிக்கும் தருணம் நிஜமாகவே காவியத் தருணம்தான்.

குகன் முறை வருகிறது...

சிருங்கபேரம் அது என்று ஓதும் செழு நகருக்கு இறையை நோக்கி,
'மருங்கு இனி உரைப்பது என்னோ, மறு அறு துணைவற்கு?' என்னா,
கருங் கைம் மாக் களிறும், மாவும், கனகமும், தூசும், பூணும்,
ஒருங்குற உதவி, பின்னர் உதவினன் விடையும் மன்னோ. ( 10362)

சிருங்கபேரம் எனும் நகருக்கு தலைவனான குகனை நோக்கி, ”மாசற்ற துணைவனே! இனி உனக்கு நான் என்ன உரைப்பது?“ என பேச்சற்றுக் கலங்கி, களிரும்,மாவும் தந்து, ஆடையும், ஆபரணங்களும் உதவி, கூடவே விடையும் தந்து உதவினான்.

“உதவினன் விடையும் மன்னோ..” என்கிற சொற்றொடர் பொருள் பொதிந்தது என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆம்..இங்கு நாய்க் குகனுக்கு அவசியம் உதவி தேவை.ஏனெனில் இராமன் பால் அவன் செலுத்திய அன்பு கட்டற்றது. காரண, காரியங்களுக்குள் அடங்காதது. அறிவு,ஆராய்ச்சிகளுக்கு அப்பால் நிற்பது. ‘ உன்னை நோக்கின் மனையும், மக்களும் ஒரு பொருட்டல்ல’ என்று சொன்னவன் அல்லவா அவன்? இக்கொடும் பிரிவிலிருந்து அவனை ஆற்றுவிக்க நிச்சயம் ஒரு உதவி தேவை. அதை இராமனே செய்தான் என்று சொல்வது நயமிக்கது. அவனைத் தவிர வேறு யாராலும் செய்யவும் முடியாதல்லவா?

சாதாரண சொற்களின் மீது கூடுதலான அர்த்தங்களை வலிந்து ஏற்றுகிறேனா? எனவே உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அதனால் என்ன? குகப்பெருமானுக்கு நிச்சயம் பிடிக்கும்.

இராமன் பால் இலக்குவனும், பரதனும் செலுத்திய அன்பில் இரத்தபந்தமும் சேர்ந்திருக்கிறது. விடணனும், சுக்ரீவனும் காட்டிய அன்பில் நன்றிக்கடனும் கலந்திருக்கிறது. ஆனால் குகனின் அன்பில் அன்பன்றி வேறொன்றுமில்லை. அப்படித்தான் அமைக்கப்பட்டிருக்கிறது அப்பாத்திரம்.

“கங்கையைச் சேர்ந்த கழுநீரும் கங்கை ஆகிறது. இராமன் பெயரைச் சொல்லும் சண்டாளன், புலையன், சாதியிலிருந்து வெளியேற்றப் பட்டவன், வெளிநாட்டான், காட்டுமிராண்டி, வேடன் அனைவரும் புனிதம் பெறுகின்றனர். அவ்வாறே குகனும் உயர்ந்தான் “ என்கிறார் துளசீதாசர். கம்ப இராமாயணத்தில் நிலைமை வேறு. கம்பனில் “நாய்க்குகன்” என்றும், “நாயடியேன்” என்றும் குகன் தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் போதும், அது அவனது “ இழிகுலப் பிறப்பு “ குறித்த கழிவிரக்கமாக வெளிப்படுவதில்லை. கம்பனின் கூற்றாகவும் அப்படி எங்கும் காணக் கிடைப்பதில்லை. மாறாக அதில் ஒரு பக்தன் கடவுளிடம் காட்டும் “ சரணாகதி” தன்மையே வெளிப்படக் காண்கிறோம். மேலும், பரதனை எதிர்த்துக் கிளம்பும் ஒரு தருணத்தில் “ மன்னவர் நெஞ்சினில் வேடர் விடும் சரம் வாயாவோ? ” என்று கூடக் கேட்கிறான் குகன். அதாவது பரதன் மன்னர் குலம்... குகன் வேடர் குலம்.. அதனாலென்ன? மன்னரின் நெஞ்சிலே வேடனின் அம்பு நுழையாமலா போய்விடும்? என்று கலகக்குரல் எழுப்புகிறான்.

வால்மீகத்தில் குகன் தோழன் மட்டுமே. தம்பியில்லை. ‘ ஐவரெல்லாம்’ ஆவதில்லை. கம்பனிலோ இராமன் தம்பியாக ஏற்றுக் கொள்வது மட்டுமின்றி, பரதனும் “ என் முன் “ என்று ஏற்றுக் கொள்கிறான். கோசலையும் “ நீவிர் ஐவீரும் ஒருவீர் ஆய் , அகல் இடத்தை நெடுங்காலம் அளித்தீர் “ என்று ஏற்கிறாள். அதாவது ” இந்த அகன்ற பூமியை நீங்கள் ஐவருமாகச் சேர்ந்து ஆளுங்கள்” என்று குகனை ஆசீர்வதிக்கிறாள்.

குகன் சரிதத்திலிருந்து எனக்குப் பிடித்த மேலும் சில பாடல்களோடு இக்கட்டுரையை நிறைவு செய்யலாம் என்று நினைக்கிறேன்.

குகன் பிரிவுத்துயர் தாளாது அரற்ற அது கேட்டு இராமன் கூறியது...


துன்புளது எனின் அன்றோ சுகமுளது ? அது அன்றிப்
பின்புளது இடைமன்னும் பிரிவுளது என உன்னேல் ;
முன்பு உளெம், ஒரு நால்வேம், முடிவுளது என உன்னா
அன்புள , இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்

துன்பமெனும் ஒன்று இருந்தால் அன்றோ சுகம் எனும் ஒன்றிருக்கும். அந்தச் சுகம் நிச்சயம் நமக்குண்டு. எனவே இடையே நேரும் இப்பிரிவை எண்ணி வருந்தாதே. முன்பு நாங்கள் நால்வர் என்றிருந்தோம். அன்பு அத்தோடு நிற்க விடவில்லை. இன்று உன்னையும் ஒருவனாக்கி ஐவர் என ஆனோம்.

மேற்கொண்டு காடு செல்லாமல் தன் இடத்திலேயே தங்கி விடச் சொல்லி குகன் இராமனை வலியுறுத்தியது... தன் நாட்டுவளம் உரைத்தது..

தேன் உள ; தினை உண்டால் ; தேவரும் நுகர்தற்காம்
ஊன் உள : துணை நாயேம் உயிர் உள ; விளையாடக்
கான் உள ; புனல் ஆடக் கங்கையும் உளது அன்றோ?
நான் உளதனையும் நீ இனிதிரு ; நட எம்பால்.

”தேன் உள. தினை உள. தேவரும் விரும்பத்தக்க உணவுள. துணை நாயேம் உயிர் உள. விளையாடக் கான் உள. புனலாடக் கங்கையும் உளது. நான் உள்ளமட்டும் நீ மகிழ்ந்திரு. நட என்னோடு !

பரதன் இராமனை எதிர்த்துப் போர் புரிய வந்திருக்கிறான் என்றெண்ணிய குகன் தன் சேனைகளுக்கிடையே ஆற்றிய உரை..

ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ?
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ?
தோழமை என்றவர் சொல்லிய சொல் ஒரு சொல்லன்றோ?
ஏழைமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ? ( 2317 )

ஆழமும், அலைகளும் கொண்ட இந்த கங்கையத் தாண்டி அவர்கள் போய் விடுவார்களா என்ன? பெரும்வேழப்படை கண்டு அஞ்சி விலகினால் நான் வில்லாலனா என்ன? தோழமை என்றவர் சொல்லிய சொல்லை அர்த்தமற்ற வெற்றுச் சொல்லாக்கி விடுவேனோ? அப்படி பரதனை இக்கங்கையை கடக்க விட்டால், இதற்கு இந்த வேடன் இறந்திருக்கலாமே என்றெனை உலகம் ஏசாதோ?

குகனது உருவ வர்ணனையாக ஒரு பாடல் ...


பெண்ணை வன் செறும்பின் பிறங்கிச் செறி
வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன் கையன்,
கண் அகன் தட மார்பு எனும் கல்லினன்,
எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான். ( 1958 )

பனைமரத்தின் வலிய சிறாம்பு போன்று அடர்ந்து கறுத்த மயிர்களைக் கொண்ட கையினன். விசாலமான மார்பு என்கிற கல்லைக் கொண்டவன். எண்ணெய்ப் பூச்சின் பளபளப்பான இருள் நிறத்து மேனியன்.

‘கல் போன்ற மார்பு ‘ என்கிற அரதப் பழசை ‘ மார்பு போன்ற கல் ‘ என்று சற்றே மாற்றி வைக்கையில் கொஞ்சம் புதிதாகி விடுவதைக் காண்கிறோம்.

“அதாவது மார்பு என்ற பெயருடன் மார்பு இருக்க வேண்டிய இடத்தில் கல் இருந்தது என்று கூறுமுகத்தான் கம்பன் நம்முடைய மனத்தில் ஒரு தனிமதிப்பை உண்டாக்கி விட்டான் “ என்று இவ்வரிகளை குறித்து எழுதுகிறார் அ.ச.

குகனும் பரதனும் ஒருவரையொருவர் வணங்கித் தழுவிக் கொள்ளும் பாடல்...

"வந்தெதிரே தொழுதானை வணங்கினான், மலர் இருந்த
அந்தணனும் தலை வணங்கும் அவனும் , அவனடி வீழ்ந்தான்
தந்தையினும் களிகூரத் தழுவினான் - தகவுடையோர்
சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான்".

தன்னைத் தொழுது நிற்கும் பரதனை குகனும் தொழுதான். திருமாலின் உந்தித் தாமரையில் வீற்றிருக்கும் பிரம்மதேவனும் போற்றி வணங்கும் சிறப்பை உடைய பரதன், குகனின் அடிகளில் விழுந்தான். விழுந்த அவனை எடுத்துத் தந்தையினும் களிகூரத் தழுவுகிறான் குகன். அப்படித் தழுவும் குகன் யார்? சான்றோர் சிந்தையிலும் சென்னியிலும் வீற்றிருக்கும் கீர்த்தியோன்.

“சிந்தையிலும், சென்னியிலும்” என்கிற வரி நயமானது. என்னய்யா பெரிய நயம்? “உள்ளும் புறமும்” ... அவ்வளவுதானே ? என்று கேட்பீர்களெனில், உங்களுக்கு என் வந்தனங்கள் !

கம்பனின் கவித்திறங்களையும், அவன் சொற்களின் தாள லயங்களையும், எப்படியேனும் சென்று தொட்டு விடவேண்டும் என்பதற்காக, என் “உரைகள்” கடும் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டி இருந்தது. கம்பநேசனாக பெருமிதத்தையும், எழுத்தாளனாக சோர்வையும் அளித்த அனுபவம் அது. அப்போது எடுத்த புகைப்படங்களை , ஒரு எழுத்தாளனாக, எப்போதும் நான் காண விரும்ப மாட்டேன்.

குகன் சரிதம் தொடர்கிறது ; இசையனார் வியாக்யானம் முற்றிற்று.

உதவிய நூல்கள் :
1. கம்ப ராமாயணம் – முதன்மைப் பதிப்பாசிரியர் ; அ.ச.ஞானசம்பந்தன் – கம்பன் அறநிலை, கோவை
2. தம்பியர் இருவர் – அ.ச.ஞானசம்பந்தன் – சந்தியா பதிப்பகம்
3. காப்பிய இமயம் – என்.வி.நாயுடு – சாந்தி டிரஸ்ட், கோவை

நன்றி : உயிர்மை - பிப்ரவரி - 2018 





Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம